ஐயா, உமக்கு வந்தனம்.
நும் தமிழைப் பின்பற்றி யாம் வந்தனம்.

Add caption
கடலில் கிளைத்த நதி

எஸ். சங்கரநாராயணன்


வர் பெரிய திருவடி. மூதறிஞர். இறைவனால் தடுத்தாட் கொள்ளப்பட்டு சைவ சமயக் குரவர் எனத் தெளிந்த மகாப் பெரியவர். வற்றிய வரியோடிய தேகத்தில் உதிரத்துக்கு பதிலாகத் தமிழ் ஓடுகிறது. இறைபக்தியே அதன் வளமைச் செழுமை. கண்பார்வை சற்று ஒடுக்கந்தான். செவிப்புலனும் அத்தனைக்கு சிலாக்கியமாய் 'சொல்லுந்தரமாய்' இல்லை. எனினும் என்ன... சொல் தரமாய் இருக்கிறதே... முத்தாய்த் தெரிகிற பற்களும், முத்தாய்ப்பு வாக்குகளும். சிந்தனையின் சீர்வரிசை என மாலை தொடுத்தாற்போலப் பேசுகிறார். பூமாலை அல்ல - பாமாலை. திருத்தலம் திருத்தலமாய்ப் பயணிப்பதும், ஈசனைக் கோவில் தோறும் சென்று தரிசித்து ஆனந்தக் கூத்தில் களிப்பதும், ஊனும் உடலும் உருகி நெகிழ மனசில் அருவிப்பாலென அருள் சொரிகிற ஐயனை எண்ணியெண்ணி மகிழ்வதும், அவன் திருச்சந்நிதியில் நின்று மனசில் வாசனை பரத்துகிற ஈசனை வாய் தித்திக்க வாழ்த்திப் பாடுவதுமாக அவர் திருப்பணி சிரமேற் கொண்டார். அப்பனின் திருச்செல்வர். சான்றோர் அவரை அப்பர் என அன்புடன் அழைக்கத் தலைப்பட்டனர். கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்லவா? அவரது வருகை வழியெங்கிலும் ஊர்தோறும் கொண்டாடப் பட்டது. பெருந் திரளான ஜனங்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தார்கள். அவரை வணங்கி, தம் இல்லத்துக்கு அழைத்து அவரோடு விருந்துண்டு மகிழ்ந்தார்கள். வஸ்திராதி திரவியங்கள் வழங்கி கெளரவித்தார்கள். மற்ற தலத்துக்கு என அவர் கிளம்பும்போது தமது உற்ற உறவினரைப் பிரிவது போலவே அனைவரும் உணர்ந்தார்கள். துயருற்றார்கள். அவர் கிளம்பிப் போய்விட்டார் எனினும் என்ன... அத் திருத்தல மகிமை சாற்றும் அவர்தம் பதிகங்களை அவர் நித்திலமாய் விட்டுச் சென்றிருக்கிறாரே... அப்பதிகங்களை சந்நிதியில் அவர்கள் ஓதி மகிழ்கிறார்கள்.


இவர் சிறிய திருவடி. பிறப்பினால் அந்தணர் என்பர். கருவிலே திருச்சுமந்த தமிழ் வித்தக மத்தகர். உமையே மனம் இரங்கி இறங்கி வந்து அமுதம் ஊட்டியதாக ஊரே வியந்து கொண்டாடியது. அவர்தம் மழலை குழலை வென்றது. திருவருட் சந்நிதியில் கரங்கூப்பி, கண்மூடி நின்று காட்சிப்பட்ட இறைவனை உள்ளே நிரப்பிக் கொள்கிற அழகென்ன? நெஞ்சக் கனகல் நெகிழ அதன்பாற் பட்ட... அதற்கும் அப்பாற்பட்ட அனுபவத்தை வருணத் தெறிப்பென சிந்தனைச் சலங்கையின் கலீரென... சிலீரென மனத் தாழ்வாரத்தில் மழை ஈரமாய்ப் பரத்தி விடுகிறார். இப்படியோர் மகவு என் வயிற்றில் பிறக்கவில்லையே எனத் தாய்மார்கள் ஏங்கினர். ஆண்மக்களோ இச்சிறு பாலகனின் அறிவின் அகலமும் ஆழமும் நோக்கி வியந்து கொண்டாடினர்.

குருத்திலேயே கருத்துச் சுரங்கமென அவர் பொலிந்தார். உலகமே வயது வித்தியாசம் இல்லாமல் அவரை வணங்கி மகிழ்கிறது. ''அடடா நான் சிறுவன் ஐயா... இது தகுமோ?'' என அவர் மிகுந்த நல்லடக்கத்துடன் காலை விலக்கிக் கொண்டார். எனினும் வணக்கம் அவருக்கானது, என்பதைவிட அவரது உள்ளத்துறையும் இறைவனுக்கு என அவர் உணர்ந்தார். இறைவனை வணங்குதல் முறையல்லவா? வணங்காதது குறையல்லவா? சிறிய திருவடி அப்பர் சுவாமிகள்பால் மாளாத அன்பு பெற்றிருந்தார். ஊர்தோறும் மக்கள் அவரை வாயாரப் புகழ்வதையும் அவர் பரவசமாய்ப் பாடியருளிய பதிகங்களை வியந்தும் நயந்தும் கொண்டாடியதையும் அமரர் தலைவனின் திருச்சந்நிதிகளில் அப் பாசுரங்களை விரும்பி ஓதியதையும் அவதானித்தார். பெரியவரின் பக்தியும் திருப்பணியும் எத்தகைய அற்புதமான அனுபவங்கள் எனக் கண்டார். மனம் மகிழ்ந்தார். அவரைச் சந்திக்கும் நாளை எண்ணிக் காத்திருந்தார். இறைவன் திருவுளம் இருந்தால் அது விரைவில் சாத்தியமே எனக் காத்திருந்தார்.


பெரிய திருவடியின் காலடிகளைப் பின்பற்றிச் சிறிய திருவடிகள் நடந்தாற் போலவே சில தருணங்கள் அமைந்தன. ஞானப்பிள்ளைக்கு அது பெரிதும் வியப்பாயிற்று. அவர் விட்டுச்சென்ற தமிழும் பாசுரங்களும் நற்தாழம்பூவென மணத்துக்கிடந்தன.வழிதோறும். அடடா, அடடா... இத்தனை அருகே வந்தும் பெரியவர்தம் திருமுகமும் பார்க்க எமக்கு வாய்க்கவில்லையே... என்றிருந்தது. 

நேரில் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளவில்லைதான். எனினும் என்ன... மனசினால் அவர்தாம் அறிமுகம் கொண்டவராயினர். உணர்ச்சிதாம் நட்பாங் கிழமை தந்தது. அறிவினால் தாம் ஒருவருக்கு ஒருவர் அருகில் இருந்தாற் போலவே உணர்ந்தனர்.

பெரியவர் - பக்தியினால் எமக்கு முன்னேர் அவர் அல்லவா- எமக்கு முன்னே அவர் முன்னேறிச் செல்வது முறையே அல்லவா... என நினைத்துக் கொண்டார் சிறிய திருவடி.

காலம் கனியும். யானையும் குனியும். யாம் பெரியவரைச் சந்தித்து வணங்கி 
உரையாடி மகிழும் திருநாளும் அமையும்... அதுவரை காத்திருத்தல் நல்லது அல்லவா? காத்திருந்து எதிர்பார்த்திருந்து பெற்ற தருணங்கள் உள்ளத்தைக் கிளர்த்தி, வைரங்களை வெளிக்காட்டி விடுகிறது. கதவு பின்னே ஒளிந்து கொண்டு விளையாடும் குழந்தை விளையாட்டு காலத்துக்குப் பிடித்தமான விளையாட்டு. அதை சிறிய திருவடி அறிவார்.

யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே என்கிறாப் போல... இந்த நிலை. ஆனால் சிறு மாறுபாடு. யானை சென்ற பின்பும் செல்கிற மணியோசையை நான் கேட்கிறேன். புன்னகை செய்து கொள்கிறார் சிறிய திருவடி.

ஐயா, உமக்கு வந்தனம். நும் தமிழைப் பின்பற்றி யாம் வந்தனம்.


சிறிய திருவடியின் கீர்த்தியும் அப்பர் சுவாமிகள் அறியாததல்ல. எத்தகு பேறுபெற்று இச்சிறு பாலகன் இங்கு அவதரித்தினன் எனப் பெரிய திருவடி வியந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்கிறாப் போல... ஐந்தில் இவரை அடையாளங் காட்டிய இறைவனின் திருவுளந்தான் என்ன? என அக மகிழ்ந்தார். மனசார அவனுக்குத் தம் ஆசிகளை வழங்கி வந்தார். ஒரு நாள் அவனை யாம் இப்பயண நெடுவழியில் சந்திக்க வாய்ப்புக் கூடிவரும் என அவர் நம்பிக்கை கொண்டார்.

அடாடா, பார்த்து ஒன்றாக உண்டு களித்து உரையாடி மகிழா விட்டாலும் இச்சிறு மகவு என்னில் புகுந்து இதயத்தில் எத்துகிறது என வியந்தார். காலம் கைகூடி வரும்... நாம் கண்கூடி மகிழ்வோம்.... எனக் காத்திருந்தார்.

பெரிய திருவடி விட்டுச் சென்றவை விருத்தங்கள் அல்ல- கவிதா விருட்சங்கள். எத்தகு நிழலை ஜனங்களுக்கு அவை வழங்கின? ஈசன் எந்தை இணையடி நிழல் அல்லவா அவை. ஐயன் கடலில் முத்தெடுத்தாற் போலத் தத்தெடுத்த பிள்ளை அவர். பிரித்தெடுத்த தங்கம். சுண்ணாம்புக் காளவாயில் சுட்டெடுத்த தங்கம். அது மேலும் பொலிவது இயற்கையே அல்லவா?

வெளி நெற்றியில் திருநீற்று வரிகள்... உள்ளேயோ பக்தியின் வரிகள். விழித்த மனதின் பாடல் வரிகளாக அவை கவிதைக் கவரி வீசின. குளிந்த கடலலைகள் போல. 

மனமெனும் தோணி கண்ட மானுடம்... வாழ்க்கைக் கடல் கடக்க முயல்கிறது. கவிதைகள் வாழ வகை செய்கின்றன. பிறவிப் பெருங்கடல் கடக்கப் பேருதவி செய்கின்றன.

கடலுக்கு சிறகு முளைத்தால் அலைகள்...

உயிர்ப்பறவை உயர்ந்தெழட்டும். மாதா. பிதா. குரு எனத் தொட்டும் விலகியும் கடந்து... கடவுளைக் கண்டடையட்டும். சொன்னாரே எம் முன்னரே... புழுவாய்ப் பிறக்கினும் என் மனதில் வழுவாதிருக்க வரந்தர வேண்டும். ஞானப்பிள்ளை காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியது. பெரியவரின் பாத்திறம் நோக்கி அதைத் தன் பாத்திரம் என்கிற மனதில் பத்திரப் படுத்திக் கொண்டார் ஞானப்பிள்ளை.

ஆடிப்பெருக்கெனப் பாடிப் பெருக்கி விட்டார் பெரியவர். எம் மனசின் கூளங்களைப் பெருக்கி, குத்துவிளக்காய்ப் பொலிகிறார்... வாழ்க பெரிய திருவடி.


அடியார்கள் சந்திக்கும் வாய்ப்பினை நல்க இறைவன் திருவுளங் கொண்டனன்.

சிறிய திருவடி வந்து சேருமுன்பே அவர் வருகை தர இருப்பதை ஊர் மக்கள் அறிந்ததையும், அவரை வரவேற்க இன்முகமும் எதிர்பார்ப்புமாய்க் காத்திருப்பதையும் அப்பர் கண்டார். மனம் கசிந்தார். தாமே சிறிது அவ்வூரில் தங்கி சிறிய திருவடியைச் சந்திக்கச் சித்தம் கொண்டார்.
பொடியன் அல்லன் இவன் - மானுடத்தின் விடியல் வெளிச்சம். பெருவிரல் என்பது ஆணவம். சுட்டியசையும். இவன் சிறு விரல் - ஞானத்தின் வெளிப்பாடு.

மணியோசை தந்த யானை, கொலுசின் ஓசைக்குக் காத்திருக்கிறது. உலா வருகிற உதய வெளிச்சம் அவன். மேற்கிலிருந்து நான் காத்திருக்கிறேன்.
ஊரெல்லையில் நுழைகையிலேயே சிறிய திருவடி அப்பர் பெருமான் தமக்கெனக் காத்திருக்கச் சித்தங் கொண்டதை அறிந்து நெகிழ்ந்தார். பேறு பெற்றேம் யாம், என அக மகிழ்ந்தார். பல்லக்கை விரைந்தேகப் பணித்தார். மூடுதிரை விலக்கி முகநிலாக் காட்டி ஆவலுடன் அவர் பார்த்தபடி வந்தார்.
பல்லக்கு எத்தனை விரைந்து ஏகினும் அது ஊர்ந்து செல்கிறாப் போலவே உணர்கிறார் ஞானப்பிள்ளை. 

பல்லக்கு வந்த ஓசை கேட்ட பெரியவர் பரவசம் கொண்டு வெளிப்போந்தார். வீதியென்றும் பாராமல் விழுந்து வணங்கினார்.
''
ஐயா என்ன இது? அறிவாலும் வாழ்வாலும் மூத்தவர் நீர். தமிழ்க் கங்கை நீர். நீர் எம்மை வணங்குவதா?'' என் நெகிழ்ந்தார் சிறிய திருவடி.
''
பையா, நீ சிவபிரானின் திருநீற்றுப் பையா, என ஊரே வியக்கிறது. பொய்யா அது? உம்மில் இறைவனைக் காண்கிறேன். கை தாமரையெனத் தானாய்க் குவிகிறதே'' என்றார் பெரியவர்.

''குனிந்து இக்குழந்தையை ஏற்றிக் கொள்கிறது யானை...'' என நகைக்கிறார் ஞானப்பிள்ளை.

''உனைக் காணத் தவங் கிடந்தேனப்பா... வா உள்ளே செல்வோம். விருந்துண்டபடி செவிக்கும் நிறைத்துக் கொள்வோம்'' என்கிறார் பெரியவர்.
சிறிய திருவடிகளைக் காணவே அவருக்கு உள்ளம் பொங்கியது. அருள் சுரந்தது அந்த முகத்தில். என்ன தேஜஸ். பெரியவரது இடுங்கிய கண்களும் கூசின.

இவனைப் பெற இவன் தந்தையும் தாயும் எப்பேறு பெற்றனர் என விம்மியது மனம். இவனது அன்னை, பனித்துளி என்றால்... அந்தப் பனித்துளி சுமந்து காட்டிய பனைமரம் இவன்.


''வழிப் பயணம் சுகமாய் அமைந்ததா?'' என்று பரிவுடன் கேட்டார் பெரியவர்.
''
உம்மை நினைத்தபடி வந்தேன். மாசில் வீணையென எமக்குள் நீர் இசைத்தீர். இசைத்தேர் அசைத்தீர்.''

''ஆஹா! மேற்கைப் பார்த்து வாழ்த்திசை பாடுகிறது கீழ்த்திசை...'' என்றார் பெரியவர்.

செம்புலப் பெயல் நீரென அந்த அன்புடை நெஞ்சங்கள் கலந்தன. இச்சிறுவனிடம் பிரிக்க இயலாத அளவில் தம் மனம் கட்டுண்டதை உணர்கிறார் பெரியவர். இவன் என்னே அழகு. சித்திரம் உயிர்பெற்ற விசித்திரம். சொல்லோ அதைவிட அழகு. அசை போட்டு மகிழத்தக்க அளவில் அசையும் சீரும் எதுகையும் மோனையுமாக... அம்மானைத் துள்ளல்.

பெரியவர் முடிவு செய்து விட்டார். இனி என் பயணங்கள் இப்பிள்ளையுடனேயே....

இவனைப் பிரிதல் இனி என்னால் தாளவியலாத துயரம் தரும்.
வயோதிகத்தின் வேண்டுகோளா இது? என்றது மனது. மெல்ல நகைத்துக் கொள்கிறார். அதைப் பற்றி என்ன? இவன் நிறைமதி. எம் வயதில் இவனை... மதியெனும் கோலாய் ஊன்றி நடக்கிறேன் யான்...
சற்று தயக்கத்துடன் தம் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார் பெரியவர்.

''ஆஹா!, பேறு பெற்றேம்'' என்றார் சிறிய திருவடி.

''இனி நமக்கெனத் தனித்தனிப் பல்லக்குகள் கூடத் தேவையில்லை...'' என்றார் பெரியவர் மகிழ்ச்சியுடன்.

திருத்தலப் பயணங்களை அவர்கள் சேர்ந்தே மேற்கொண்டனர். கடுமையான பயணங்கள். காடும் மலையும் கடினப் பாதையும் எத்தனைக்கெத்தனை அலுப்பைத் தந்தனவோ அத்தனைக்கத்தனை இனிமை பயத்தன இப்போது. மழையும் வெயிலும் ஒரு பொருட்டாய் இல்லை. இருளும், ஒளியும், காடும், மேடும் எனப் புறநிலை அசெளகர்யங்களை அவர்கள் புறந் தள்ளினர். அகம் புகுந்த அகல் வெளிச்சம் அவற்றைச் சட்டை செய்யவில்லை. ஒருவரது அருகாமையை மற்றவர் விரும்பினர். இது பூர்வ ஜென்ம உறவோ என்ற கண்டவர் வியந்தனர். பசுவும் கன்றுமாகவே அவர்களுக்கு இருவரும் காட்சி தந்தனர்.

பல்லக்கு விரைந்து கொண்டிருக்கிறது. மெல்ல இருள் சூழும் மாலை. கரும் பூக்கள் கட்டிய மாலையா இது? அவர்கள் திருமறைக்காடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர். இருள் மெல்ல உலகம் சூழ்ந்து மானுடர்தம் கண்ணுக்குள் புக முயன்று கொண்டிருக்கிறது.


இருள் முற்றுமுன் அவர்கள் ஊரடைய உத்வேகங் கொண்டு கிளம்பியிருந்தனர். பாதை கடுமையாய் அமைந்தது. பல்லக்குச் சுமப்பவர் வருத்தம் கொண்டுவிடக் கூடாதே என்பதே முதற் கவலை இருவருக்கும். அதைவிட கோவில் நடை சாத்தி விடுவார்களோ... இறைவனை தரிசிக்கப் பிந்தி விடுமோ என்கிற நினைவிலேயே இருவரும் தாகத்தில் வாடினர்.

''ஓம் நமச்சிவாய...''
''
சிவாய நமவோம்...''
''
ஓம் நமச்சிவாய...''
''
சிவாய நமவோம்...''

விரைந்தது பல்லக்கு.


ஊர்த்தலைவரின் பூரண கும்ப வரவேற்பை அவர்கள் பாராட்டி மகிழப் பொழுதில்லாதவர் ஆயினர். ''ஐயா எமை மன்னியுங்கள். யாம் இறைவனை தரிசிக்க வந்தவர்கள். சற்றே விலகுவீர். கோவில் நடை சாத்தும் நாழிகை ஆகிவிட்டதல்லவா?'' என்று பதறினார் பெரியவர். அவர் கண்பார்வை வெளிச்சத்திலேயே சற்றுத் தடுமாறும்... இப்போது இந்த இருள் அவருள் கண்ணில் புகுந்து மனதிலும் மெல்லத் திரள - மேகமென உருள ஆரம்பித்திருந்தது.


நடை சாத்தியிருந்தது. பெரியவர் மனம் சோர்கிறார். அவர் வாடிய முகம் கண்டு வாடினார் சிறிய திருவடி.


''சரி, இறைத் திருவுளம் அதுவெனில் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்...'' என்றார் பெரியவர்.

''இறைவன் திருவுளம் அஃதல்ல ஐயா'' என்றார் சிறிய திருவடி புன்னகையுடன்.

''என்ன சொல்கிறீர்?'' என்று திரும்பினார் பெரியவர். ''கோவிலை நாம் திறக்கச் செய்யலாம்...'' என்கிறார் சிறிய திருவடி மேலும் அழுத்தமாய்.
''
அது எப்படி முடியும்? அது மரபல்லவே?'' பெரியவர் விளங்காமல் கேட்டார்.


''இறைவன் தன்னைப் பூட்டிக் கொண்டதை... குழந்தை ஒளிந்து கொண்டு விளையாட்டுக் காட்டுவதாகவே யாம் உணர்ந்தோம்'' என்றார் ஞானப்பிள்ளை. ''நீர் அவரைக் காணாமல் தவிப்பதை வேடிக்கை பார்க்கிற ஆசை இறைவனுக்கு...'' மெல்ல நகைக்கிறார் சிறிய திருவடி. ''உம்மைத் தடுத்தாட் கொண்டு ஏற்றுக் கொண்ட தந்தை அவர். , இப்போது அவரே குழந்தையென உமக்குக் காத்திருக்கிறார். அலகிலா விளையாட்டுக்காரர் இந்த அம்பலவாணர்....''


''ஐயா, உம் தேமதுரத் தமிழோசை அழைப்புக்குக் காத்திருக்கிறாரய்யா ஈசன். உமது பதிகங்களால் இச் சந்நிதி திறக்கட்டும்... யாமும் உம் தமிழை... இசையைக் காதாரக் கேட்டவர் ஆவோம். தமிழ்ப் பூசனையால் இறைவன் வரம் பெற்றவர் ஆவோம்... பாடித் திறவுங்கள் இறைவனின் மனக் கதவை...'' அப்பர் சுவாமிகள் அதை ஏற்றுக் கொண்டார். சொக்கலிங்கத்தை மனசிலே நிறைத்தபடி அவர் சந்நிதி முன்னின்று ஊற்றெனப் பெருக்கினார் உற்சவச் சொற்களை.

ஊரே ஜனமே அந்தப் பாடல்களில் மெய்ம்மறந்து லயித்துக் கிடந்தது.

பதினெட்டுப் பாசுரங்கள். ஓங்கார ரீங்காரம். மானுடத்தை அசைத்தன அச் சொற்பெருக்கு. அந்த வளாகமே மணத்தது அவர் தமிழில். விருட்சங்கள் சிலிர்த்துப் பூக்களை வாரியிறைத்து வாழ்த்தி நின்றன. பதினெட்டு பாசுரங்கள். பதினெட்டாவது பாசுரத்தில் அவ்வதிசயமும் நிகழ்ந்தது. கோவில் வளாகத்துப் பூட்டு தன்னைப்போல வாய் பிளந்து மயங்கி வீழ்ந்தது தரையில். கதவம் திறக்க... உள்ளே சர்வலங்காரப் பொலிவுடன் சொக்கலிங்கம். தீபதூபம் பொலியக் காட்சி தந்தனன். ஊரே அந்த தரிசன இன்பம் தாளாமல் திகைப்புற்றது.

எப்பெரும் நிகழ்ச்சி அது. சொன்னால் நம்பவும் இயலுமோ அதை? விவரிக்கவும் மானுடத்தால் இயலுமோ அப்பேரனுபவத்தை? கண்டவர் விண்டிலர்... என்ற நிலை. கோவில் மணிகள் தாமே அசைந்தன. தேவர்கள் வந்து நடாத்திய பூஜை அது. விண்ணுலகக் காட்சிதாமோ அது... இப்போது நம் கண்ணுக்கு விருந்தாய்க் கிட்டியதே... திகட்டியதே... அப்பர் வந்த வேளையில் யாம் புண்ணியம் பெற்றேம் என அத்தனை பேரும் நெகிழ்ந்தனர்.

''
ஐயா, உம் தமிழ்த் திறம் உலகறிய இறைவனின் திருவிளையாடல் அல்லவா இது...'' என நெகிழ்ந்தார் சிறிய திருவடி.
பெரியவர் புன்னகைத்தார். ''அப்படிச் சொல்லிவிடாதே அப்பா. இப்போது உன் முறை...'' என்றார் சுவாமிகள். ''நடையை மீண்டும் சாத்தி இறைப்பணி நிறைவு செய்வது உம் பொறுப்பு'' என்றார் பெரிய திருவடி.

''அதுவே பொருத்தம்'' என வேண்டிக் கொண்டனர் ஜனங்கள்.

''முயற்சி செய்கிறேன்'' என்று ஞானப்பிள்ளை பாட ஆரம்பித்தார். என்ன குரல்? என்ன இழைவும், குழைவும், ஜாலமும், வித்தையும்...? ஒரே பாடல். 
நடை மீண்டும் சாத்திக் கொள்கிறது.

ஹா... என ஆர்ப்பரித்தது கூட்டம்.


சிலிர்த்தது பெரியவருக்கு. கண்கள் பனித்தன. ''எப்பெரும் மகவு அப்பா நீ. பதினெட்டு பாடல்களில் எமது வேண்டுகோளுக்கு இறைவன் அருள் செய்தனன். நீயோ ஒரே பாடலில் அவன் மனதை வென்று விட்டாய் எனில் உனது பக்திக்கு... தமிழுக்கு முன்னே யான் எம்மாத்திரும்'' என்று வணங்கினார் பெரியவர்.

''
இல்லை ஐயா இல்லை. இது மழலைச் சொல். ஆழமும் சாரமும் தத்துவமும் அவ்வளவேயானது என்பதால் இறைவன் ஒரே பாடலில் கட்டுண்டனன். உமது ஆழ்ந்து அகண்ட புலமையின் வளமையில் மேலும் மேலும் கேட்க அவன் சித்தங் கொண்டனன்...'' என்றார் சிறிய திருவடி.

''
நீர் ஐயன் எடுத்துக் கொண்ட தத்துப்பிள்ளை. நான் உமையிடம் பரிவு கண்ட முத்துப்பிள்ளை. நான் அன்பு உருவானவன். நீர் அறிவுருவானவன். உமது அறிவுக் கடலில் விளைந்த முத்து நான். கவிதை என்னுடையது என்றாலும் கூட, பெருமை உமக்கே. உம் பிந்தைய தலைமுறைக்காரன் நான். என் பெருமையின் சொந்தக்காரர் நீரே...

நான் நும் தோளேறி நின்று கூவிய சேவல். நும் கடலில் கிளைத்த நதி'' என்றார் சிறிய திருவடி.

ஹா... என வியந்து நின்றனர் மக்கள்.

Comments

Popular posts from this blog