திரைப்பட விமரிசனம்

திரைப்பார்வை - 
எஸ். சங்கரநாராயணன்
• • •
கூ ரை ய ற் று

தூண்கள் மட்டும்…
*

முற்றிலும் தற்காலத் தளத்தில் நிகழ்கால சூட்டோடு, இன்றைய இளைஞர்களின் மனப் போக்குகளை இயல்புப்படுத்தி, அதில் ‘கல்யாணம் வேணாம். சேர்ந்து வாழ்வோம்‘ என்கிற, அவர்களிடையே கிளைத்துவரும் புதிய சிந்தனையை அடையாளப்படுத்தி கதை வளர்கிறது. இந்தக் கதையை இன்றைய இளைய இயக்குநர்களில் ஒருவர் எடுத்திருக்க வேணாமா? (தாடி மீசை குடி குத்துப்பாட்டு, காதலுக்கு மல்லிகை நிறைய வைத்திருக்கும் கூந்தலை உடைய கிராமத்துப் பெண்ணிடம் வம்பு… என இளைஞர் பட்டாளம், ஜாலியா படம் எடுக்கிறது.) இதை எடுக்க, அதை வெற்றிகரமாய் அவர் செய்திருக்கிறாரா, என்பதை விட, அவர்தான் இதைச் செய்தார் என்பது சிறப்பு. மணி ரத்தினத்தை அதற்காகவே நாம் கவனிக்க வேண்டும்.

என்ன சொல்கிறார் மணி ரத்தினம்? லிவிங் டுகெதர், சரியா? சரியா வருமா? “அப்படியெல்லாம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கொண்டு குடித்தனமாய் வாழ்வதே சுபிட்சம்“ என்கிறார் மணி ரத்தினம். அதை இந்த இளைய பாத்திரங்கள் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். ஆனால் இந்த இரண்டு இளவட்டங்களையும் ஒரு பெரு மழையில் அல்லாட விட்டு மாத்தி மாத்தி வசனம் பேசி… படத்தின் மொத்த வசனத்தில் பாதியை இந்த ஒரு காட்சியில் செலவழித்திருக்கிறார் மணி ரத்தினம். பெரு மழையில் பெரு வசனங்கள்… காதலன் இன்னுங் கொஞ்சம் பேசுமுன் அவள் “சரி கல்யாணம் பண்ணிக்கலாம்‘‘ என்று விடுகிறாள்.

இந்த இளவட்டங்களின் பார்வையில், அவர்களுக்கு வாழ இடம் அளித்த ஒரு முதிய தம்பதியரின் வாழ்க்கை சித்தரிக்கப்படுகிறது. அந்த ‘அம்மையார்‘ மறதி நோயால் பீடிக்கப் படுகிறார். அப்போது அந்த ‘அப்பாவார்‘ நனிப் பரிந்து அவளைப் பேணுகிறார். ஒரு நீள் செவ்வக சன்னல் பிளவு வழியே அவர்கள் பரிவு காட்டப் படுகிறது. முதியவர்களுக்குள்ளே அநேக விஷயங்கள் ஒத்துப் போகவில்லை தான். ஆனாலும் அவளது இயலாமையின் போது, கைத் தாங்குகிறார் அவர். அதற்குத்தான் கல்யாணம் செஞ்சிக்கறது, என்று அவர்களைப் பார்க்கிற இந்த இளவட்டங்கள் ரெண்டு பேரும் புரிந்து கொள்கிறார்கள். இது யதார்த்தப் படமா? புதுமைப் படமா? புதுமையில் ஆரம்பித்து யதார்த்தமே ஓ.கே. என்கிற படமா? கல்யாணம் என்பதே என்னிக்காவது உடம்பு முடியாமல் போனால் பாத்துக்கணும், என்பதற்காகப் பண்ணிக் கொள்வது என்கிறாரா மணி ரத்தினம்? சரி, என்னதான் சொல்கிறார்?

ஆரம்பக் காட்சியில் கதாநாயகன் வருகிற ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் அவள். பிறகு கதாநாயகனிடம் வயப்படுகிறாள். காதல் வயப்படுகிறாள், என எழுதக் கூடாது. இது லிவிங் டுகெதர் கதையாச்சே. ஏன் தற்கொலைக்கு முயன்றாய், என்று அவன் கேட்க, அவளை அவள்பணத்துக்காக பெண்பார்க்க ஒருவன் வந்தான். அவனை தன்னிடம் இருந்து கழட்டிவிட இந்த நாடகம் என்கிறாள். உடனே நாம எல்லாரும் ‘சரி‘ என்று அந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிட்டு படத்தைத் தொடர்ந்து பார்ப்போம், என மணி ரத்தினம் நினைக்கிறார். இந்தப் புதியவன், கதாநாயகன் இவளை இவள்பணத்துக்காகக் காதலிக்கவில்லை என அவள் எப்படியோ கண்டுபிடித்து விடுகிறாள்!

தற்கொலை முயற்சி என்பது எத்தனை பெரிய விஷயம்? அப்படி ஒரு காட்சி துவங்குகையில் அந்தப் பாத்திரப் படைப்பைச் சுற்றி கதை எப்படிப் பின்னிப் போகும். அவள் உணர்ச்சிகளை எப்படி உற்று உள்வாங்கும். கதையில் வெறும் திடுக் தந்துவிட்டு கழண்டு கொண்டுவிடுகிறது அது. சம்பவங்களைத் தொடராக்கி அடுத்த உணர்ச்சித் தீவிரத்தை நோக்கிக் கதை நகர்த்திச்செல்லப் படவில்லை.

சர்ச்சில் வேறொரு கல்யாணத்தின் போது அவனும் அவளும் பத்து ஆட்கள் இடைவெளியில் கலகலக்கிறார்கள். அங்கேயே அவளது அலைபேசி எண்ணை அவன் கேட்டுப் பெற்று, அலைபேச்சில் கலகலப்பு தொடர்கிறது. தொடர்ந்து இளமைக் கும்மாளம் ஆரம்பமாகிறது. அவர்கள் லிவிங் டுகெதர் பாணியில் சேரப் போகிறார்கள், என்கிற அளவில் வசனங்கள். கல்யாணம் நான்சென்ஸ். அவசர அவசரமா செக்ஸ், உடனே குழந்தை, அது நம்ம மேலேயே கக்கா போகும்… என புது மண தம்பதியரின் வாழ்க்கை சார்ந்து கிண்டல். கடைசியில் திருமணம் சரி என்கிற அளவில், இந்தப் படம் முடியும் போது ‘இந்த‘ வசனங்களை நாம மறந்துவிட வேண்டும், என்கிறார் மணி ரத்தினம். கக்கா போகாத குழந்தை பெற்றுக் கொள்வார்களாக இருக்கும்.

ஐ. ட்டி. சார்ந்த பின்னணி என்கிறார்கள். அவன் ஐ. ட்டி.க்காரன். அவர்களின் ஆகப் பரபரப்பான வாழ்க்கையை மணி ரத்தினம் காட்ட யோசிக்கவே இல்லை. திடீரென்று அலுவலகத்தை மறந்து, அல்லது துறந்து காம ஈர்ப்பைப் பேணுகிறார்கள். போஷிக்கிறார்கள். அவள் ஆர்க்கிடெக்ட். அவள் வெளியூர் போகிற வாய்ப்பு வந்தால், இவனும் கூடவே அதே ரயிலில் ஓடிவந்து ஏறிக் கொள்கிறான். அங்கே அவள் தன் அம்மா அப்பா ரெண்டு பேரும் தனது சிறு வயதில் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், என்று சோகமாய்ப் பேசுகிறாள். விவாகரத்து முடிந்து அப்பா அம்மா, யார் கூடவும் நான் போக விரும்பவில்லை, என்று அந்தச் சிறுமிவயதிலேயே நினைத்ததாகச் சொல்கிறாள்.

சுதந்திரமாய்த் திரிகிறதில் அவள் இச்சை அப்போது ரசிகர்களாகிய நமக்கு அறியத் தரப்படுகிறது. வெளியூரில் ரயிலை விட்டுவிட்டு அவனுடன் தங்குகிறாள். பாட்டு கூட பாடுகிறாள். ஊர் திரும்பியதும் அம்மா திட்ட என்றே வந்து காத்திருக்கிறாள். இவள் தற்கொலை செய்ய முயன்றது தெரியாத அம்மா. இப்போது “நேற்று நீ யார் கூடத் தங்கினே? எனக்கு எல்லாம் தெரியும். நான் உன்னைக் கண்காணிச்சிக்கிட்டே இருக்கிறேன்“ என்கிறாள்.

அப்புறம் ஒரு முதிய தம்பதியரின் வீட்டில் இவர்கள் ஒன்றாகத் தங்குகிறார்கள். முதிய ஆண் அவர்கள் சேர்ந்துதங்க இடம் தர மறுக்கிறார். முதிய பெண் ஒரு கர்நாடக சங்கீதப் பாடகி. அவளை ஒரு கர்நாடக சங்கீதப் பாடல் பாடி இந்த இளம் பெண் அசத்தி விடுகிறாள். உடனே வீடு தரப்படுகிறது. நல்லா பாடினால் வாடகைக்கு அதிலும் மும்பையில் வீடு கிடைத்து விடும், என்பது புதிய செய்தி. அதுவும் ‘லிவிங் டுகெத‘ருக்கு வீடு கிடைப்பது ஆச்சர்யமே.

பாடத் தெரியாத லிவிங் டுகெதர் பெண் பாவம் தான்.

அந்த அம்மாள் பாட்டுக் கச்சேரி ஒன்றுக்கு இளம் பையனுடன் போகிறாள். அவளே பாடுவாள், என அவளது கணவர் அறிமுகம் செய்கிறார். ஆனால் அவள் பாட முயற்சிக்கவே இல்லை. இவ்வளவு ரசனையும், ஈர்ப்பும் கர்நாடக இசையில் உள்ளவர்கள் எதாவது முணுமுணுத்துக் கொண்டே யிருப்பார்கள் என்கிற அளவில் பாத்திரப் படைப்பு துலக்கமாய் இல்லை. அவளது கணவர் முதல்அறிமுகக் காட்சியில் அந்த அம்மாளுக்கு சமையல் செய்து கொண்டிருக்கிறார். படம் முடியும் வரை அவர் வீட்டில் இருந்தால் சமையல் கூடத்திலேயே இருக்கிறார். அந்த அம்மாள் கையில் கரண்டியையும் பார்க்க முடியவில்லை, தம்புராவையும் தரிசிக்க முடியவில்லை. புள்ளி வைத்துவிட்டு கோலம் போட மறந்து விட்டாப் போல அமைந்திருக்கிறது கதையோட்டம்.

சுடிதார் போட்ட இளம் பெண்ணிடம் கவர்ச்சி வசனங்கள். கதாநாயகன் பேசுகிறான். “துச்சாதனனா மாறட்டுமா?“ அவள் அவனை மேலும் பேசக் தூண்டுகிறாளாம். “அப்புறம்?“ துப்பட்டாவை வேணுமானால் உருவலாம் அவன். அது என்ன துகில் உரிதல்?
 இளம் பெண்ணை கர்நாடக சங்கீதத்தில் தோய்ந்தவளாக ஒரு காட்சியில், வீட்டுக்கார அம்மாளைக் கவர என்று மாத்திரம் பயன்படுத்தி விட்டு, அதை மெல்ல பின்னணி இசையில் மாத்திரம் காட்டுகிறார் மணி ரத்தினம். அதுகூட இவர் வேலை அல்ல. ஏ. ஆர். ரகுமானின் வேலை. படத்தின் ஆகச் சிறந்த அம்சம் சூழல் அறிந்து புதிய ஒலிகளைப் பயன்படுத்தி புதுமை சமைத்திருக்கிறார் ரகுமான். இளமையான காட்சி எடுப்புகளுக்கு ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம். அவர் தயாராய் இருந்தாலும், காட்சிகளை அடுக்குவதிலும், பதிவதிலும் சாதாரண அளவிலேயே அழுத்தமோ, முத்திரையோ இல்லாமல் இயக்குனர் இயங்கியிருக்கிறாப் போல் இருக்கிறது.

மணி ரத்தினத்தின் முத்திரை ஓர் இடத்தில் அருமையாய் வந்து விழுந்திருந்தது. அவள் கர்ப்பமாக இருப்பதாக அவன் பதறும்படி, ஒரு மகப்பேறு இல்லத்துக்கு அவனையும் அவள் தரதரவென்று இழுத்துப் போகிறாள். அவன் திகைக்க அவள் “இவர்களின் ஒரு கட்டட பிராஜெக்ட் விஷயமாக வந்தேன்“ என அவனைக் குறும்புடன் தளர்த்துவது அழகு. இப்படி நாலைந்து இடங்கள் இருந்திருக்கலாம். எதிர்பார்க்க வைக்கும் அளவுக்கு இந்தக் காட்சி நிமிர்ந்து உட்கார வைத்தது. ஆனால் வேறு காட்சிகள் ஒன்று கூட இந்தத் தரத்தில் இல்லை.

கர்நாடக இசையின் ரசிகை என அவள் பாடும் பாடல் கூட ஆணிடம் இறைஞ்சும் பெண்ணின் தாபப் பாடல் தான். லிவிங் டுகெதரின் நவீனத்தன்மையை ஒட்டி அந்தக் காட்சியை வடிவமைக்க மணி ரத்தினம் முயற்சித்திருக்கலாமோ என்று பட்டது. அந்த முதிய அம்மையார் எதோ பாடிக் கொண்டிருக்க, இவள் போய் கூட அமர்ந்து இயல்பாய் இணைந்து கொண்டிருக்கலாம், என்றெல்லாங் கூட மனசில் அலையடித்தது.

முதிய தம்பதிகளில் அவர்தான் கடைசி காலத்தில் அவளைப் பராமரிக்கிறார், என்பது கதையம்சம். இளம் காதலியும் அவனிடம் கடைசி காலத்தில் இப்படி என்னை அனுசரணையாய்ப் பார்த்துக் கொள்வாயா, என்று கேட்டு, அவன் சம்மதித்ததும், திருமணத்துக்கு சம்மதிக்கிறாள். அவனுக்கு எதும் ஆனால் இவள் முடிவு என்ன, என்ற கேள்வியையே மணி ரத்தினம் விட்டு விடுகிறார். பெண் சென்டிமென்ட் நிறைந்த சினிமாவில் ஆண் நாசமாப் போனால் கவலைப்பட வேண்டாம். பெண்மையை உயர்த்திப் பிடிக்கலாம், என அவர் குறுக்கு சால் ஓட்டி விட்டார் போல.

மறதி நோயில் அந்த அம்மாள் முதலில் ஒருதரம் காணாமல் போகிறாள். கூட்டி வருகிறார்கள். திருப்பியும் காணாமல் போகிறாள். ரெண்டு முறையும் அவள் கணவர் அல்ல, இந்த இளம் காதலர்களே கூட்டி வருகிறார்கள். ஆனால் அவர் இவளை நல்லா பார்த்துக் கொள்கிறார், என்று இளம் காதலர்கள் புரிந்து கொள்கிறார்கள்.

இந்த இளம் வயதுக்காரர்களின் துடிப்பும் அறிவுச் சுடர் மிளிரும் செயல்பாடுகளும் மிடுக்கும் எடுப்பும்… எதுவுமே கதையில் இல்லை. அவள் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து கோரினால் கல்யாணம் வேணாம், திருமண பந்தத்தில் இருக்கும் வரை அவர்கள் சந்தோஷமாக சேர்ந்து வாழவில்லை, என்று ஒரு வசனம் சொல்லிவிட்டால் இளம் பெண்ணின் பாத்திரப் படைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும், என மணி ரத்தினம் எதிர்பார்க்க முடியாது. அது டூ ஸ்கொயர் மச். இவள் ஏன் நன்றாக வாழும் இன்னோரு தம்பதியை உதாரணமாகக் கொள்ளக் கூடாது?... என்ற கேள்வி எழுகிறது.

அவள் சொல்வதற்கு தர்க்கம் வைக்கும் மணி ரத்தினம், கதாநாயகன் இப்படி லிவிங் டுகெதர் முறையில் வாழ எந்த தர்க்கத்தையும் வைக்க யோசிக்கவேயில்லை. திருமண பந்த வாழ்க்கையை அவன் புறக்கணிக்க யாதொரு சூழலோ, அவன்பக்க நெருக்கடியோ, அலலது அறிவார்ந்த முன்னெடுப்போ இல்லை. நீ கல்யாணம்னா பண்ணிக்கோ, சேர்ந்து வாழணும்னா வாழு, என அவன் கை கட்டிக் காத்திருக்கிறான். எனக்கு செக்ஸ் பசி தீர்ந்தாப் போதும்.

அவர்கள் பிரியும் வேளை வரும்போது அவன் “நீ இல்லாமல் நான் இல்லை“ என்று வாய் திறக்கிறான். அதற்கு அந்த அம்மையார் இன்னொரு தரம் தொலைந்துபோக வேண்டியிருக்கிறது. அதற்கு பெரு மழை ஒன்று வேண்டியிருக்கிறது…

உண்மையில் லிவிங் டுகெதர் என ஆரம்பித்து, கடைசியில் திருமண பந்தம் பாதுகாப்பானது, பிற்காலத்தில் முதிய காலத்தில் அவசியப் படுவது, என்பது அன்றி வேறு முடிவு என்ன கொடுக்க முடியும், என மணி ரத்தினம் தனக்குள் போராடியிருக்கக் கூடும்.

அதுவரை நவீன உடையில் சுற்றித் திரிகிற இளசுகள். சட்டென அவள் தலை நிறைய பூவும் புடவைமாய் முகூர்த்தம் பார்த்து தாலி கட்டிக் கொள்வதும், அவன் சமத்து மாப்பிள்ளையாய் மாறுவதும் அதுவரை அவர் காட்டிய அத்தனையையும், அதற்கு என அவர் வரைந்த நியாய வசனங்களையும் கேலிக் கூத்தாக்கி விடுகிறது.

பாலசந்தர், முதிர்ந்த ஆண் முகேஷ், முதிர்கன்னி குஷ்பு – இருவரையும் ஒரே கூரையடியில் லிவிங் டுகெதராக தங்க வைத்து, தற்செயலாபக இளைய காதலரகள் என ஒரு ஜோடியைப் புகுத்தி, அவர்களைப் பார்த்து இவர்கள் கல்யாணம் செய்துகொள்ள முடிவுக்கு நெருங்குகிறார்கள்… என வளைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார். ‘ஜாதிமல்லி.‘ அதிலும் அவர்கள் கல்யாணம் வரை கதை வளராமல்… ஜாதி, கலவரம் அது இதுவென்று, டிராஃபிக் போலிஸ் வழி மாத்தி விட்டாப் போல கதை வேறொரு இடத்தில் போய் முட்டி நிற்கும். அதே சிக்கலை மணி ரத்தினமும் கதையை முடிக்கையில் சந்தித்து திகைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

கூரையற்று, தூண்கள் மாத்திரமேயான கட்டடம் போல இருக்கிறது மணி ரத்தினத்தின் ’ஓ காதல் கண்மணி.‘

• • •




Comments

Popular posts from this blog