எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்… 
ன்ன சுவாரஸ்யமான முடிச்சு.

மொழிபெயர்ப்புக் கதை
ஒன்பது மைல் நடை
ஹாரி கெமெல்மேன் (அமெரிக்கா)







தமிழில் எஸ். சங்கரநாராயணன்


அரசு நற்பணியாளர் சங்கத்தில் அந்த இரவு விருந்தில் என் உரை ரொம்ப சொதப்பலாகி விட்டது. அதற்கப்பபுறம் என் நண்பன் நிக்கி வெல்ட் நாங்கள் சந்தித்துக்கொள்ளும் நீல நிலவு விடுதியில் வைத்து என்னை எள்ளி நகையாடிவிட்டான். பொதுவாக நாங்கள் அரட்டையடிக்க என்று அங்கே கூடுவது உண்டு. உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல் அதிகாரியாக எனக்குமுன் இங்கே இருந்தவர் பத்திரிகைக்கு என்று அளித்த ஒரு பேட்டியில் இருந்த வார்த்தைக் குழப்படியை விமரிக்கிறதாய் நான் பேசப் போய், அதற்காகத் தயாரித்து வைத்திருந்த என் உரையை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன். அவரைவிட குழப்படியாக அவர்சொல்லாததை யெல்லாம் அவர் சொன்னாப்போல நான் எனக்கே பிடிக்காத அளவில் பேசிவிட்டேன். இதற்கெல்லாம் நான் புதியவன். சட்டக் கல்லூரியில் இருந்து இப்பத்தான் வெளியே வந்திருக்கிறேன், சில மாதங்களே ஆகிறது. ஊரகச் சீரமைப்பு, பிரதேச அதிகாரியாக ஆகவேண்டி நான் வாசித்த துறை. முடிந்தவரை அந்தப் பேட்டியை சொதப்பல் இல்லாமல் காட்டிய என் முயற்சி அது. நான் அதை மேலதிகம் குழப்பிவிட்டேன்...

                நிக்கி ஸ்நோடானில் ஆங்கிலமும் இலக்கியமும் போதிக்கிற பேராசிரியன். அடுத்தாளுக்கு அவன் பேச்சே இன்ஜெக்ஷன் தான். அறிவுரைதான்... ஒரு ரெண்டாம் ஆண்டு கல்லூரி மாணவன் கால நீட்டிப்பு கேட்கிறபோது எப்படி கண்டிப்புடன் 'அட சாக்கு போக்கு எல்லாம் வேணாம்' என்று சொல்வானோ அதேபோல அழுத்தமாய்ப் பேசுவான். என்னைவிட ரெண்டு மூணு வயசு அதிகம் அவனுக்கு. நாற்பதுகளின் விளிம்பில் இருக்கிறான். பள்ளிக்கூட வாத்தியார் தன் முட்டாள் மாணவனை நடத்துகிறாப் போலவே என்னை நடத்துகிறான். அவனது நரைத்த தலையும், எல்லாம் அறிந்த பாவனைகளுமாக அவன்முன்னால் நான் அடக்கி வாசிக்கவே முடிந்திருக்கிறது.

                ''நான் சரியாப் பேசினாப்போலத்தான் இருந்தது. அவர் பேச்சுக்கு நான் கொடுத்த விளக்கங்கள்...'' என்றேன் நான்.

                ''அட தங்கமே'' என்றான் அவன். ''மனுசாளுக்கிடையே புரிதல் என்பது பேச்சுவார்த்தை மூலம் தான். இன்னாலும் பார்த்துக்க அதிகபட்சமாக ஒராள் பேசுவதை அடுத்தாள் தப்பாகவே தான் புரிஞ்சிக்கறான். ஹா அதுலயும் இந்த சட்ட சமாச்சாரங்களில் இந்தக் குழப்படி இன்னும் ஜாஸ்தி. அவன் பிரச்னை, என்ன சொன்னார்ன்றதைச் சொல்றது அல்ல, எதை அவர் சொல்லவில்லைன்னு அதை மறைத்து திரித்துப் பேசி ஜெயிக்க வேண்டியிருக்கு.''

                என் மேசையில் இருந்து உணவு சாப்பிட்ட பில்லை எடுத்துக்கொண்டேன். அப்படியே பின்சரிந்து உட்கார்ந்துகொண்டேன். ''ஒரு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை பத்தியா சொல்ல வரே?''

                ''வாதப் பிரதிவாதம் பத்தி யார் பேசினாங்க?'' என்றான் அவன். '', ஒரு வாக்கியம் காரணபூர்வமா விளக்கப்பட்ட பின்னாலும் அது உண்மை இல்லைன்னு ஆகிப்போக வாய்ப்பு இருக்குது தம்பி...''

                காசாளர் கூண்டுவரை என்னுடனேயே மாடியிறங்கினான் நிக்கி. நான் பில் தந்துவிட்டு அவன் பணம் தர பொறுமையற்றுக் காத்திருந்தேன். ஒரு அரதப்பழசான பர்சுக்குள் அவன் துழாவி, ஒவ்வொரு நாணயமாக, தூண்டில் மீனாக எடுத்துப்... கைச்சில்லரை பத்தவில்லை. திரும்ப அத்தனை சில்லரையையும் அள்ளி உள்ளே தள்ளி, பர்சின் வேறு அறையில் இருந்து நோட்டை எடுத்து நீட்டினான்.

                ''அட ஒரு பத்துப் பன்னெண்டு வார்த்தையில் எதும் வாக்கியம் சொல்லு...'' என்றான் அவன். ''அதில் இருந்து ஒரு சங்கிலித் தொடர் போல என் வியூகங்களை அடுக்கித் தருகிறேன்... அதில் ஒன்றுகூட நீ அந்த வாக்கியத்தை அமைக்கையில் உன் மனசில் இருந்திருக்கவே இருக்காது!''

                மத்த வாடிக்கையாளர்கள் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். காசாளர் கூண்டுமுன் இடம் இல்லை. நிக்கி வரும்வரை நானே ஒதுங்கி நின்றிருந்தேன். இந்தாள் என்ன எப்பவுமே நம்மைத் தோளுக்குக் கீழாய் அமுக்கினாப் போலவே பேசுகிறான்.

                திரும்ப இறங்குகிறோம். ''ஒரு ஒன்பது மைல் நடை, ஒண்ணும் விளையாட்டு கிடையாது, அதுவும் மழையில்...''

                ''ஆமா, சிரமந்தான்'' என்றான் எதோ ஞாபகத்தில். பின் சட்டென நின்று என்னை உன்னித்தான். ''எதைப்பத்திச் சொல்றே நீயி?''

                ''ஏய் அது ஒரு வாக்கியம். அதில் ஆங்கிலத்தில் பதினோறு வார்த்தைகள் இருக்கு!'' என்றேன் நான் அழுத்தமாய். அதே வாக்கியத்தை ஒவ்வொரு வார்த்தையாய் விரலில் எண்ணியபடி திரும்பவும் சொன்னேன். '' நைன் மைல்ஸ் வாக் இஸ் நோ ஜோக், எஸ்பெஷல்லி இன் தி ரெய்ன்.''

                ''அதுக்கென்ன?''

                ''நீ என்ன சொன்னே? ஒரு பத்து பன்னெண்டு வார்த்தைகள் உள்ள வாக்கியம் சொல்லச் சொன்னே....''

                ''அதுவா...'' என்றவன் என்னை ஒரு சந்தேகப்பார்வை பார்த்தான். ''திடீர்னு எப்பிடி இப்பிடி ஒரு வாக்கியத்தைப் பிடிச்சே?''

                ''அட எப்பிடியோ தன்னால என் மூளைல உதிச்சது. இப்ப நீ என்ன பண்றே... இந்த வாக்கியத்தில் இருந்து உன் வியூகங்களை அடுக்கிக்காட்டறே.''

                '' என்னப்பா, நிசம்மாவே தான் கேக்கறியா?'' அவனது சின்ன நீலக் கண்களில் குறும்பு மின்னியது. ''இப்ப நான் அந்த வாக்கியத்துக்குள்ள புகுந்து புறப்பணுன்றியா என்ன?''

                ''முடிஞ்சாப் பாரு. இல்லாட்டி வாயை மூடிக்க...''

                ''ம். சரி'' என்றான் மெல்ல. ''உடன்னே முகத்தைத் தூக்காதே. நான் இந்த விளையாட்டுக்குத் தயார். அந்த வாக்கியம் எப்பிடி அமைஞ்சிருக்கு பார்க்கலாம். ஒரு ஒன்பது மைல் நடை, ஒண்ணும் விளையாட்டு கிடையாது, அதுவும் மழையில். அப்பிடித்தானே? அதை வெச்சிக்கிட்டு ரொம்ப ஊடாட முடியாது.''

                ''அதுல ஆங்கிலத்தில் பத்து வார்த்தைக்கு மேல இருக்கு. நீ கேட்ட அளவு.''

                ''சரி'' என்றான் அவன் மனசில் கணக்குகள் உருள ஆரம்பித்திருந்தன. ''முதல் யூகம். அதைச் சொன்னவன் ஆம்பளை. கொஞ்சம் அலுப்பாய் இருக்கிறான்.''

                ''ஏத்துக்கலாம்'' என்றேன் நான். ''அது ஒண்ணும் பெரிய கண்டுபிடிப்பு கிடையாது. அந்த வாக்கியத்திலேயே அவன் வேதனை உள்ளூற இருக்கிறது.''

                அவசரமாய்த் தலையாட்டினான். அடுத்த கற்பனைக்கு வந்திருந்தான் அவன். ''அந்த மழை, அது எதிர்பாராமல் வந்த மழை. 'அதுவும்' மழையில்-ன்றான்லியா? மழை சாதாரணமா அங்க வர்ற விஷயமா இருந்தால், மழைல நடக்கிறது சிரமந்தானப்பா - அப்டிதான் சொல்லியிருப்பான். அதுவும், அப்டின்ற வார்த்தை வந்திருக்காது.''

                ''ம்'' என்றேன் நான். ''ஆனால் 'அதுவும்' வாக்கியத்தில் வெளிப்படையாத் தெரிகிறது.''

                ''முதல் கணிப்புகள் அப்படி வெளிப்படையாத்தான் அப்பா இருக்கும்'' என்றான் அவன் வெடுக்கென்று.

                அவனை மேலும் மறிக்கவில்லை நான். அவன் எதேதோ உள்யோசனையை ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

                ''அடுத்த விஷயம்... இதைச் சொன்னவன் ஒரு விளையாட்டு வீரனோ, அடிக்கடி நடக்கிறமாதிரியான வாய்ப்பு அமைந்த ஆசாமியோ அல்ல.''

                ''அதை எப்பிடிச் சொல்றே?''

                ''அந்த 'அதுவும்', அதைவெச்சிதான் சொல்றேன். மழைல ஒன்பது மைல் நடை, அப்டின்றாப்ல அவன் சொல்லல்லியே. அதில் நடையை விட, அந்த தூரத்தை அவன் வலியுறுத்திப் பேசியிருக்கிறான். அட ஒரு ஒன்பது மைல்ன்றது ஒண்ணும் அதிகம் கிடையாது. நாமளே கோல்ஃப் ஆடறபோது அதில் பாதிக்குமேல் நடந்துர்றோம். கோல்ஃப், வயசாளிகள் ஆட்டம். அவர்களே அந்த தூரத்தைப் பொருட்டாய் நினைக்கிறது இல்லைன்றேன்.'' குறும்பாய்ப் பேசினான். நான் கோல்ஃப் ஆடுவேன் என்கிறதால் கிண்டல்.

                ''பொதுவா அது சரிதான் அப்பா'' என்றேன் நான். ''ஆனால் வேற காரண காரியங்களும் அதில் இருக்கலாம். அவன் காட்டுக்குள் இருக்கும் ஒரு பட்டாளத்துக்காரனாக இருக்கலாமில்லே? காடுன்னா, மழைன்னாலும், மழை இல்லாங்காட்டியுமே... ஒன்பது மைல் சரி தூரம் தான்.''

                ''ஆமாந் தம்பி ஆமா'' என்றான் நிக்கி எகத்தாளமாக. ''அத்தோட பேசறவனுக்கு ஒரே கால்தான் இருக்குன்னுகூட வெச்சிக்கலாமில்லே? அவன் ஒரு பிஹெச்.டி. ஆராய்ச்சி மாணவன்னு கூடச் சொல்லிக்கலாம். எதெல்லாம் விளையாட்டு இல்லைன்னு ஒரு பட்டியல் எழுத ஆரம்பிச்சானோ! இப்ப பாரு இவனே, மேலே நான் தொடருமுன் சில உத்தேசங்களை இதில் சேர்த்துக்கணும்...''

                ''அப்டின்னா?'' என்றேன் நான் அவனையே நோட்டம் பார்த்தபடி.

                ''பாரு, அந்த வாக்கியத்தை அப்படியே மொண்ணையாதான் நான் எடுத்துக்கிட்டிருக்கேன். இதன் நதிமூலம் ரிஷிமூலம் எனக்குத் தெரியாது. யார் சொன்னா இதை, எந்தச் சூழலில் பேசினாங்க, தெரியவில்லை. பொதுவா ஒரு வாக்கியம் அதன் சூழலைப் பொறுத்துத் தானே பேசப்படுது? அர்த்தப்படுது?''

                ''ஓகோ. என்னென்ன உத்தேசங்களை நீ வெச்சிக்கப் போறே?''

                ''ஒரு முக்கிய உத்தேசம். இதைச் சொன்னவன் போனது எதும் எக்குத்தப்பான வேலைக்காக இல்லை. அடுத்தது, அவன் உண்மைலியே நடந்திருக்கான். அந்த வலியில் தான் இப்படிச் சொல்லியிருக்கிறான். அத்தோட, ஒரு பந்தயம் கிந்தயம்னு இந்த நடையில் அவன் ஈடுபடவில்லை....''

                ''ம்.''

                ''இன்னொண்ணு, அந்த நபர் இங்கத்தைய ஆசாமி தான்னு நான் வெச்சிக்கறேன்.''

                ''இங்கன்னா, இந்த ஃபேர்ஃபீல்ட் ஆள்னா?''

                ''அப்பிடித் தேவையில்லை. ஒரு கிராமத்து ஆசாமி...''

                ''பரவால்ல.''

                ''ம். இப்ப, அந்த உத்தேசங்களை நீ அனுமதிச்சியானால, அவன் ஒரு விளையாட்டு வீரனோ, அடிக்கடி ஊர் சுத்துகிறாப் போல ஆசாமியோ இல்லைன்னு முன்ன சொன்னேன்லியா, அதையும் ஒத்துக்கணும்.''

                ''மேல சொல்லு.''

                ''ம். இப்ப, என் அடுத்த முடிவு... என்னன்னா, அந்த நடை ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சோ, அதிகாலை வாக்குலயோ நடந்திருக்கணும்.... அதாவது நடு ராத்திரிக்கும், காலை அஞ்சு ஆறு மணிக்கும் இடையில்...''

                ''அதெப்பிடி?''

                ''அந்த தூரம் - ஒன்பது மைல். நாம இருக்கற இந்தப் பகுதில நிறைய ஜனங்கள் குடியிருக்கிறார்கள். எந்தச் சாலையில் போனாலும் ஒன்பது மைலுக்குள்ளே வேற ஊர் வந்திரும். ஹட்லி இங்கருந்து அஞ்சு மைல். ஹட்லி அருவி ஏழரை மைல். கோர்ட்டன் பதினோரு மைல் தூரம். ஆனால் கீழ் கோர்ட்டன் எட்டு மைல்லயே வந்திருது. கோர்ட்டன் பகுதிக்கு ரயில் இருக்கு. மத்த வழிகள்லியும் பஸ் ஓடுது. எல்லா நெடுஞ்சாலைலயும் போக்குவரத்து ஜே ஜேன்னிருக்கு. ஒராள் அதும் மழையில் ஒன்பது மைல் நடப்பானா இங்க? நடந்திருந்தால் அது பின்னிரவு அல்லது அதிகாலை! பஸ் ரயில் இல்லாத நேரம் அது. அத்தோட வழியில் எந்தப் புது மனிதனையும் அந்த வழியில் போகிற வாகனக்காரர்கள் கூட ஏத்திக்க யோசிக்கவே செய்வார்கள்.''

                ''அட அவன் யார் கண்லயும் படாமல் போக விரும்பியிருக்கலாம் இல்லியா?''

                இவ்ளதானா நீ, என்கிறதாக நிக்கி பார்த்தான் என்னை. ''அப்பிடி யாரும் தன்னைப் பார்க்கப்டாதுன்னு போறவன் ஆடியசைஞ்சி தனியா நடப்பானா, ரயில் பஸ்னு போறது இன்னும் சவுகரியம் அவனுக்கு. எல்லாவனும் செய்தித்தாளை எடுத்துப் பிரிச்சி தன் பாட்டுக்கு மேய்ஞ்சிட்டிருப்பான்....''

                ''சரி அதை விடு'' என்றேன் அவசரமாய்.

                ''இதை யோசிச்சிப் பாரு. அவன் ஒரு பட்டணத்தை நோக்கி வருகிறான். அதைவிட்டு வெளியே போகவில்லை!...''

                தலையாட்டினேன். ''பட்டணத்தில் இருந்து அவன் கிளம்பியிருந்தால் எதும் வண்டி வாகனம் ஏற்பாடு பண்ணிக்கொண்டே கிளம்பியிருக்கலாம். அதானே சொல்ல வரே?''

                ''ஓரளவு சரி'' என்றான் அவன். ''இன்னொரு விஷயம் இருக்கு. அந்த தூரம். ஒன்பது மைல் நடை. ஒன்பது ஒரு குறிப்பான எண். குத்துமதிப்பான எண் அல்ல.''

                ''விளங்கல்ல.''

                பார்த்தானே என்னை ஒரு வாத்தியார்ப் பார்வை. ''அதாவது நீ ஒரு பத்து மைல் நடை அல்லது நூறு மைல் காரோட்டினேன்னு சொன்னியானா, நாம புரிஞ்சிக்கலாம், ஒரு... எட்டில் இருந்து பன்னெண்டு மைல் அளவு நடந்திருக்கிறான். தொண்ணூறுலேர்ந்து நூத்திப்பத்து மைல் அளவு காரோட்டியிருக்கிறான்... அதாவது பத்து நூறு இதெல்லாம் முழு எண்கள். சரியா பத்து மைலோ ஏறக்குறைய பத்து மைலோ நடந்திருப்பே, சொல்றது என்ன சொல்லுவே? பத்து மைல்ம்பே. ஆனால் அவன் என்ன சொல்றான், ஒன்பது மைல்னு குறிப்பாச் சொன்னால், அது கூடகுறைய இல்ல, சரியா ஒன்பது மைல். நாமளும் பாரு, ஒரு பட்டணத்துக்கு கிராமத்தில் இருந்து எத்தனை தூரம்னு சரியா கணக்கு வெச்சிருப்போம். பட்டணத்தில் இருந்து கிராமத்துக்கு அத்தனை துல்லியக் கணக்கு வெச்சிருக்க மாட்டோம் இல்லையா? பட்டணத்தில் ஒராள்கிட்ட பிரௌன் குடியானவன் எங்க இருக்கான்னு கேட்டேன்னு வெய்யி, அவனைத் தெரிஞ்சவன் என்ன சொல்வான்? 3-6/10 மைல். நான் கார்ல கணக்குப் பார்த்திருக்கேன்னுவானா இல்லியா?''

                ''அட இது அத்தனை சுரத்தா இல்ல நிக்கி.''

                ''நீ சொல்லியிருக்கே, பட்டணத்தில் இருந்து கிளம்பியிருந்தால் வண்டி வாகனம் அவனே பார்த்துக்கிட்டுப் போயிருப்பான்னியே நீ? அதையும் இதையும் சேர்த்துப் பார் அப்பா.''

                ''ஹ்ம். இதையும் ஏத்துக்கலாம். வேற?''

                ''இப்பதான் நான் வியூகம் அமைக்க ஆரம்பிச்சிருக்கேன்'' என்று அவன் அலட்டிக்கொண்டான். ''அதாவது... அவன் சும்மா ஒன்பது மைல் நடக்கலை. ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கித்தான் நடந்திருக்கிறான். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அவன் அங்கே இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு உதவி என்று, அதாவது அவன் வந்த கார் மக்கர் என்றோ, மனைவிக்குப் பிரசவ வலி என்கிறாப்போல அவசர உதவி என்றோ அங்கே அவன் போகவில்லைன்றேன். அட அவன் வீட்டை உடைச்சி யாரோ திருடன்....''

                ''கார் மக்கர்ன்றது சரியான சூழலா இருக்கு. பட்டணத்தை விட்டு எத்தனை தூரம் வரை வந்திருக்கிறேன் என்று அவன் காரில் பார்த்திருக்கலாம்.''

                நிக்கி மறுத்துத் தலையாட்டினான். ''அட கார் நின்னிட்டால் மழையில் ஒன்பது மைல் நடக்கிறதாவது, மழை விட்டதும் அடுத்த சோலியைப் பார்க்கலாம்னு அப்படியே பின் இருக்கையில் சுருண்டுபடுத்துத் தூங்கியிருப்பான். அல்லது கர்ச்சீப்பை கொடியாட்டம் ஆட்டி வழியில் வர்ற இன்னொரு வாகனத்தை நிறுத்த முயற்சி பண்ணியிருப்பான். பாரு, ஒன்பது மைல். அதை நடந்து கடக்க அவனுக்கு எத்தனை நாழி எடுக்கும் சொல்லு?''

                ''ஒரு.... நாலுமணி நேரம்.''

                சரியென தலையாட்டினான். ''அதுக்கு கம்மியா முடியாது. மழை வேற பெய்யுது. நாம அந்த நடை பின் ராத்திரி அல்லது அதிகாலையில் நடந்திருக்கறதா பேசிக்கிட்டோம். அந்த கார் ஒரு மணி வாக்கில் மக்கர் பண்ணியிருந்தால், அவன் வந்து சேருமுன் அஞ்சு மணி ஆயிருக்கும். வெளிச்சம் வருகிற சமயம். தெருவில் கார்கள் நடமாட்டம் ஆரம்பிச்சிருக்கும். இன்னும் கொஞ்சம் ஆச்சின்னா பஸ்ஸே ஆரம்பிச்சிரும். ஃபேர்ஃபீல்டுக்கு முதல் பஸ் அஞ்சரைக்கு வந்து சேர்கிறது இல்லியா? அத்தோட அவன் ஒரு காருக்கு உதவின்னு கிளம்பியிருந்தால், பட்டணம் வரை நடந்திருப்பானா? பக்கத்தில் எங்க தொலைபேசின்னு பார்த்துப் போயிருப்பான்... அதான் சொல்றேன், அவனுக்கு அந்த நேரத்தில் பட்டணத்தில் இருக்கிறதாக முக்கிய சோலி இருக்கிறது. அதும் பட்டணத்தில். அதும் அஞ்சரை மணி அதிகாலைக்கு முன்னால்....''

                ''அப்படின்னால் அவன் ஏன் முன்னாடியே அங்கே போய்ச் சேர்ந்து காத்திருக்கக் கூடாது? இப்பிடி மழையில் ஒன்பது மைல் நடந்து.... ஏன்?''

                என் அலுவலகம் இருந்த ஊரகக் கட்டடத்துக்கு வந்து சேர்ந்திருந்தோம். பொதுவாக நீல நிலவு விடுதியில் ஆரம்பிக்கும் எங்கள் எந்த அரட்டையும் இதன் வாசலில் அப்படியே அமுங்கிவிடும். ஆனால் நிக்கி என்ன இப்பிடி பேனைப் பெருமாளாக்கிக் காட்டுகிறான்... என எனக்கு ஆர்வக்கிறுகிறுப்பு. அவனை மேலே என்னுடன் வந்து கூடக் கொஞ்சநேரம் இருக்கக் கேட்டுக்கொண்டேன். நாங்கள் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து கொண்டோம். ''சொல்லு நிக்கி, அவன் ஏன் முன்னாடியே போய்ச் சேர்ந்து அந்த காரியத்துக்காகக் காத்திருக்கவில்லை?''

                ''அவன் காத்திருந்திருக்கலாம்...'' என்று திரும்பச்சொன்னான் நிக்கி. ''ஆனால் அப்படி அவன் செய்யவில்லை இல்லியா? அதனால நாம என்ன நினைக்க வேண்டியிருக்கு? என்னவோ காரணமா அவன் கடைசி பஸ்சை விட்டிருக்கணும். கடைசி பஸ் தாண்டியும் அவன் இங்க இருந்திருக்க வேண்டி ஆயிருக்கணும்ன்றேன். அல்லது அவனுக்கு கிளம்புமுன் ஒரு சமிக்ஞை மாதிரி எதாவது வரவேண்டி யிருந்து அவன் இங்கியே காத்திருந்திருக்கலாம்.... அதாவது எதும் தொலைபேசிச் செய்தி போல எதாவது வர அவன் இங்கே காத்திருக்கிறதாய் இருந்தால்?''

                ''அதாவது, அவனுக்கு அந்த சந்திப்பு அல்லது காரியம் பின்னிரவுக்கும் அதிகாலை அஞ்சு முப்பதுக்கும் நடுவில் பட்டணத்தில் இருந்திருக்கிறது...''

                ''இப்ப அதைவிட துல்லியமா அதை நாம கணிக்கலாம் அப்பா. அந்த ஒன்பது மைலை அவன் நடந்து கடக்க நாலு மணி நேரம் ஆகுதுன்னு நாம பார்த்தோம். கடைசி பஸ் காலை 12 30 க்கு. அதை அவன் பிடிக்கலையின்னால்ஆனால் அதசமயம் நடக்க ஆரம்பித்திருந்தால் போய்ச் சேர்கிற இடத்துக்கு காலை நாலரை மணி வரை போய்ச்சேர முடியாது. அதுக்கு பதிலா, காலையில் முதல் பஸ்சை அவன் பிடித்திருந்தால், அஞ்சரைக்கு வந்து சேர்ந்து விடலாம். அப்படின்னா என்ன தெரியுது? அவனுக்கு நேரம் நாலரையில் இருந்து அஞ்சரைக்குள்! அப்டிச் சொல்லலாமா?''

                ''என்ன சொல்ல வர்றே? அவன் சோலி நாலரைக்கு முன்னால் என்றால் கடைசி பஸ்சை அவன் பிடிச்சிருப்பான். சோலி அஞ்சரைக்குப் பின்னாடி என்றால் மறுநாள் முதல் வண்டியைப் பிடிச்சிருப்பான்னு சொல்றே, அதானே,''

                ''ஓரளவு அப்படித்தான். அத்தோட இன்னொண்ணு. அவன் ஒரு சமிக்ஞை அல்லது ஆணைக்கு அல்லது தொலைபேசிக்கு என்று அவன் காத்திருந்தால்... அது ஒரு ஒருமணிக்கு அப்பறமா வந்திருக்காது. அதுக்கு முன்னாடியே வந்திருக்கணும்.''

                ''ஆமாமா, அதுண்மைதான். அவனுக்கு அஞ்சு மணிக்கு நகரில் வேலை என்றால், அவன் நாலு மணி நேரம் நடக்கவேண்டும் என்றிருக்கிற பட்சம், ஒருமணிக்கெல்லாம் அவன் கிளம்பியாக வேண்டும். தொலைபேசி அதற்கு முன்னால் வந்தாக வேண்டும்...''

                தலையாட்டினான் நிக்கி. ஆனால் உள்ளுக்குள் மேலும் யோசனை நாடாக்கள். அமைதியாகி விட்டான். என்னவோ எனக்கே ஆச்சர்யம், அவனை நான் தொந்தரவு செய்யாமல் அவனையே பார்த்தபடி இருந்தேன். வேடிக்கை தாண்டி வேறொரு வியூகத்துக்குள் நான் இழுக்கப் படுகிறேனா? சுவரில் அந்தப் பிரதேசத்தின் பெரிய வரைபடம். அதைநோக்கிப் போய் கவனமுடன் பார்க்க ஆரம்பித்தேன்.

                '' நிக்கி, நீ சொன்னது சரி'' என்று தோள்ப்பக்கம் இருந்து வரைபடத்தைப் பார்த்துப் பேசினேன். ''இங்க ஃபேர்ஃபீல்டில் இருந்து எந்த ஊரும் ஒன்பது மைல் தாண்டிய சுற்றளவில் இல்லை. அதற்கு முன்பே வந்திருது. மத்த சின்னச் சின்ன நகரத்திற்கு ஃபேர்ஃபீல்ட் வலப்பக்கமா அமைந்திருக்கிறது.''

                அவனும் வந்து வரைபடத்தை மேய்ந்தான். ''அட அவன் நடந்துவந்த ஊர் ஃபேர்ஃபீல்ட் தான்னு இருக்க வேண்டியதில்லையே...'' என்றான். ''அடுத்தடுத்து இருக்கிற எதும் நகரமாக்கூட அவன் போயிருக்கலாம். ஹட்லி எப்பிடி?''

                ''ஏன் ஹட்லின்றே? அந்த அதிகாலை அஞ்சி மணிக்கு அங்க யாருக்கு என்ன சோலி இருக்கும்?''

                ''வாஷிங்டன் ஃப்ளையர் ரயில் அங்கதான் காலை அஞ்சு மணிக்கு நீராவிக்குத் தண்ணீர் பிடித்துக்கொள்ளும்...'' என்றான் அவன் அமைதியாக.

                ''அது சரிதான்...'' என்றேன். ''பல ராத்திரிகளில் இந்த ரயில்கள் தஸ் புஸ்சென்று அது போடும் சத்தத்தில் என் தூக்கமே கெட்டுப்போயிருக்கு. ரயில் சத்தம் அடங்க ஒன்றிரண்டு நிமிஷத்தில் மெதடிஸ்ட் சர்ச் கடிகாரம் அஞ்சு தரம் அடிக்கும்.'' என் மேசைக்குப் போய் ரயில் காலஅட்டவணை தேடியெடுத்தேன். ''அந்த ஃப்ளையர் வாஷிங்டனில் 12 47க்குக் கிளம்புகிறது. பாஸ்டனுக்கு எட்டு மணிக்குப் போய்ச் சேர்கிறது.''

                நிக்கி இன்னும் வரைபடத்தில் இருந்து பார்வையை எடுக்கவில்லை. ஒரு பென்சிலை எடுத்து நகரங்களின் தூரத்தை அளவிட்டுக் கொண்டிருந்தான். ''பழைய சம்தர் சத்திரத்தில் இருந்து ஹட்லி பார், சரியா ஒன்பது மைல்.''

                ''பழைய சம்தர் சத்திரமா?'' என்று நான் திரும்பிச் சொன்னேன். ''இதுவரை நாம பேசிட்டிருந்த அத்தனையையும் இது உல்ட்டாவா அடிச்சிருதேய்யா. அந்த ஊரில் சரளமா டாக்சி கீக்சி கிடைச்சிரும். பாதி பட்டணம் அது...''

                நிக்கி தலையை உதறிகொண்டான். ''அங்க கார் எல்லாமே பார்க்கிங்குக்கு உள்ள இருக்கும். வாசல் செக்யூரிட்டி வந்து, அவனுக்குத் தெரிய வெளிய வரணும். ரொம்ப சின்ன பழைய ஊர். பளிச்னு அவன் வெளிய போறது தெரிஞ்சிறக் கூடாதுன்னு பாத்திருக்கலாம். அத்தோட... அட அவன் தனக்கான தகவல் வரும் வரை அறையில் காத்திருக்க வேண்டியிருந் திருக்கலாமில்லே? ஃப்ளையர் பத்தின செய்தியா அது இருக்கலாம். எந்தப் பெட்டியில் எந்த பெர்த்தில் யார் வர்றாங்கன்ற தகவலை அவன் தெரிஞ்சிக்கிட்டு அப்பறமா கிளம்ப வேண்டியிருந்தால்?...''

                ''ஏய் நிக்கி....'' என்றேன் நான் அதிர்வுடன். ''இங்க நான்தான் ரிஃபார்ம் டிஸிடிரிக்ட் அட்டார்னி. பொதுப்பணத்தை விரயம் பண்றேனா தெரியல்ல. இன்னாலும் உடனே ஒரு டிரங்க் கால் பாஸ்டனுக்கு அடிச்சிப் பேசப் போறேன். அசட்டுத்தனமா தெரியலாம், ஆனால் நான் செய்யப் போறேன்.''

                நிக்கியின் சின்ன நீலக் கண்கள் மிளிர்ந்தன. நாக்கால் உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டான்.

                ''செய்யி'' என்றான் இறுக்கமாய்





***
பேசிவிட்டு தொலைபேசியைத் திரும்ப தாங்கியில் வைத்தேன்.

                ''நிக்கி,'' என்றேன். ''ஒரு குற்றக் கண்டுபிடிப்பில் இத்தனை அதிசயமான தற்செயல் நடந்திருக்குமான்னே தெரியல்லியேப்பா... நேற்றைய 12 47 வாஷிங்டன் ரயிலில் ஒரு மனிதன் கொலைசெய்யப் பட்டிருக்கிறான்! அவன் செத்து மூணுமணி நேரம் ஆயிருக்கிறது. ஹட்லி கணக்கும் இதுவும் எத்தனை கச்சிதமா பொருந்தி வருது!''

                ''இதுமாதிரி தான் நான் நினைச்சேன்'' என்றான் நிக்கி. ''ஆனால் இது தற்செயல்னு சொல்றியே, அதுதான் தப்பு. அப்பிடி இருக்க முடியாது. இந்த வாக்கியத்தை எங்க பிடிச்சே?''

                ''அட அது ஒரு வாக்கியம், அவ்வளவே. தன்னைப்போல என் தலைல உதிச்சது அது.''

                ''அப்பிடி இருக்க முடியாது! இட்டுக்கட்டி இப்பிடி ஒரு வாக்கியத்தை யாரும் அமைக்க மாட்டார்கள். கட்டுரை எழுதுதல் மாதிரி நான் நிறையப் பசங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கேன். யாரையாவது ஒரு பத்து வார்த்தை அளவில் ஒரு வாக்கியம் சொல்லச் சொன்னால் சவசவ செய்தியா அது இருக்கும் - எனக்கு பால் பிடிக்கும், இப்பிடி. அதைக் காரண காரியத்தோட சொல்ல முயற்சித்தால், முன் வாக்கியத்துடன், ஏன்னா அது உடம்புக்கு நல்லது, என்று சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் பாரு, நீ கொடுத்த வாக்கியம், அது ஒரு குறிப்பிட்ட சூழலை வெளிப்படுத்தி யிருக்கு.''

                ''இன்னிக்குக் காலைல யிருந்தே நான் யாராண்டயும் எதுவும் பேச கீச இல்லை. உன்னோடு நீல நிலவு விடுதியில் நான் தனியாகவே தானே இருந்தேன்?''

                ''அட நான் பணங் கட்டிட்டு வரும் வரை நீ என் கூட இல்லியே,'' அவன் குரலில் அழுத்தம் கொடுத்துப் பேசினான். ''வழிநடையில் நீ காத்திருக்கையில் யாரையாவது சந்தித்தாயா? நான் உன் பக்கத்துக்கு வருகிற வரையில்...?''

                நான் மறுத்துத் தலையாட்டினேன். ''நான் உன்னைவிட்டுத் தனியா அதிகபட்சம் ஒருநிமிடம் கூட இல்லையே. ஒரு ரெண்டு பேர் அங்க வந்தார்கள், நீ பர்சில் சில்லரையைத் தேடிக் கொண்டிருந்தாய். அதில் ஒராள் என்னை இடித்தான். அதான் நான் அவர்களுக்கு வழிகொடுத்து ஒதுங்கி நிற்கலாம் என நின்றேன்.''

                ''அவங்களை அதற்கு முன் எங்கியாச்சும் பார்த்திருக்கிறாயா?''

                ''யாரை?''

                ''அப்ப உள்ள வந்தாங்களே, அவங்களை?'' நிக்கி பரபரப்பாய் இருந்தான்.

                ''ஏன்? ம்ஹும். நான் அவங்களை அதற்கு முன் பார்த்தது கிடையாது...''

                ''அவங்க பேசிட்டிருந்தாங்களா?''

                ''ம்? ஆமாம்னு தான் நினைக்கிறேன். அவங்களுக்குள்ள ரொம்ப இதுவா பேசிட்டிருந்தார்கள். இல்லாட்டி அவர்கள் என்னை கவனித்திருப்பார்கள். என்மீது இடிச்சிக்கிட்டிருக்க மாட்டார்கள்...''

                ''நம்ம நீல நிலவு விடுதிக்கு அத்தனைக்குப் புது ஆள் யாரும் வர்றது கிடையாது'' என்று அவன் குறிப்பிட்டான்.

                ''நாம வியூகப்படுத்திய அந்த ஹட்லி நபர்கள்... இவர்கள்னா நினைக்கிறே?'' என்றேன் ஆர்வத்துடன். ''அவங்களை இன்னொரு வாட்டி பார்த்தால் என்னால் அவர்களை அடையாளம் காட்ட முடியும்னு தோணுது.''

                நிக்கி கண்ணைச் சுருக்கிப் பார்த்தான். ''இவங்க அவங்களா இருக்கலாம். அவர்கள் ரெண்டு பேர். ஒருத்தன் வாஷிங்டனில் அந்தக் கொலையுண்ட ஆளைப் பின்தொடர்ந்து கவனித்திருக்கலாம். அவன்தான் புள்ளி வரும் பெர்த் எண்ணை இவனுக்குச் சொல்லியிருக்கலாம். மற்றவன் இங்கே காத்திருந்து காரியத்தை முடித்திருக்கலாம். அந்த வாஷிங்டன் நபர் பிற்பாடு இங்க வருகிறதாக அவர்கள் பேசிக்கொண்டார்களோ என்னவோ. அதில் திருட்டும் கொலையும், என்று ரெண்டும் இருந்தால் அது கிடைத்ததை பங்கு போட்டுக்கொள்ள என்று சொல்லலாம். அது கொலை மாத்திரம் என்றால், அந்த முதல் ஆள் செய்கூலி தர வந்திருக்கலாம்.''

                நான் திரும்ப தொலைபேசிக்குப் போனேன்.

                ''நாம விடுதியை விட்டு வந்து ஒரு அரைமணி ஆயிட்டது'' என்று மேலே தொடர்ந்தான் நிக்கி. ''அப்போதான் அவங்க உள்ளே நுழையறாங்க. நம்ம நீல நிலவில் அத்தனை வேகமா பரிமாறிவிட மாட்டார்கள். ஹட்லிக்கு நடந்து போன அந்த நபர், அவன் நல்ல பசியாய் இருப்பான். அந்த அடுத்த ஆள் ராத்திரி பூராவுமாக வாஷிங்டனில் இருந்து காரோட்டி வந்திருக்கலாம்.''

                ''யாரையும் கைது செய்தீர்களானால் உடனே என்னிடம் தகவல் தாருங்கள்'' என்றபடி நான் தொலைபேசியை வைத்தேன்.

                காத்திருக்கையில் நாங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. என்னவோ அசட்டுத்தனம் செய்துவிட்டாப் போல சங்கோஜமாய்த் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

                ஒரு வழியாக தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினேன். ''சரி.'' நிக்கியிடம் திரும்பினேன்.

                ''ஒருத்தன் சமையல்கூடம் வழியாக தப்பியோட முயற்சி செய்தான். ஆனால் வின் பின்கட்டில் தயாராய் ஆள் நிறுத்தியிருந்தார்... அவனையும் பிடித்தாகி விட்டது!''

                ''அப்ப நம்ம வியூகம் பலிச்சிருக்கு இல்லியா?'' என்றான் நிக்கி ஒரு நிதானமான புன்னகையுடன். நான் தலையசைத்தேன்.

                அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ''அடடா'' என்றான். ''இன்னிக்குக் காலைல சீக்கிரமே ஒரு வேலையை ஆரம்பிக்கறதா இருந்தேன். இங்கயே உன்கூடவே இத்தனை நாழியாயிட்டது எனக்கு...''

                அவன்கூட வாசல்வரை போனேன். '' நிக்கி'' என்று அன்போடு அழைத்தேன் அவனை. ''நீ இந்த விஷயத்துல என்ன சொல்ல வந்தே, ஞாபகம் இருக்கா உனக்கு?''

                ''ம். இருக்கு - ஒரு வாக்கியம் காரணபூர்வமா விளக்கப்பட்ட பின்னாலும் அது உண்மை இல்லைன்னு ஆகிப்போக வாய்ப்பு இருக்குது!''

                ''அப்டின்றே?''

                ''எதுக்குச் சிரிக்கறே நீயி?'' என்றான் அவன் கொஞ்சம் கடுப்புடன். ஆனால் அப்புறம் அவனும் வாய்விட்டுச் சிரித்தான்.‘

***
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு

                விளையாட்டாய்த் துவங்கி ஒரு தர்க்க ரீதியான துப்பு துலக்கும் கதையாக பரிணமிக்கிற கதையில், தற்செயல் என்று எதுவும் இல்லை என்று முடிவு வாய்த்தாலும், அவர் முற்றும் தர்க்க ரீதியாக சிந்திக்கிறதாகச் சொல்வதாலேயே இதன் ஓட்டைகள் கண்ணில் படுகின்றன. அந்த இரு குற்றவாளிகளும் நேரே இவர்கள் சந்திக்கும் ஓட்டலுக்கே, சாவகாசமாய்ச் சாப்பிட வருகிறது தற்செயல் இல்லையா என்ன? கதையில் காவல்துறை அதிகாரி தப்பு தப்பாய் தர்க்கம் பண்ண, கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் தர்க்கம் பேசுவது இன்னொரு ஆச்சர்யம். கல்லூரிப் பேராசிரியரை இந்த காவல்துறை அதிகாரி ஒரு வாக்கியம் சொல்லச் சொல்லி இப்படி மடக்கியிருந்தால் கதை நல்ல உரம் பெற்றிருக்கக் கூடும். அத்தோடு விளையாட்டாய் இவர்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தாலும் ஒரு கொலையின் தடங்களைக் கண்டுபிடித்ததில் ரெண்டு பேருமே ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடையவில்லை. சரி, கைது பண்ணியாச்சில்லியா, நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன், என்று பேராசிரியர் கிளம்புகிறார். தங்கள் வெட்டி அரட்டை உண்மையில் ஒரு குற்றத்தைக் கண்டுபிடிப்பதில் முடிந்ததை இவரும் சிரிப்புடன் கொண்டாடுகிறார்கள் என்று கதை முடிகிறது. பிடிபட்டவர்களை குறைந்தபட்சம் போய்ப் பார்க்கக் கூட இவர்கள் அக்கறை காட்டாதது, என்ன தர்க்கத்தில் சேர்த்தி மிஸ்டர் கதாசிரியர்? படித்தபோது சுவாரஸ்யமாய் இருப்பதை ஒத்துக்கொள்ளத் தானே வேண்டும். யாம் பெற்ற இவ்வனுபவம் பெறுக இவ்வையம், என மொழிபெயர்த்திருக்கிறேன்.

Comments

Popular posts from this blog