அஞ்சலி
- ஞானக்கூத்தன்
நிலையின் திரியாது
அடங்கியான்
எஸ். சங்கரநாராயணன்
--தமிழுக்கு
ஞானக்கூத்தனின் பங்களிப்பு பரந்து பட்டது. எனது கல்லூரி நாட்களில், 1980 களில், அவரை
அறிமுகம் செய்துகொண்டது சிறு புன்னகை வரவழைக்கிற அவருடைய தெறிப்புகளில் தான். காளமேகப்
புலவருக்குப் பின் சட்டென, மாபெரும் இடைவெளியில், இதோ, என மனம் பொங்கிய தருணம் அது.
தமிழ் எனக்கு
மூச்சு, ஆனால் பிறர் மேல் விட மாட்டேன், என்பார் அவர். அரசியல்வாதிகளிடம் அவருக்கு
ஒரு ஆக்ரோஷமான கோபம் இருந்தது. தலைவர்களேங், என்ற அவரது கவிதை மகா பிரசித்தம். பெரியாரின்
சுயமரியாதை இயக்கத்தினரால் ராமருக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடந்தது. ஞானக்கூத்தன்,
அதில்வந்த எத்தனை பேர் ராத்திரி தூக்கம் வராமல் புரண்டார்களோ, என எழுதிக் காட்டுவார்.
சொல்முறையில் அவருக்கு ஒரு கருத்து வீச்சு தெளிவாக இருந்தது. கடவுளையும் அவர் விட்டு
வைக்கவில்லை.
கவிதை 1
நாயகம்
மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்குப் பிடிக்கும். ஏனெனில் வே
றெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்குப் பிடிக்கும். ஏனெனில் வே
றெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?
•
கவிதை
2
மஹ்ஹான்
காந்தி மஹ்ஹான்
எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
‘வாழ்க நீ எம்மான்’ என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்;
‘வையத்து நாட்டில்’ என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்;
‘விடுதலை தவறி’ என்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;
‘பாரத தேசம்’ என்றார்;
‘வாழ்விக்க வந்த’ என்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
•
O
அரசாங்க வேலையாட்கள்
அலுவலகத்தில் தூங்கி வழிகிறார்கள் என்கிற அவரது கிண்டல் நுட்பமானது. அரசுக் கட்டிலில்
தூங்கிய முதல் மனிதர் மோசி கீரனார், என்பார். அம்மாவின் பொய்கள், என்கிற கிண்டல்
அபாரமானது அல்லவா?
•
சென்னைக்காரன் என்கிற
அளவில் சில இலக்கியக் கூட்டங்களிலும், நண்பர்கள் வீட்டு திருமண மற்றும் பிற வைபவங்கிளலும்
அவரை சந்திக்க வாய்ப்புகள் அமைந்தபடி யிருந்தன. எளிய நல்ல நண்பர். கவனமாய் நாம்
பேசுவதைக் கேட்டுக்கொண்டு, தன் கருத்தை அதே அமைதியுடன் சொல்வார். மொழிபெயர்ப்பு
சார்ந்து நான் அவரிடம் அதிகம் முரண்பட்டேன். அவர் கருத்துக்கள் காலத்தால் முந்தையவை
என்பது எனது கருத்து. எனது இந்தக் கருத்து அவருக்குத் தெரியும்.
இருபது வருடம் முன்னால்
நான் ‘நிஜம்’ என்கிற சிற்றிதழ் நடத்தினேன். அதில் மரபுக் கவிதைகளுக்கான உரை போலவே,
புதுக் கவிதைகளின் வசிகரத்தை முழுமையாக
உணரும்படியும், அதன் புரியாத்தன்மை சார்ந்து எடுத்துத் தரும்படியும், இதழ்தோறும்
விளக்கக் கட்டுரை வெளியிட விரும்பினேன். அதை ராஜன் என்கிற புனைப்பெயரில் எழுதினார்
ஜெயமோகன்.
நிஜம் இரு இதழ்கள் தான்
வந்தது. அத்தோடு பொய்யாகி விட்டது. முதல் இதழில் க.நா.சு.வின் ஒரு கவிதைக்கு
விளக்கம் தரப்பட்டது. அடுத்த இதழில் ஞானக்கூத்தனின் ‘நாய் குரைத்தல்’ பற்றிய கவிதை
பற்றி விளக்கம். நிஜம் போன்ற நடுவான, வாசகனை மருட்டாத இலக்கிய முயற்சிகள் தேவை
தான், என்றார் ஞானக்கூத்தன்.
•
நானும் எழுத்தாள
நண்பர்கள் ஏ.ஏ.ஹெச்.கே. கோரியும், சாந்தனுமாக மாதந்தோறும் சிறந்த சிறுகதை
ஒன்றுக்குப் பரிசளித்து, பன்னிரண்டு மாதங்களின் சிறந்த கதைக்கு முதல் பரிசும்
அளித்து, அந்தக் கதைகளைத் தனி நூலாக்கியும் மகிழ்ந்தோம். ‘ஜோதி விநாயகம் நினைவு
சிறுகதைப் பரிசுத் திட்டம்’ என அறியப்பட்டது அது. மூன்று ஆண்டுகள் நடந்தது இந்த
அமைப்பு. அதன் இரண்டாவது ஆண்டு விழாவுக்கு ஞானக்கூத்தன வந்தார். அவரது சிறப்புரை
எனக்குப் பிடித்திருந்தது. கருத்துச் செறிவுடன் வளமாகப் பேசத் தெரிந்த மிகச் சில
எழுத்தாளர்களில் அவரும் ஒருவர். வடமொழி அறிந்தவர். பேசியபடியே சிந்தனையால் எட்டு
திசையிலும் பயணம் செய்வார் அவர். கேட்டுக் கொண்டே யிருக்கலாம்.
சிறுகதையின் இலக்கணம்
என்று வடமொழியில் ஒரு கதையும், நகைச்சுவையின் இலக்கணம் என ஒரு வடமொழி எடுத்துக்காட்டும்
தந்தார் அவர்.
மாதிரி சிறுகதை இதோ.
ஒரு பாடகன் வீட்டுக்கு
எதிரே இருந்த மரத்தில் பேய் ஒன்று குடியிருந்தது. பாடகனுக்கு நண்பன் ஒருவன்
இருந்தான். அந்தப் பேய் நண்பனிடம் போய், உன் நண்பனின் பாடல் சகிக்கவில்லை. என்னால்
அவன் வீட்டுக்கு எதிரே குடியிருக்கவே முடியவில்லை. அவன் எப்படியாவது இடத்தைக் காலி
செய்ய நீதான் உதவி செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொண்டது பேய். “அவனைக் காலி
செய்ய வைக்க வேண்டியது என் பொறுப்பு” என்நறான் நண்பன். “ஆனால் அதனால் எனக்கு என்ன
பயன்?” என்று கேட்டான். பேய் யோசித்தது. “சரி. அவன் காலி செய்துவிட்டால், நான்
போய் இந்த நாட்டு இளவரசியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். யார் வந்து
விரட்டினாலும போக மாட்டேன். நீ வந்து விரட்டு. போய் விடுகிறேன். ராஜா உனக்கு
வெகுமதிகள் தருவார்” என்றது பேய்.
சரி, என்று நண்பன் அந்தப்
பாடகனை வீட்டைக் காலி செய்ய வைத்துவிட்டான். பேயும் நிபந்தனைப்படி போய் அந்த
நாட்டின் இளவரசியைப் பிடித்துக்கொண்டது. எத்தனையோ மந்திரவாதிகள் வந்தும் அந்தப்
பேய் அசைந்து கொடுக்கவில்லை. இந்தப் ‘பாடகனின் நண்பன்’ அவனும் வந்தான். அவன் வந்து
விரட்டியதும் அது போய் போய்விட்டது. அரசனுக்கு ரொம்ப மகிழ்ச்சி. நண்பனுக்கு நிறைய
வெகுமதிகள் தந்து அனுப்பினான்.
போய் அடுத்த நாட்டு
இளவரசியைப் பிடித்துக் கொண்டது பேய். அங்கும் எத்தனையோ மந்திரவாதிகள் என்னென்னவோ
செய்து பார்த்தார்கள். பேய் கிளம்பகிறாப் போல இல்லை. தனக்கு அடுத்த நாட்டு அரசனின்
மகளுக்குப் பேய் பிடித்ததையும் அதை விரட்டிய இந்த நண்பனையும் பற்றி அந்த ராஜா கேள்விப்பட்டு
உடனே அவனைத் தன் நாட்டுக்கு வரவழைத்தான்.
அவனை பார்த்ததும் பேய்
திகைத்தது. “இங்க பார். உனக்காக ஒருமு8ற நான் இடத்தைக் காலி செய்தேன். உனக்கும்
நிறைய வெகுமதி கிடைத்தது. இப்ப இங்கேயும் வந்துவிடடால் நான் என்ன செய்வது? நான்
கிளம்ப மாட்டேன்” என்றது பேய்.
அந்த நண்பன் சொன்னான்.
“இந்த மாதிரி நீ சொல்வாய் என்று எதிர்பார்த்து தான் நான் பாடகனையும் என்னுடன்
கூட்டி வந்திருக்கிறேன்.”
•
சிறுகதையின் நுட்பமான
கடைசிப் பகுதிக்கு இது உதாரணமாக வடமொழியில் வழங்கப்படுகிறது, என்று கூட்டத்தில்
ஞானக்கூத்தன் எடுத்துக் காட்டினார். சாமர்செட் மாம் நல்ல சிறுகதையின் முத்தாய்ப்பு
எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு ‘மாதிரி’ தந்திருக்கிறார், தெரியுமா? பேறு
சந்தர்ப்பத்தில் பேசலாம் அதை.
•
ஒரு நல்ல நகைச்சுவையின்
இலக்கணம் என்ன? அதற்கும் ஒரு வடமொழி உதாரணம் தந்தார் ஞானக்கூத்தன்.
ஒரு பிராமணன் காலையில்
ஆற்றுக்குக் குளிக்கப் போனபோது ஆற்றங்கரையில் ஒரு வெறிநாய் துரத்திவிட்டது.
அப்புறம் அவன் குளிக்க அவன் ஆற்றங்கரைப் பக்கம் போகவில்லை. ஒரு வாரம் ஆனது. அவன்
நண்பன் வந்து அவனிடம் சொன்னான். “இனி அந்த ஆற்றங்கரைக்குக் குளிக்கப் போகலாம்”
“அந்த வெறியாய் என்னாயிற்று?”
“கவலைப்படாதே. அந்த
வெறிநாய் இப்போது இல்லை. அதை ஒரு சிங்கம் தின்றுவிட்டது.”
•
இலக்கியத்தில் சதா
வாசித்தபடி இருந்தார் ஞானக்கூத்தன். எதையிட்டும் அவரிடம் தகவல் பெறலாம். கடந்த ஏழு
வருடங்களாக நான் ஆண்டுதோறும் ‘இருவாட்சி’ என்ற பொங்கல்மலர், சிற்றிதழ் பாணியில்,
வெளியிட்டு வருகிறேன். ஏழு ஆண்டுகளிலும் தொடர்ந்து விருப்பமாய்ப் பங்களித்தார்
ஞானக்கூத்தன். அவரது சமீபத்திய கட்டுரைகளைத் தொகுத்து ‘ரூபம் பிரதிரூபம் மற்றும்
பாவனை’ என தயார் செய்து கொண்டிருந்தோம். அதைப் பார்க்க அவர் இல்லை. விரைவில்,
ஒருமாத காலத்துக்குள், அது தனியே, நினைவுக் கூட்டமாக அமைத்துக்கொண்டு வெளியிடப்
படும், என்கிற வேகம் வந்திருக்கிறது எனக்கு.
•
நண்பர்களின் இல்ல
வைபவங்களுக்கு அநேகத் தரம் அவருடன் போய்வந்திருக்கிறேன். என் அருகில் அமர்நது உணவு
அருந்துவார் அவர். சமீபத்தில் என்ன எழுதினீர்கள், என்று சம்பிரதாயம் அற்ற முறையில்
அக்கறையுடன் விசாரிப்பார். வீடு காலி செய்துகொண்டு போவதில் உள்ள துக்கம் பற்றி ஒரு
கதை எழுதி யிருப்பதாக நான் சொன்னேன். அவரிடம். “பிரச்னையின் அழுத்தத்தைக்
கூட்டுவதற்காக, ஒரு பார்வையற்ற பெண் வீட்டைக் காலி செய்கிறதாக எழுதியிருக்கிறேன்” என்றேன்.
அவர் சொன்னதுதான்
அருமையாக இருந்தது. “எனது ஒரு கவிதையில் அவங்க வீட்டைக் காலி செய்துகொண்டு
போறாங்க..அந்த வீட்டு பீரோ வெளியே வர மறுக்கிறது. பலவந்தமா அதை இழுக்கறாங்க. சட்னு
அது காலைக் கிழிச்சிருது…”
என்ன கற்பனை!
•
நிறைய உற்சாகமான
தருணங்கள் நினைவில் அலை மோதுகின்றன. வயது வித்தியாசமே தெரியாமல் காத்திரமான
உரையடல்களை நிகழ்த்துவார் அவர். இன்றைய இளைய தலைமுறையிடம் அவருக்கு நம்பிக்கை
இருந்தது. புலம்பல் அவரிடம் கிடையவே கிடையாது.
அவரிடம் நாம் கற்றுக்
கொள்ள நிறையவே இருக்கிறது. வயது 78. நிறைந்த வாழ்க்கை தான், கடமை எல்லாம் முடிந்த
களைப்புடன் தான் இருந்தார் அவர். எனது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு (நன்றி ஓ
ஹென்றி) வெளியீட்டு விழாவுக்கு சிறப்புரை தந்தார். நல் நினைவுகளுடன் விடை தர
வேண்டியிருக்கிறது. காலம் இரக்கம் அற்றது. யாருக்கும் அது விட்டுக் கொடுக்காது.
தமிழின் கவிதைகளில் ஒரு
உயிர்ப்பு சார்ந்த குறுகுறுப்பு தர முடிந்தது அவர் ஒருவரால் தான். வெறும்
உணர்ச்சித் தெறிப்புகளோ, தத்துவ விசாரமோ அல்ல. வாழ்க்கை காணக் கிடைத்தது அவரது
கவிதைகளில். தமிழுக்கே அது வழி காட்டிச் சென்றது. அவரை யாரும் பின்பற்ற முடியுமா
என்பதே சந்தேகம் என்பேன். அத்தனை தனிப் பாணி அது.
முடிக்கு முன் இன்னொரு
வேடிக்கை கூட ஞாபகம் வருகிறது.
ஒரு பெரிய தொலைக்காட்சி
காலை விருந்தினர் பேட்டிக்கு ஞானககூத்தன் போயிருந்தார். அவரைப் பேட்டி கண்டவருக்கு
இலக்கியம் பற்றி லவலேசமும் தெரியாது. “நீங்க எப்பிடி எழுத்துத் துறைக்கு
வந்தீங்க?” என்று கேட்டாள் பேட்டியாளினி. “நான் ஒரு எளிய கிராமத்தில் இருந்து வந்தவன். நான் சென்னை
பிரசிடென்சி கல்லூரிக்கு வந்தேபோது தான் உலக இலக்கியவாதிகள், பைரன், ஷெல்லி
எல்லாரையும் அறிமுகம் செய்துகொள்ள முடிஞ்சது…”
கேட்டாள் பார்
பேட்டியாளினி. “அப்பிடியா? அவங்க எல்லாரும் சென்னைக்கு வந்திருந்தாங்களா?”
நல்ல நகைச்சுவைக்கு
வடமொழியில் தான் உதாரணம் தர வேண்டுமா?
storysankar@gmail.com
91 97899 87842
ஞானக்கூத்தன் பற்றிய நினைவலைகளைப் படித்தேன். ஆம், வருத்தம் இல்லாமல் வழியனுப்பவேண்டியவ்ர்தான். சாதித்த களைப்புடன் / களிப்புடன் அவர் விடை பெறட்டும். (2)
ReplyDeleteஅந்தப் பேட்டி-யாளினி யை நேரில் சந்திக்கமுடியுமா?
- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.