short story
நன்றி அந்திமழை மாத இதழ்
ஆகஸ்ட் 2015

இருள்வட்டம்
எஸ். சங்கரநாராயணன்

சித்தப்பா எங்களுடன் இல்லை. பஜனைமடத்துக்கு அருகே தனியாய் நெல் அடுக்க என்று ஒரு கிட்டங்கி இருந்தது எங்களுக்கு. சித்தப்பா அங்கே தங்கிக்கொண்டார். என் சின்ன வயசில் இருந்தே அப்படித்தான். சாப்பிடக் கூட அவர் இங்கே, எங்கள் வீட்டுக்கு வருவது கிடையாது. அப்பாதான் சித்தப்பாவுக்கு சாப்பாடு எடுத்துப் போவார். “ஏம்ப்பா, நான் வேணா எடுத்திட்டுப் போறேனே…“ என்றால் அப்பா மறுத்து விடுவார். நாங்கள் சித்தப்பாவுக்குச் சாப்பாடு எடுத்துப் போவது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை…. என்று பிறகு எனக்குத் தெரிந்தது. சித்தப்பா குடும்பப் பொறுப்பு என்று எதுவும் இல்லாமல் இஷ்டப்படி சுதந்திரமாக இருந்தார். அவருக்கு அது பிடித்திருந்தது. அவர் சுபாவம் அது, என நினைத்துக் கொண்டேன். அம்மாவுக்கு அது பிடிக்கவில்லை போல. நாங்களும் அப்படி எதிலும் காலூனாமல் ‘திரிய‘ ஆசைப்பட்டு விடுவோமோ என்று அம்மா ஒருவேளை பயந்தாளோ என்னவோ. அம்மாவிடம் நிறைய ரகசியங்கள் இருக்கிறதாகவே நம்புகிறேன். எதையும் சட்டென வெளிப்படையாக அம்மா பேசி நான் பார்த்ததே இல்லை.
     பிள்ளைகளையிட்டு அம்மா கண்டிப்பாக இருந்தாள். படிக்கிற நேரம் படிக்க வேண்டும். விளையாட்டு நேரம் வெளியே ஓடலாம். கைகால் கழுவி சுத்தம் செய்துகொண்டு சாப்பிட வரவேண்டும். நேரப்படி தூங்கப்போய் காலை சீக்கிரம் எழுந்துகொள்ள வேண்டும். அம்மா நியதிகளைக் கைக்கொள்ள விரும்பினாள். எங்களின் நல்ல பழக்கங்கள் அனைத்தும் அம்மாவிடம் இருந்து வந்தவையாகவே இருக்கும். ஊர்ப் பெரியவர்களே எங்களை “சங்கரி பிள்ளையா?“ என்றுதான் விசாரிப்பார்கள். அப்பா ஊரில் வாத்தியார். ஆனால் அவர்கள் எங்களில் அம்மாவின் அடையாளங்களைக் கண்டார்கள்!

    அப்பா அத்தனை கட்டுக்கோப்பானவர் அல்ல. விறுவிறுவென்று காரியங்கள் செய்ய மாட்டார். எல்லாத்திலும் ஒரு நிதானம். இத்தனைக்கும் அப்பா பள்ளிக்கூட வாத்தியார். அப்பாவை விட அம்மா எங்களிடம் கண்டிப்பாய் இருந்தாள். அப்பாவிடமே அம்மா சில விஷயங்களில் கண்டிப்பாய் இருந்தாள். அப்பா நல்ல மனசுக்காரர். ஏமாளி. நிறையப் பேர் அவரிடம் அவர்மனசை இளக்கி காரியம் சாதித்துக் கொண்டார்கள். கடன் வாங்கிவிட்டு திரும்பத் தராமல் போக்குக் காட்டினார்கள். அம்மா கேள்விப்பட்டால் அவள் போய்நின்று அந்தக் கடனைத் திரும்ப வாங்கி வந்தாள். அம்மாவிடம் ஊரில் நல்ல மரியாதை இருந்தது. குட்டையான சற்று குண்டான அம்மா. ஊரில் எல்லாரும் அம்மாவின் சாமர்த்தியத்தில் தான் எங்க குடும்ப வண்டி ஓடுகிறது, என்பார்கள். இது குறித்து அப்பாவிடம் கேட்டால் அப்பா புன்னகைப்பார். அது சரி என்றும் இராது, தவறு என்றும் இராது. புன்னகை மன்னன்.

     எங்கள் தாத்தாவுக்கு ஒரு பெண், அடுத்து இரண்டும் பையன்கள். மூத்தது எங்கள் அப்பா. வீடு வாசல் தோப்பு துரவு என்று இருந்தாலும் அப்பாவுக்கு வெளியே போய் வேலை செய்ய இஷ்டமாயிற்று. அப்பா டீச்சர் ட்ரெய்னிங் முடித்து இதே ஊரிலேயே வேலையிலும் அமர்ந்தார். ஆங்கிலப் பாடங்களை அப்பா ரொம்ப ரசித்து நடத்துவார். ‘தி உட்ஸ் ஆர் லவ்லி டார்க் அன்ட் டீப்‘ என ராகமாய் அவர் கவிதைகளை உரக்கப் பாடுவார். ‘உறங்கு கின்ற கும்பகர்ணா உறங்கு கின்ற போதிலே…‘ என்ற கம்பராமாயணப் பாடல் நினைவுக்கு வரும். தமிழைப் போலவே ஆங்கிலப் பாடத்தை நடத்துவார் அப்பா. நான் இப்போது எட்டாவது படிக்கிறேன். அப்பா எனக்கும் ஆங்கில போதகர்.

சித்தப்பாவுக்குப் படிப்பு வரவில்லை. தோப்பு நிழல்களில் அவர் மகா ஆனந்தமாய் சீட்டாடினார். ஆடு புலி ஆடினார். இரவில் வெகுநேரம் முழித்திருந்தார். காலையில் ஆற அமர எழுந்து வயல் கிணற்றில் போய் குபீரென்று குதித்து கும்மாளமாய்க் குளித்தார். எப்பவும் நாலு நண்பர்கள் கூட வேண்டும் சித்தப்பாவுக்கு. விவசாயத்தையோ தோட்டத்தையோ அவர் பார்த்துக் கொண்டதே இல்லை. அதற்கும் அப்பாதான் தேவையானால் பள்ளிக்கூடத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு கவனித்தார். அதில் அம்மாவுக்கு வருத்தம் இருக்கலாம்…

கிராமத்து மனிதர்கள் அவர்கள். ரெண்டு பேருக்குமே காலத்தின் அருமை தெரியாது. அம்மா மதுரையில் கல்லூரி வரை படித்தாள். ஆனால் வேலைக்கு என்று போகவில்லை. அம்மாவுக்கு வேலைக்குப்போக ஆசை இருந்தும் இருக்கலாம். அம்மா எங்களை நல்லபடியாய் வளர்த்து சுறுசுறுப்புடன் திறமையானவர்களாய் நாங்கள் வளர ஆசைப்பட்டாள், என்று தோன்றுகிறது.

தாத்தா கண்ணை மூடும்போது அப்பாகையைப் பிடித்துக் கொண்டு, “வடிவேலு, உன் தம்பி… அவனுக்கு ஒரு விவரமும் பத்தாது. அப்பிடியே இத்தனை நாள் ஓட்டிப்பிட்டான்… எனக்குப் பிறகு அவனை நீ விட்றப்டாது…“ என்று கேட்டுக்கொண்டாராம். தன்மேல் அப்பா வைத்திருந்த அந்த நம்பிக்கையை அப்பா நெகிழ்ச்சியுடன் சொல்லுவார். நானும் தம்பி துரையும் ஒத்துமையாய் இருக்கணும், என்று அவருக்குத் தோன்றும் போதெல்லாம் இந்தக் கதையைச் சொல்லுவார். துரையின் புத்தகக் கட்டை தினசரி நான்தான் என் சுமையுடன் எடுத்துக் கொள்வேன். இதைப் பார்க்க அப்பா சந்தோஷப்படுவார். ஆனால் அம்மாவுக்கு இது பிடிக்காது. “அவங்கவங்க சாமானை அவங்கவங்க தான் பாத்துக்கணும். என்ன பழக்கம் இது…“ என்று முகம் சுளிப்பாள். அம்மாவுக்குத் தெரியாமல் அப்பா அப்போது எங்களைப் பார்த்துப் புன்னகைப்பார். அந்தப் புன்னகைக்கு என்ன அர்த்தம், தெரியாது. சரி என்றும் இல்லாத தவறு என்றும் இராத அந்த மையப் புன்னகை. அப்பாவால் மாத்திரமே அது முடிகிறது.

சித்தப்பா ரொம்ப உற்சாகமான மனுசன். இந்தக் காலப் பாடல் எதுவும் அவருக்குத் தெரியாது. கண்டசாலா, டி.ஏ.மோதி, பி.யு.சின்னப்பா, தண்டபாணி தேசிகர் என்று அவர் பாடும் பாடல்களில் பலதும் நாங்கள் கேட்டே இராதது. ஏ.எல்.ராகவன். சந்திரபாபு பாடல்களை அவர் பாடினால் சிரிப்பாய் இருக்கும். எனக்கும் தம்பிக்கும் சித்தப்பா தான் சைக்கிள் கற்றுக் கொடுத்தார். சில சமயம் சைக்கிளை எடுத்துக்கொண்டு சித்தப்பாவைப் பார்க்கப் போனால். அடுக்கிய நெல் மூட்டைகளுக்கு உள்ளேயிருந்து சித்தப்பாவின் பாட்டு மாத்திரம் கேட்கும். மனுசனுக்குக் கவலையே கிடையாதா என்று இருக்கும் எனக்கு. தனியே இப்படிப் படுத்துக் கிடக்க எனக்கானால் பயமாய் இருக்கும். அதிலும் சித்தப்பா… வாயில் பாட்டு வேறு. எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும்.

சித்தப்பா நிறைய சிகரெட் பிடிப்பார். சாராயம் குடிப்பாரா தெரியாது. நான் பார்த்தது இல்லை. ஆனால் வெத்திலை பாக்கு பழக்கம் இல்லாத சித்தப்பா, சிகரெட் என்றும் வெத்திலை பாக்கு என்றும் பழக ஆரம்பித்ததே இந்த ‘போதை‘ வாசனையை மறைக்கத்தான் என்று இப்போது, இந்த வயசில் எனக்குப் படுகிறது. நான் இப்போது பெரிய பையன். எனக்கு விவரங்கள் பிடிபட ஆரம்பித்துள்ளன.
சித்தப்பாவின் கெட்ட பழக்கங்களால் தான் அம்மா அவரிடம் நாங்கள் நெருங்கிப் பழகுவதை விரும்பவில்லையோ என்று கூட நினைக்கிறேன். தாத்தா இருந்தவரை ஒண்ணா ஒரே குடும்பமாய் இருந்தவர்கள் தானே, சித்தப்பா பிறகு இப்படி தனியே கிட்டங்கி பக்கம் ஒதுங்கியது எப்படி தெரியவில்லை. அம்மா அவரைக் கண்டித்துக் கேட்டிருப்பாளோ?... அவரைப் பார்த்து பையன்கள் கெட்டுப் போவார்கள் என்று அப்பாவிடம் அம்மா சண்டை போட்டும் இருக்கலாம். அம்மாவிடம் நிறைய ரகசியங்கள் இருக்கிறதாகவே நம்புகிறேன். இருள்வட்டம்… என்றாலும் அப்பா சித்தப்பாவை தனியே விட்டுவிடவில்லை. தினசரி சித்தப்பாவுக்குச் சாப்பாடு எடுத்துப் போகத் தவறுவது இல்லை. அவங்க அப்பாவுக்கு அவர் வாக்கு தந்து விட்டார் அல்லவா… என்று நினைக்கச் சிரிப்பு வருகிறது. அம்மாவும் மறுக்காமல் சித்தப்பாவுக்கு சமைத்துக் கொடுக்கிறாளே, அதையும் சொல்ல வேண்டும்.

இந்த ‘வளர்ந்த பையன்‘ பாவனை வந்தபின் என் நடவடிக்கைகளிலேயே சிறு மாறுதல்கள் நிகழ்ந்தன. மீசை முளைக்கிறதா என தினசரி பரபரப்புடன் கண்ணாடி பார்க்கிறேன். தம்பி அழுதால் உடனே என்ன, என்று விசாரிக்கிறேன். தம்பி சார்பில் அவன் சகாக்களுடன் சண்டை போடுகிறேன். நான் பொறுப்பான அண்ணன், என்ற நினைப்பு எனக்குப் பிடித்திருக்கிறது. அப்பா என்னை இப்படிப் பார்க்க சந்தோஷப்படுவார், என்ற நினைப்பே எனக்குக் கிளர்ச்சியூட்டுகிறது.
சித்தப்பா ஏன் தனியா போனார், என்று அப்பாவிடம் கேட்டேன் ஒருநாள். அவர் என்ன செய்திருப்பார், என நீங்களே யூகித்திருக்கலாம். அப்பா ஒரு புன்னகை செய்தார். சரி என்றோ தவறு என்றோ ஆழங் காண முடியாத மையப் புன்னகை அது. அதை எப்படிப் புரிந்துகொள்வது?... அம்மாவிடம் இதையெல்லாம் விசாரிக்க முடியாது.

“சித்தப்பா நீங்க இங்க தனியா இப்படி ராத்திரி படுத்துக் கிடக்க பயமா இல்லியா உங்களுக்கு?“ என்று கேட்டேன். ஹோ ஹோவென்று சித்தப்பா சிரித்தார். “மோகனா, நீ பேயைப் பாத்திருக்கியாடா? நான் பாத்திருக்கேன்…“ என்று என்னையே பார்த்தார். என் உடம்பு கொஞ்சம் வெடவெடவென்று நடுங்க ஆரம்பித்திருந்தது. “பெரிய பையன்னு சொன்னியேடா? இப்பிடி வேர்க்குதே உனக்கு?“ என்று சித்தப்பா தொடர்ந்து கேலியில் இறங்கினார். “ஒருநாள் என்னாச்சி…“ என அவர் தான் பேயைப் பார்த்த நிகழ்ச்சியை ஆரம்பிக்க, “வேணாஞ் சித்தப்பா…“ என நான் அங்கேயிருந்து ஓடி வந்துவிட்டேன். இன்றைக்கு ராத்திரி அம்மாபக்கத்தில் தான் படுத்துக் கொள்ள வேண்டும்… என்று இருந்தது.
அம்மாவிடம் அறிவியல் பாடம் ஒப்புவிக்கும் போது, ஒரு வாய் சோறு வாங்கிக் கொண்டே, “அம்மா பேய் எல்லாம் உண்மையா?“ என்று கேட்டேன். “என்ன திடீர்னு?“ என்று கேட்டாள் அம்மா. “ஒழுங்கா பாடத்தைப் படிச்சி முடி“ என்றாள். பேய் இருக்கிறதா, இல்லையா என்று அவள் சொல்லவில்லை. அன்றைக்கு ராத்திரி எப்படித் தூங்குவது, என்று எனக்குக் கவலையாய் இருந்தது. ஆனால் அந்த நேரம் வந்ததும் கண் தன்னைப்போல ராட்டினம் சுழற்றி உலகமே எனக்கு இருண்டு விட்டது.

பையன்களிடம் வளர்ந்த பாவனை வந்தபின்னாலேயே பெண்களை அவர்கள் ஒருமாதிரி குறுகுறுப்புடன் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். எனக்கு அப்படிப் பார்க்க பயமாய் இருந்தாலும், அந்தக் கிளர்ச்சி பிடித்தும் இருந்தது. அம்மாவைப் பார்க்கும் போது மட்டும் என் நினைவுகள் உட்சுருண்டு ஒரு வெட்கம் மேலிட்டது. பள்ளிக்கூடத்தில் முதல் பென்ச் ராஜேஸ்வரியின் பார்வையில் சிறு படபடப்பு, என்னைப் பார்க்கையில் வந்தாப்போல… உண்மையா தெரியவில்லை. ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது, என எனக்கே ஆச்சர்யமாய் இருந்தது. இது தப்பு, என ஒரு குரல் உள்ளே கேட்டாலும், அது மிகச் சன்னமான குரல் தான். அந்தக் கிளுகிளுப்பு எனக்கு வேண்டியிருந்தது.

இக்காலங்களில் நான் கதைகள் வாசிக்கவும் ஆசைப்பட்டிருந்தேன். அம்மாவுக்கு கொஞ்சம் இலக்கியப் பித்து உண்டு. பைன்ட் செய்த தொடர்கதைகளைத் தாண்டி அவள் தேடிப்பிடித்து வாசிக்க ஆரம்பித்திருந்தாள். ஜெகசிற்பியன், நல்லபெருமாள், சாண்டில்யன், சுஜாதா தாண்டி வந்திருந்தாள் அவள். தி. ஜானகிராமன் கதைப் புத்தகம் ஒன்று கிடைத்தது எனக்கு. அந்த கிராமிய நடையின் சுகம் எனக்குப் பிடித்திருந்தது. பெண்ணைப் பற்றி அவர் எப்ப எழுதினாலும் அடாடா, என்று இருந்தது. அது என் வயசினாலா தெரியவில்லை. ஆண்களைப் பற்றி இப்படி யாராவது பெண் எழுத்தாளர்கள் எழுதினால் அதையும் வாசிக்க ஆசையாய் இருந்தது.

எனக்கும் கதை எழுத ஆசை ஏன் வந்தது தெரியவில்லை. நான் ஒரு கதை எழுத நினைத்தேன். எதை எழுதுவது? பேய்க் கதை எழுதலாமா? காதல் கதை என்று… ராஜேஸ்வரி என்னைக் காதலிப்பதாக எழுதலாமா, என்றெல்லாம் தோன்றியது. என் சக பையன்கள் எல்லாரும், காதல் கவிதைகளில் இறங்கியிருந்தார்கள். அந்த அரிகிருஷ்ணன் தினசரி காலை பள்ளிக்கூடம் வந்ததும், அவன் எழுதிய காதல் கவிதைகளைப் பெருமையுடன் காட்டுவான். யாரையாவது காதலித்தே ஆக வேண்டும், என்ற நெருக்கடியில் அவன் இருந்தாப் போலிருந்தது.

காதல் கதை எழுத வேண்டாம், என திடீரென்று நினைத்துக் கொண்டேன். நான் கதை எழுதினால் அம்மாவிடம் காட்டலாமா, என்று தெரியவில்லை. அம்மா நிறைய வாசிக்கிறாள். அவள் யோசனை சொன்னால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அம்மாவுக்கு கோபம் வர வாய்ப்பு இருக்கிறது. “படிக்கிற வயசில் என்னத்துக்கு கதையும் கிதையும் உனக்கு?“ என்று அவள் திட்டவும் கூடும். அப்பாவிடம் காட்டலாம். அப்பா இதுவரை எங்களை கைநீடடி அடித்தது இல்லை. ஆக அந்த பயம் இல்லை. அப்பா பாடம் நடத்துகையில் ஒரு இசைலயம் இருக்கும். அப்பா சொல்லிக்கொடுத்து, கவிக்குயிலின் ‘பாலன்க்வின் பாரர்ஸ்‘ கவிதை எனக்கு மனப்பாடம். ஊஞ்சலாட்டப் பாடல்… கதையை எழுதி அவரிடம் காட்டலாம். இலக்கியம் நடத்துகிற அப்பா. அவர் என்ன சொல்வார் தெரியாது. பாடங்கள் தவிர அவர் செய்தித்தாள் கூட வாசிப்பது இல்லை. கதையைக் காட்டினால் 
வாசித்துவிட்டு, அவரது டிரேட் மார்க் புன்னகையைப் பதிலாக அவர் தரக்கூடும். சரி என்றும் சொல்லாத, தவறு என்றும் சொல்லாத புன்னகை. ஆச்சர்யமான அப்பா. ஆணின் மோனாலிசா இது. அம்மாவிடம் ஒரு பூடகத்தன்மை எப்பவுமே உண்டு. மூடுசூளை. அப்பா அப்படி இல்லை, என்று தோன்றுகிறது.

ஒரு காதல் கதையை ஆரம்பித்து எப்படி அதைத் தொடர என்று திணறி, விட்டுவிட்டேன். கதையை என்னவாச்சும் ஆரம்பித்து விட்டு அது தானாக நகரும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை. என்னிடம் அதை வளர்த்துச் செல்ல போதிய வார்த்தை வளம் இல்லை. முழுசுமாக கதையை மனசில் வாங்கிக்கொண்டு பிறகுதான் எழுத்தில் கதையை நகர்த்த வேண்டும், என்ற முடிவுக்கு வந்தேன்.

அம்மா ஒரு கல்யாணத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள். பட்டுப்புடவையும், மேட்சிங் பிளவுசுமாக அம்மாவைப் பார்க்கவே அழகு. தலைநிறைய மல்லிகைப் பூ வைத்திருந்தாள் அம்மா. அப்படி நேரங்களில் அம்மா சந்தோஷமாக இருந்தாள். இதை நான் இப்போது தான் கவனித்தேன். ஆ நான் பெரிய பையன், என நினைத்து சந்தோஷப்பட்ட கணம் அது. அப்படியே ஒரு பெண்ணை வர்ணிக்க வார்த்தைகளை நான் ஒரு வெட்கத்துடன் உள்ளே தேட ஆரம்பித்தேன். ராஜேஸ்வரியை நாளைக்குப் பார்த்தால் மேலும் எனக்கு உத்வேகம் வரக்கூடும் என நினைத்தேன். ஜானகிராமன் வேறு மனசில் அடிக்கடி எட்டிப் பார்க்கிறார்!

அம்மா ஊருக்குப் போயிருந்த இரவு. எனக்கு பேய் பயம் வந்தது. கூட தம்பியும் இல்லை. அம்மா அவனை கூடக் கூட்டிக்கொண்டு போயிருந்தாள். நானும் அப்பாவும் தான். அப்பாவிடம் அவர்மேல் கால் போட்டபடி கதைகள் பேச எனக்குப் பிடிக்கும். இப்படி திடீரென வாய்த்த தருணங்களை அப்பா விரும்பினாப் போலிருந்தது. எதாவது வாயளந்தபடி அவருடன் முதுகு சுகத்துடன் படுத்துக் கிடததல். அவர் நெஞ்சு முடிகளை அளைந்தபடியே. “நம்ம சித்தப்பா ஏன் கல்யாணமே பண்ணிக்கலை அப்பா?“ என்று கேட்டேன். “அட அவனுக்கு யார் பொண்ணு குடுப்பா?“ என்றார் அப்பா சலிப்புடன். சித்தப்பாவுக்குப் பெண் தேட எடுத்த முயற்சிகளில் அப்பா இப்படி உட்சுருண்டும் இருக்கலாம் என்று தோன்றியது. கையில் கிடைத்த விவரங்கள் அடிப்படையில் நான் புள்ளிகளை இணைத்துக் கோலம் போட உந்தப்பட்டேன். கதை எழுத இப்படி கவனங்கள் அவசியம் தானே ஜானகிராமன்?... நான் வளர்ந்த பையன். என்னால் யூகங்களில் முடிவுகளை எட்ட முடியும்… என்று தோன்றியது. சித்தப்பா எப்படியோ குடிக்கப் பழகிக் கொண்டிருந்தார். சிகரெட் ஊதித் தள்ளினார். அதனால் அவர் எங்கள் வீட்டைவிட்டு வெளியேற நேர்ந்திருக்கலாம். யாரும் அவரைக் கேள்வி கேட்பதற்கு இல்லை. அவரை யாரும் கேள்வி கேட்பது அவருக்குப் பிடிக்கவில்லை. தான்தோன்றி வாழ்க்கை அது. அது சரியா? அப்பா என்ன நினைக்கிறார்? முக்கியமான கேள்விகளின் போது அப்பா முகத்தில் ஒரு புன்னகையைத் தேக்கி உறையவிட்டு விடுகிறார். கேள்விகள் அத்தோடு ஸ்தம்பித்து விடுகின்றன.

சித்தப்பாவுக்கு பெண் சகவாசங்கள் இருந்தனவா தெரியாது. கையில் வேணுமட்டும் பணம் புரள்கிறது. அறுவடை சமயம் அவர் ராஜா தான். அவர் சொல்வது தான் கணக்கு. அப்பாவால் தம்பியைக் கண்டித்துக் கேட்க முடியவில்லை. பையன்கள் முன், குறிப்பாக தன் மனைவி, எங்கள் அம்மா முன் அப்பா தன் தம்பியிடம் கண்டிப்பு காட்ட விரும்பவில்லை. தவிரவும், இது முக்கியம். அப்பா கண்டிப்பானவர் அல்ல. தம்பியிடம் அவர் இளக்கம் காட்டுவது அம்மாவுக்கு எரிச்சலாய் இருந்தது. ஆனால் எங்கள் முன் அதை அம்மா காட்டிக்கொள்ள மாட்டாள். தி உட்ஸ் ஆர் லவ்லி, டார்க் அன்ட் டீப். அது அம்மாதான்.

பெண் சகவாசம் என்பது உற்சாகமான விஷயம் தான். பெண் என நினைக்கவே ஆண் மனசில் ஒரு இசைத்துளி கிளம்பி விடுகிறது. இது இப்போது எனக்குப் புரிகிறது. உள்ளே வெளிச்சமாய் ஒரு வெளிச்ச கிரணம் பாய்கிறது அப்போது. உற்சாகமான சித்தப்பா. பெண் இல்லாமல் ஆணுக்கு உற்சாகம் என தனியே உண்டா? வயல்வேலை செய்யும் பெண்களிடம் ஏ.எல்.ராகவன் போலவோ, சந்திரபாபு போலவோ சித்தப்பா பாடவும் செய்திருக்கலாம், என்று தோன்றியது.
ஊருக்குப் போகையில் அம்மா எத்தனை அழகாய் இருந்தாள். அலங்காரங்கள் பெண்களுக்கு மெருகு கூட்டுகின்றன. அவர்களின் பெண்மை அப்போது தூக்கிக்காட்டப் படுகிறது. வீட்டில் இருக்கையில் ஒப்பனையில் அலட்சியம் காட்டுகிறார்கள் பெண்கள். வெளியே கிளம்புதல் அவர்களின் எதோ மடையைத் திறந்து விடுகிறது. வெளியிடங்களில், பிறந்த வீடுகளில், புகுந்த வீட்டுப் பெருமைபட நடமாட, அதாவது அங்கே தன் ஆளுமை பற்றி எடுத்துச்சொல்ல, அவர்களுக்குப் பிடிக்கிறது. கல்யாணங்களில் திடீரென வீட்டு வேலைகள் இல்லாமல் உபரி நேரம் நிறையக் கிடைக்கலாகிறது. அவர்கள் அலங்காரம் பண்ணிக்கொண்டு இப்படி அப்படி நடக்கிறார்கள், அழகிப் போட்டி நடக்கிறாப் போல ஒரு பாவனை… அம்மாவின் அழகு என்பது அந்த முக அழகு மட்டுமா? அந்த விடுதலை உணர்ச்சி. புதிய காற்று முகத்தில் பாயும் உற்சாகம் அல்லவா அது?

திடீரென்று எனக்கு மனசில் ஒரு கதை வந்தது. அழகான அம்மா. இந்த வயசிலும் அழகான அம்மா. அப்பாவைக் கல்யாணங் கட்டிய புதிதில் ஒல்லியாய் எத்தனை அழகாய் இருப்பாள பிறந்த வீட்டில் இருந்து புது வீடு புகுதல். புதிய காற்றின் பரவசம் அது. அப்பா, எல்லாவற்றுக்கும் இணக்கமும் சுமுகமும் காட்டும் அப்பா… ஆகா, என எனக்குள் பரபரத்தது. நான் விறுவிறுவென்று மனசுக்குள் கதை ஒன்று வடிவமைக்க ஆரம்பித்தேன். ஜானகிராமனுக்கு நன்றி. என்னவோ யோசனையில் சற்று அலட்சியமாய் இருந்திருக்கிறாள் கோகிலா. என்றாலும் இயல்பாய் பெண்ணுக்கே உரிய எச்சரிக்கையுடன் சட்டென பதறி விழித்து எழுந்துகொண்டாள் அவள். தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு. முகத்துக்கு மிக அருகில் அவன். மாணிக்கம். ஓநாய் போன்ற அசட்டுச் சிரிப்புடன் மாணிக்கம். கோகி… என்ற அந்த இழுவை… “ஏண்டா குடிச்சிருக்கியா ?“ என எழுந்துவந்தாள். கோபாவேசமாய் பளாரென்று விட்டாள் அவன் கன்னத்தில் ஒரு அறை. நல்ல கதை. என்ன ஒரு சமுதாயச் சிந்தனை. இதை என்னால் எழுத முடியுமா? இதை நம்பகத்தன்மையுடன் சுவாரஸ்யமாய் என்னால் தர முடியுமா? அதெல்லாம் சரி, எனக்கு ஏன் இப்படி ஒரு கதை எழுதத் தோன்ற வேண்டும்?

கதை கிடக்கட்டும். வாழ்க்கை அதைவிட எதிர்பாராத திருப்பங்களால் ஆனது. ஐயோ, அப்பா இறந்துபோனார். அம்மா கல்யாணத்துக்குப் போயிருந்தாள். அவள் திரும்பி வருமுன் இப்படி ஆகிப்போனது. வயலில் இருட்டில் அப்பாவை பாம்பு எதோ தீண்டிவிட்டது. கருநாகம் என்கிறார்கள். அப்பா மயங்கி அங்கேயே விழுந்துவிட்டார். யாருக்குமே தெரியாது. முன்பே யாராவது அவரைப் பார்த்திருந்தால் அவரைப் பிழைக்க வைத்திருக்கலாம்.

அம்மா கல்யாணத்திற்குத் தங்கவே இல்லை. அப்பா சீரியஸ், என்று தந்திகொடுத்து அவளை வரவழைத்தார்கள். சிரித்தபடி போன அம்மா அழுதபடி திரும்பினாள். அம்மா வந்து பார்த்தால், இதோ கூடத்தில் இப்பவும் அப்பா கிடத்திவைக்கப் பட்டிருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அம்மாவின் எப்பவும் இறுக்கமான அந்த முகம்… அம்மா அழுது நாங்கள் பார்த்ததே இல்லை. அதிலும் அம்மா என்னைக் கட்டிக்கொண்டு, “ஐயோ மோகன்… நான் என்ன பண்ணுவேன்?“ என்று கதறியது எனக்குத் தாள முடியாமல் ஆயிற்று. இனி நான்தான் வீட்டுக்குப் பெரியவன், என சாவியை என்னிடம் அம்மா ஒப்படைத்த கதறல் அது. எனக்கு அந்தப் பளு தாங்குமா? என்னால் முடியுமா அது, அம்மாவே சரிந்து கிடக்கிறாள். நான்… சிறுவன் என்னால்… இல்லை நான் பெரியவன், என்ற நினைவே என்னைக் கேலி செய்கிறது.

சித்தப்பா தனியே ஓரமாய் வந்து நின்றிருந்தார். எங்கள் வீட்டுப் பக்கம் அவர் வருவது இல்லை. அப்பாவின் சாவு அவரை வரவழைத்து விட்டது. தயங்கித் தயங்கி வெளியே தான் நின்றிருந்தார். அப்பாவின் மரணம் அவரை ஒரு பேயைப் போல ஆட்டியது. சித்தப்பா பேயைப் பார்த்துவிட்டார், என்று ஏனோ தோன்றியது. அப்பா எப்படி அவரைப் பார்த்துக்கொண்டார். தன் அப்பா, எங்கள் தாத்தாவுக்குக் கொடுத்த வாக்கு அது. அப்பா கடைசிவரை அதைக் காப்பாற்றிவிட்டார். அருமையான அப்பா. அந்த அப்பாவை இழந்துவிட்டேன்.

அப்பா காரியங்கள் செய்கையில் மொட்டை அடித்துக்கொண்டேன். பள்ளிக்கூட சகாக்கள் என்னைப் பார்த்து வேடிக்கையாய்ச் சிரித்தார்கள். எனக்குக் கோபம் வந்தது. ஆனால் சிறிது நேரத்தில் எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அருமையான அப்பா. என் அப்பாவைப் போலப் பார்க்க முடியாது, என்று பெருமிதமாய் உணர்ந்தேன். பாம்பு கடிக்கும்போது கூட அவர் புன்னகைத்திருப்பார் என்றுதான் நினைத்தேன். ஆனால் விஷம் விறுவிறுவென்று உள்ளே ஏறிய ஜோரில் கண் நிலைகுத்தி வலி ஆளைப் புரட்டியெடுத்திருக்கிறது. அப்பா ஒருமாதிரி முடங்கிக் கிடந்தார். புயல் முறித்த மரம்போல அப்பா வயல் வரப்பில் கிடந்தார். பாம்பு சட்டையுரித்தாப் போல, உயிர் உடலைக் கழட்டிவிட்டுப் போயிருந்தது.

என் கதையின் அடுத்த பகுதியை நான் இப்போது யோசிக்க ஆரம்பித்தேன். ராத்திரி ராஜவேலு வீடு திரும்பினார். வீடு இருட்டிக் கிடந்தது. அவருக்கு ஆச்சர்யம். உடனே அது பயமாய் மாறியது. என்ன இது? விளக்கு கூட ஏற்றாமல்? கதவைத் தட்டப் போனால், தாளிடப்படாமல் தானே திறந்தது. அவர் பயம் அதிகரித்தது. ராஜவேலு உள்ளே போய் விளக்கைப் போட்டார். எங்கே இவள்? கோகிலா தட்டுப்படவில்லை. ராஜவேலு கோகிலாவைத் தேடினார். படுக்கையறையில் கோகிலா. சுருண்டு கிடந்தாள். உடம்பு கிடம்பு சரி இல்லையா?... என்னாச்சி?... என கிட்டேபோனார். பயமாய் இருந்தது. அவளைத் தொட்ட ஜோரில் அவளுக்கு முழிப்பு வந்தது. பாய்ந்து அவரைக் கட்டிக்கொண்டாள் கோகிலா. விக்கி விக்கி அழுகிற அவளைப் பார்த்தார் ராஜவேலு. அவருக்கு எதுவும் புரியவில்லை. முழுக்க அழுது ஓயட்டும் என்று ராஜவேலு காத்திருந்தார்.
அன்றைக்கு முழுக்க மாணிக்கம் வீடு திரும்பவில்லை. ராஜவேலு காத்திருந்தார். அவனைப் போய்த் தேடிப் பார்த்து அழைத்துவர விரும்பினார். ஆனால் அவனாக வரட்டும், அதுதான் சரி, என நினைத்தார். அவன் வரவில்லை. அவன் வரமாட்டான், என்று திடீரென்று தோன்றியது அவருக்கு. “சாப்பிட வாங்க.“ கோகிலா வந்து கூப்பிட்டாள். ராஜவேலு அவளைப் பார்த்தார். சிறிது தெளிந்திருந்தாள். பின்விளக்கின் வெளிச்சத்தில் தலைமுடிப் பிரிகள் மத்தாப்புக் கம்பிகளாய் ஒரு மயக்கம் தந்தன. வேணாம், என சொல்ல நினைத்தார் ராஜவேலு., அவர் சாப்பிடாமல் அவள் சாப்பிட மாட்டாள். அது அவருக்குத் தெரியும். “ஒரு டிபன் பாக்ஸ்ல கட்டிக் குடு“ என்றார் ராஜவேலு. “என்னது?“ என்றாள் கோகிலா புரியாமல். சற்று நிதானித்து ‘உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?“ என்று கோகிலா கத்தினாள். அவர் இதை எதிர்பார்த்தார். அவர் ஒன்றும் பேசவில்லை. ராஜவேலு அவளையே பார்த்தார். பதில் சொல்லவில்லை.

கோகிலா கட்டிக்கொடுக்க மறுத்துவிட்டாள். ராஜவேலு சாப்பிடாமல் படுத்துவிட்டார். ரொம்ப நேரம் கழித்து கோகிலாவும் அவர் பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டாள். அவளும் சாப்பிடடிருக்க மாட்டாள். அது அவருக்குத் தெரியும். அவளுக்கு அவரது ஆறுதல் தேவையாய் இருந்தது. இப்போது அவர் இப்படி முரண்டு பிடிப்பது அவளால் தாள முடியாமல் இருந்தது அவள் பெண். அவளைப் புரிந்துகொள்ள உலகத்தில் யாருமே இல்லையா? கோகிலா அழுதபடியே படுத்திருந்தாள். ஒரு கை நீட்டி அவர் அவளைத் தன்பக்கம் இழுத்துக் கொள்வார்… என அவள் விரும்பினாள். ராஜவேலுவிடம் அசைவே இல்லை. அவரும் தூங்கியிருக்க மாட்டார். அது அவளுக்குத் தெரியும்.

மாணிக்கம் வீட்டுக்கு வரவே இல்லை. வெளியேயே தங்கிக்கொண்டாற் போலிருந்தது. அவர் அவனைப் போய்ப் பார்க்கவே இல்லை. மறுநாளும் அதற்கு அடுத்த நாளும் கோகிலா டிபன் பாக்சில் கட்டித் தரத் தயாராய் இல்லை. ராஜவேலுவும் சாப்பிட மறுத்து விட்டார். இப்படி ரெண்டு பக்கமும் இடி வாங்கினால் ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?

ராஜவேலு சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். உள்ளேயிருந்து கோகிலாவின் குரல் கேட்டது. “டிபன் பாக்ஸ் ரெடியா இருக்கு…“ ராஜவேலுவின் முகத்தில் புன்னகை வந்தது. அவர் ஆர்வமாய் வந்து அந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டார். தலை நிமிர்ந்து சிரிப்புடன் அவளைப் பார்த்தார். “தேங்ஸ்“ என்றார். கோகிலா அழுது கொண்டிருந்தாள்.

அப்பாவின் காரியங்கள் முடிந்து உறவினர்கள் கிளம்பினார்கள். எல்லா உறவுசனம் இருக்கிற வரை வீட்டுக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார் சித்தப்பா. எல்லாரும் போய்விட்டார்கள். தனிமை சூழ்ந்தது வீட்டில். அப்பா இல்லாத தனிமை. பாசி கவிந்த நீர்ப்பரப்பு போன்ற தனிமை. வீட்டின் நிர்வாக முழுப்பொறுப்பும் அம்மாகையில் வந்திருந்தது. சித்தப்பா பற்றி எங்களுக்குக் கவலைப்படுவதா வேணாமா என்றே தெரியவில்லை. சித்தப்பாவுக்கும் அப்பா இருந்த வரை ஒரு கவலையும் இல்லாதிருந்தது. வயல் வேலைகளில் கூட அப்பா அவரை எதிர்பார்க்கவில்லை. எது எப்படியானாலும் வீட்டில் இருந்து அவருக்கு அப்பா சாப்பாடு எடுத்துப் போனார். அப்பா சாப்பாடு எடுத்துப் போனது சித்தப்பாவுக்குப் பிடித்திருக்க வேண்டும்.

அம்மா இனியும் அதை நடைமுறைப் படுத்த மாட்டாள், என்று நான் நினைத்துக் கொண்டேன். கதையோ வாழ்க்கையோ, எப்படி இருந்தாலும்… இனியும் அவள் ஏன் தன்னைச் எல்லைசுருக்கிக் கொள்ள வேண்டும்? அம்மா என்ன நினைக்கிறாள் தெரியவில்லை. சித்தப்பாவுக்கு அவள் தன்விருப்பத்துடன் சாப்பாடு கட்டிக் கொடுத்து அனுப்பினாள் என்று எப்படிச் சொல்ல முடியும்? விஷயம் அப்படியானால் சித்தப்பா இங்கேயே வந்து சாப்பிட்டுவிடடுப் போயிருக்கலாம் அல்லவா? சித்தப்பா இங்கேயே எங்கள் கூடவே தங்கியிருந்து இருக்கலாம் அல்லவா?

பள்ளிக்கூடத்துக்குக் கிளம்புகையில் அம்மா என்னை அழைத்தாள். அவள் கையில் கேரியர். “என்னம்மா?“ என்றேன். “உங்க சித்தப்பாவுக்கு…“ என்றாள். எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அம்மா முகத்தைப் பார்த்தேன். “என்னடா?“ என்றாள். நான் பேசவில்லை. என்றாலும் அம்மா கட்டித் தந்தது எனக்குப் பிடித்தமான விஷயமாய் இருந்தது. சந்தோஷத்தை முகத்தில் காட்டாமல் மறைக்க எனக்குத் தெரியவில்லை.

“அப்பா இருந்தவரை அவரோட, உங்க அப்பாவோட, சண்டை போடலாம்டா நான்…“ என்றாள் அம்மா. “ஆனால் அவர் போயிட்டார். அவர் போனபின் அவரோட கடமைகளையும் நான்தானே பார்த்துக்கணும்?“ என்றாள். “ஆமாம்மா“ என்றேன் நான் உற்சாகமாய். அம்மாவிடம் இப்போது என்னையிட்டு இன்னும் இணக்கம் வந்திருந்தது. நான் பெரிய பையன் ஆயிட்டேன் போல. சந்தோஷமாய் இருந்தது எனக்கு. சைக்கிளை கிட்டங்கி நோக்கி மிதிக்கையில் வாயில் பாட்டு வந்தது. சித்தப்பா பாடினால் எதுவும் ‘தில்லாலங்கடி தில்லாலே‘ என்று ஏ. எல். ராகவன் பாடல் எடுத்திருப்பார், என்று தோன்றியது.

* * *
storysankar@gmail.com

Comments

Popular posts from this blog