15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008 நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை

15 02 2015 -ICSA Centre Egmore Chennai 008
நன்றி ஓ ஹென்றி – சிறுகதைத் தொகுதி வெளியீடு ஏற்புரை



பேச என ஏற்கனவே சுருக்கமாகத் தான் வைத்திருந்தேன். பொக்கிஷம் புத்தக அங்காடி பதிப்பகத் துவக்க விழா, மற்றும் எனது மற்றம் எம்.ஜி. சுரேஷின்  நூல்கள் வெளியீடு… நேரம் நழுவிக்கொண்டே வந்தது. எனது ஏற்புரைக்கு மணி எட்டே முக்கால். கேட்பவர்களின் மனநிலை பற்றித் தெரியவில்லை. எனக்குத் தகுதியுரை அளித்த லா.ச.ரா. சப்தரிஷி லா.ச.ராவையும், சுநுஜாதாவையும் திரும்பத் திரும்ப வியந்தும் நயந்தும் என்னைப் பற்றி அதன்கூடவும் பேசியதாகப் பட்டது. ரொம்ப சிறிய அளவில் தான் நான் ஏற்புரை வழங்க வேண்டும், என்று பட்டுவிட்டது. நன்றி ஓ ஹென்றி. நன்றி பேச்சாளர்கள். நன்றி பதிப்பாளர். நன்றி லா ச ரா, நன்றி சுஜாதா… என்று அமர்ந்து விட்டேன்.

என்றாலும் பேச வைத்திருந்த சிறு உரை அதைக் கீழே தரலாம்… நமது இணைய வாசகர்களுக்கு என… என்று பகிர்கிறேன்…


தோள் கண்டார்

தோளே கண்டார்
·       
எஸ். சங்கரநாராயணன்


பொக்கிஷம் புத்தக அங்காடியின் எனது பதிப்பாளர் மாக்சிமுக்கு நல் வாழ்த்துக்கள். முதல் இரண்டு நூல்களையுமே முத்திரை நூலகளாகத் தேர்ந்தெடுத்து அவர் வெளியிட்டிருக்கிறார். ‘அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே‘ என்கிற தன் அனுமானத்தை விஸ்தரித்து விளக்கி விவரித்து எம்.ஜி. சுரேஷ் எழுதிய நூல் தெளிவும் சுவாரஸ்யமும் மிக்கது. சில தத்துவப் புத்தகங்கள் நம்மைத் தெளிவிக்க என எழுத ஆரம்பிக்கப் பட்டு, கடைசியில், வாசித்து முடிக்கையில் இருக்கிற கொஞ்ச நஞ்சத் தெளிவையும் குழப்பிவிட்டு விடும். தலையில் அடிபட்டவன் கண்ணை முழித்துப் பார்க்கும்போது ‘நான் எங்கருக்கேன்?“ என்று சினிமாவில் கேட்பான் அல்லவா? அந்தக் கதை ஆகிவிடும். எம்.ஜி. சுரேஷ் தன்னளவிலேயே  தெளிந்து பிறகு பேனா பிடிக்கிறார். தன் வாசகர்கள் மேல் அவருக்கு அவ்வளவில் இரக்கம் இருக்கிறது.

    ஆனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பில் இருந்தே இதில் எனக்கு புரிதல் பிரச்னை. ‘எல்லாக் கோட்பாடுகளும் அனுமானங்களே‘ என்கிறார் சுரேஷ். அது அவரது கோட்பாடு. அது அவரது அனுமானம். என்றால் என்ன அர்த்தம்? ‘எல்லாக் கோட்பாடுகளும் அனுமானங்கள் அல்ல‘ என்கிற வாய்ப்பையும் அந்தத் தலைப்பே அளிக்கிறது அல்லவா? தத்தளிக்கிற வாசகனைக் கரை சேர்க்கச் சொன்னால் தண்ணீரில் அவர்களே தள்ளி விட்டால் எப்படி?

     இது கோட்பாட்டு விமரிசனம். கதைகளின் விமர்சனம் பற்றிப் பொதுவாகப் பேசலாம். இங்கே என் புத்தகம் பற்றி உரையாடியவர்கள் பற்றி அல்லாமல், பொதுவாக நாம் பேசுவோம்.

     படைப்பு என்பதே வாழ்க்கையின் பிரதிபலிப்பு. உண்மையும் கற்பனையும் ஒரு முயக்கத்தில் சுவாரஸ்யமான படைப்பு என ஆகி, வாழ்க்கையை ருசிக்கத் தக்கதாய் மாற்ற ஒரு படைப்பு அவ்வளவில் பாடுபடுகிறது. ஆனால் விமரிசனம் அதை மீண்டும் சுருக்கி உள்ளங் கைக்குள் அமுக்கிவிடப் பார்க்கிறது. எத்தகைய பேராசை அது.

சிற்றாசை என்று கூட நான் சொல்லுவேன்.

     கம்பர் சொல்வாரே, தோள் கண்டார், தோளே கண்டார் – விமர்சகர்களுக்காகச் சொன்னது போல் இருக்கிறது. ஒரு படைப்பு பற்றிய ஒரு விமரிசனம் ஒரு வாழ்க்கையின் மற்றோர் பக்கத்தை தானறியாமல் மறைத்து விடுகிறது. இலையில் பரிமாறப் பட்ட காய்கள், கனிகள் எல்லாவற்றையும் விட இலையில் விழுந்த சோற்றை, அதன் ருசியை ஒரு விமரிசனம் பேசுவதாகக் கொள்ளலாம்.

விமரிசிக்கப்படாத படைப்பில் மேலும் விஷயங்கள் வாசகனுக்குக் கிடைக்கவும் கூடும், என்றே நம்பலாம். என்றால் விமரிசனம் தேவையா?.. என்ற நியாயமான கேள்வியும் எழுகிறது. தேவையில்லை என்று எப்படிச் சொல்வது?... இங்கேதான் வாசகனுக்குப் படைப்பில் உள்ள பங்கு பிரதானப் படுகிறது. என்ன அது?

விமரிசனத்தை கவனிக்கிற வாசகன் தன்னளவில் அந்தப் படைப்பை தன் சுயமுகத்தோடு அணுகி, அந்த விமரிசனத்தில் விடுபட்டவற்றையோ, அல்லது… அந்த விமரிசனத்தில் தான் ஒத்துப்போகிற விஷயத்தையோ யோசிக்கையில் அந்தப் படைப்பு மேலும் மெருகு பெறுகிறது. பொலிவு பெறுகிறது, எனலாம்.

வாசகனை வாழ்க்கை நோக்கி ஒரு படைப்பு, ஒரு விமரிசனத்தின் வழியாக நடத்திக் கூட்டிச் சொல்கிற நிலை அற்புதமானது அல்லவா? விமரிசகர்கள் வாழ்க. முதல்கட்ட தாக்குதலாக்கு படைப்பாளனுக்கு முந்தி, அவர்கள் இலக்காகிறார்கள். தியாக சீலர்கள் அவர்கள். அவர்கள் வாழ்க.

இலக்கியம் வாழ்க்கையின் கையள்ளிய குளிர்ந்த ஓடைநீர். தொண்டைக்குள் இதமாய் இறங்கும் அதன் குளுமை, நாவில் இறங்கும் அதன் ருசி அலாதியானது. எழுத்தாளனின் நெஞ்சத்தின் ஈர ஓடையில் இருந்து அது பெருகி வாசக இதயத்தில் வழிய முயற்சிக்கிறது. அதில் தத்துவங்கள் தரிசனப்படலாம். அவை கூழாங்கற்களே. வெறும் மின்னல் ஒளிப் பிரதிகளே. வாழ்க்கை எல்லாமாக இருக்கிறது. படைப்பும் எல்லாமாக பரந்து விரிந்து கிடக்கிறது. அதைத்தான் வள்ளுவர் ‘நவில்தொறும் நூல் நயம்‘ என்கிறார். வள்ளுவர் வாழ்க.

என் வாசகர்களை, எம்.ஜி. சுரேஷின் வாசகர்களை ஒரு படைப்பு சார்ந்த வியூகத்துக்கு அழைக்கிறேன். நூல்கள் பற்றிப் பேசிய சான்றோர்களுக்கும், வந்து கேட்டு மகிழ்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

விமரிசனம் மட்டுமல்ல. ஒரு படைப்பு பற்றி, பேசுவதே, அதும் அந்த எழுத்தளனே பேசுவதே கூட, வன்முறை தான் ஒரு விதத்தில். நாம் நட்புடன் பிரிவோம்… என்கிற அளவில் முடித்துக் கொள்கிறேன்.
·       
91 97899 87842

     

Comments

  1. நிகழ்வில் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. உங்கள் பதிவு அந்த குறையை போக்கிவிட்டது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. எனக்குத் தகுதியுரை அளித்த லா.ச.ரா. சப்தரிஷி லா.ச.ராவையும், சுநுஜாதாவையும் திரும்பத் திரும்ப வியந்தும் நயந்தும் என்னைப் பற்றி அதன்கூடவும் பேசியதாகப் பட்டது. ரொம்ப சிறிய அளவில் தான் நான் ஏற்புரை வழங்க வேண்டும், என்று பட்டுவிட்டது......புரியவில்லை .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog