பத்தி chennai floods - a thing not to forget

chennai floods - a thing not to forget

நலம். நலமறிய அவா
06 திசம்பர் 2015

சென்னை நூறு வருடங்களுக்குப் பின் இத்தகைய கன மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறதாகச் சொல்லப் படுகிறது. சென்னை, கடலூர் மாவட்டங்கள் இந்தப் பெருமழையால் கடும் பாதிப்பு அடைந்திருக்கின்றன. ஏராளமான உயிர்ப் பலிகள். பொருட் சேதங்கள். வாழ்விடங்களை இழந்து பாமர சனங்கள் தவித்து நிற்கிறார்கள். சராசரி மனிதனின் கடும் உழைப்பின் சேமிப்புகளால் கிடைத்த வீட்டுப் பொருட்கள் அத்தனையும் மூழ்கிக் கிடக்கின்றன. மீண்டும் பயன்படுத்த முடியாத அளவில் அவை சேதப்பட்டு விட்டன. புற நகர அடுக்ககங்களில் முதல் தளம் வரை கூட வெள்ளம் புகுந்து நிற்கிறது. ஏரிகள் நிரம்பி விட்டன. அவை திறந்துவிடப் படுகின்றன. அல்லது உடைக்கப் படுகின்றன. தானாவே உடைகின்றன.
மனித நேயம் தழைத்தோங்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், தனி மனித சேவையாளர்களும், சாதி மத இன வர்க்க பேதம் இன்றி, சட்டென உதவி என்று எங்கெங்கும் சுறுசுறுப்புடன் இயங்குகிறார்கள். பிற மாநிலங்கள், பிற நாடுகள் உதவுவதற்காக முன் வருகின்றன. அரசியல் கட்சிகள், புடவைக்கடையில் பக்கத்தில் நிற்பவள் தேர்வு செய்யும் புடவையைப் பார்க்கும் பெண்ணாய், அடுத்த கட்சிகளை விட தாம் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ள வேகம் கொள்கிறார்கள். தமிழக அரசியல் சூழலுக்கு விடிவு காலமே இல்லையா? மக்கள் அரசியல்வாதிகளைப் பார்த்தாலே கோபப்பட ஆரம்பித்து விட்டார்கள். தாங்கள் அடிமைகள் அல்ல. வாழ்க்கை எமது பிறப்புரிமை என அவர்கள்  உணர ஆரம்பித்து விட்டார்கள்.
முப்படையும் மீட்பில் இறங்கி யிருக்கிறது. ஆயிரக் கணக்கில் தினசரி அவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வருகிறார்கள். பத்துக் கணக்கில் தினசரி பிணங்களும் அவர்கள் கண்டெடுக்கிறார்கள்.
பாலும், குடிநீரும், காய்கறிகளும், அத்தியாவசியப் பொருட்களும் விலையேற்றி விற்கிறார்கள் சிலர். மின்சாரம் இல்லை. தொலைபேசி, அலைபேசி, இணையம் என்று எவ்விதத் தொடர்புகளும் இல்லை. வெளியூர்களில் இருந்து வேலை நிமித்தம் சென்னை வந்தவர்கள் தங்கள் பாதுகாப்பை, ஆபத்தைப் பகிர்ந்துகொள்ள, தெரிவிக்க, உதவி கோர வழி இல்லை. கோர நிமிடங்கள் அவை. ஆபத்தை விட ஆபத்தை எதிர்நோக்கும் மனது அதிகத் திகலைத் தருகிறது. கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், உடல் நலம் இல்லாதவர்கள், ஊனம் உள்ளவர்கள்... எத்தனையோ பேர் வெள்ளத்தில் தவிக்கிறார்கள்.
வங்கிகளில் ஏ டி எம் வேலை செய்யவில்லை. வங்கிகள் வேலை செய்யவில்லை. பணம் எடுக்க முடியவில்லை. கடைகளில் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மாற்ற வழியில்லை. பணம் இருந்தும் கையில் இல்லாமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.
சென்னை நகரமே தீவு தீவாகத் துண்டாடப் பட்டு விடுகிறது. இடைப் பாலங்கள் வழியே போக்குவரத்து நிறுத்தப் படுகிறது. அவற்றின் கீழே சீறிப் போகும் வெள்ளம். சில பாலங்களுக்கு மேலேயே பொங்கி வழிந்து ஓடுகிறது தண்ணீர். எங்கெங்கிருந்தெல்லாமோ என்னென்னவோ மிதந்து வருகின்றன.
தனி கவனச் சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லை. நோயாளிகள் உயிருக்கு மேலும் போராடுகிறார்கள். சிலர் இறந்து விடுகிறார்கள்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் சென்னை தான் தமிழ்நாட்டில் இந்த கன மழையால் திகைத்துப் போயிருக்கிறது. சகஜ நிலை திரும்ப வாரக் கணக்கில் எடுக்கும் போல் இருக்கிறது.
பருவ நிலைக் கோளாறுகளால் தான் இத்தனை கன மழை என்கிறார்கள். சென்னையின் விஸ்தரிப்பு, வகை தொகையில்லாமல், கணிப்புகளோ சமூக அக்கறையோ இல்லாமல் கைமீறிப் போனதாகச் சொல்கிறார்கள். ஏரிகளில் போய் வீடு கட்டி விட்டதாகச் சொல்கிறார்கள். எது எப்படியாயினும் இழப்பு வருத்தத்துக்குரியது. விவாதங்களை இப்போது தவிர்க்கலாம். தேவை அறிவுரைகள் அல்ல. உதவிகள். நற் சொற்கள். மீட்பு நடவடிக்கைகள். எதிர்காலத்தில் நமக்கு நிறைய வேலை இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று. விவாதம்.
மழையில் வீடு, வசிப்பிடம் இழந்தவர்கள், பொருட்கள் இழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். உறவுகளை இழந்தவர்கள் பாவம். அவர்கள் தவிப்பு புரிகிறது. உயிர் இழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். எல்லாமே கட்டுத் தளர்ந்து செயல் இழந்து நிற்கிற பதட்டமான சூழல் இது. மானுடத்திற்கான சவால் இது. மனிதன் மீண்டு விடுவான். அவன் மகத்தானவன்.
 ***
எஸ். சங்கரநாராயணன்
தொகுப்பாசிரியர்
பா. உதயகண்ணன்

பதிப்பாசிரியர்

Comments

Popular posts from this blog