CHINESE STORY
முதல் வேலை

முதல் அதிகாரி


மா ஃபெங் (சீனா)

தமிழில் எஸ். ங்கரநாராயணன்


போன கோடையில் மாநில நீர்சேமிப்பு பயிற்சிப்பள்ளியில் படிப்பு முடித்தஜோரில் இங்கே வந்து சேர்ந்தேன். ஜிவுஜிவுவென்றிருந்தது, புதிதாய் வேலைக்குப் போகிற பயமா ஆர்வக்கோளாறா தெரியவில்லை. முதல் வேலைன்னா எல்லாப் பிள்ளைங்களுக்கும் இப்டிதான் இருக்கும் போல! சைக்கிள் சவாரி. பின்ஸ்டாண்டில் பெட்டிபடுக்கை. பஸ் வேணாம் என்றிருந்தது, வேலைன்னு ஆயிட்டால் ரொம்ப தூரம் சுத்தறாப்ல இருக்குமே, பட்டிக்காடுன்னா பஸ்சாவது ஒண்ணாவது, நடராஜா சர்வீஸ், இல்லன்னா, சைக்கிள். உடம்புல தெம்பு வேணும். பழகிக்கணும்.

விடியுமுன் கிளம்பியது, போய்ச்சேர உச்சி, ஊருக்குள்ள நுழைஞ்ச ஜோரில் - டமால்! ஊரே சந்துபொந்தா கோமணமாக் கெடந்தது, ஒரு கிழவன். காத்துப்போன பந்தாட்டம் கோணாமாணா, நெளிசல் நடை. வெயில் மண்டையப் பொளக்குது, இவனானா முழுக்க மூடிய மேல்கோட்டு, விளையாட்டுக்கான கால்சராய், நாடாமுடிச்சு. தலையில் பெரீய்ய வைக்கோல் தொப்பி. ஏய் ஐயா, வெயிலை மறைக்கறியா, குளிருக்கு மூடிக்கறியா? குனிஞ்ச தலை, கூன் முதுகு, கையப் பின்னால கட்டிக்கிட்டிருந்தான். கால்கள் நேரா இல்லாமல் பக்கவாட்டில் நீட்டி ஒரு எகிறல் நடை. தவக்காத் துள்ளல். கிணிங் கிணிங். பெரிய எழுத்து கிணிங் கிணிங்! தலையைக் கூடத் தூக்கவில்லை அவன். சீரான அதே துள்ளலில் அவன்பாட்டுக்கு எதிரே... கிட்டத்தில்... சட்டெனத் தலையைத் தூக்... வலப்பக்கமாக.... நானும் சைக்கிளை வலப்... டமால்! நானும் கீழே விழுந்தேன். எனக்கானால் செம அலுப்பு. பசி. வழிய மறிச்சி இந்தப் பேமானி. ஹேண்டபாரைத் தயி¢ர்கடைய வெச்சிட்டான்,,,, கோபம் குமுறி வந்தது. நடுத்தெருவில் தவழ்ந்து சைக்கிளைத் தூக்கி நிறுத்தினேன்.

''செவுடாய்யா நீயி?'' என்று கத்தினேன். ''மணியடிச்சிட்டுத்தானே வர்றேன்...?'' உடனே வெட்கம், கடுமையாப் பேசுகிறேன்... அவன் ஒண்ணும் ஒதுங்கிக்காம இல்லை, என்ன கொஞ்சம் அசமந்தம். அட அவனை மோதித் தள்ளிட்டு இந்தத் தெனாவெட்டு தப்பு. அவனுக்கு என்ன பிரச்னையோ கர்மமோ. கடுப்பாயிருப்பான் கிழவன், என்னைச் சும்மா விடப் போறதில்லை, போட்டுத் தாளிக்கப் போறான்...

தொப்பியை எடுத்துக் கிட்டான். மெல்ல எழுந்தான். என்ன நிதானமாப் பேசினான்! ''இதுக்கெல்லாம் கடுப்பானா எப்டி, நான் மாட்டேன். நீயும் விழுந்து வாரினே. நானும்! அவங்கவங்க வழியப் பாத்துப் போவம்... ஆச்சா?'' இப்போது அவனை நல்லாப் பார்த்து வைத்தேன். ஆள் வயசாளி ஒண்ணும் அல்ல. நாப்பதுக்கு மேல சொல்லேலாது. வெளிறிய சதுர முகம். சம்மர் வெட்டு வெட்டியிருந்தான் தலையை. என்னை ஒரு நோட்டம் பார்த்துவிட்டு தூசி தட்டிக் கொண்டான். திருப்பித் தலை தொங்க, கை பின்னால்... அதே நெளிசல் நடை, எதுவுமே நடக்காத மாதிரி! பக்கத்துத் தெரு திரும்பும் வரை அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். வித்தியாசமான ஆளுத்தான்!... வண்டியில் ஏறினேன்.

பிராந்திய கட்சியமைப்பின் நிர்வாக அலுவலகம் போனபின் எனக்கான பணி ஒதுக்கப் படும். வெள்ளப் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் எனக்கு வேலை போட்டிருந்தது. காம்பவுண்டுள்ளே தெற்கால் பெரிய வீடு. என்னொத்த வயசுக்காரன் ஒருத்தன். ''ஏய் நான் குன் யோங்சங். என்னை அண்ணன் குன்-னு கூப்டு. அல்லது தம்பி குன்! ஒன் இஷ்டம்.'' அறையைக் காட்டினான். ''இதான் நம்ம அலுவலகம், வரவேற்பறை, நம்மோட படுக்கையறையும் இஃதே! குண்டுசட்டில குதிரை ஓட்டு, என்ன சொல்றே?''

உற்சாகமான நல்ல பையன். பேசிட்டே என் சாமான்களை இறக்கி அவிழ்க்க உபகாரம் செய்தான். முகம் கழுவ இதமாய் வெந்நித்தண்ணி கொண்டுவந்தான். பாதி தர்ப்பூசணி சாப்பிடத் தந்தான், ஒரே மணிநேரம், நாங்கள் சகஜமாகி விட்டோம்.

மதியம் சிறு தூக்கம் போட்டபின், வேலைபத்திக் கொஞ்சம் சொன்னான். பிராந்திய கட்சியமைப்பின் கீழான தாற்காலிக ஏற்பாடு இந்த வெள்ளப் பாதுகாப்பு மையம். முதல் செயலர் இதன் தலைவர். ரெண்டாவது நிலை அதிகாரி, கிராமக் கட்டுமானக் கழகத்தின் இணை இயக்குநர் ஐயா தியான், அவரே இப்போது நம்மை மேய்க்கிறவர். ''வா நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.''

கட்டுமானக் கழகம் தெருவில் அந்தாண்டை தனித்தனி வீடுகளின் கொத்தில் கொஞ்சம் தள்ளி கிழக்கால. நாங்கள் உள்ளே போகிறபோது மேஜையில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். தம்பி குன் சொன்னான். ''புது ஆள் ஒருத்தர் வந்திருக்காரய்யா.'' ஐயா தியான் தலையெடுக்காமல், ம் என்றார். ''இது தோழர் பென் ஜி'' என அவன் தயங்கினான். ''படிச்சி முடிச்சி நேரா வர்றாப்டி...'' பிறகுதான் தியான் ஐயா பேனாவை எறிந்துவிட்டுத் தலையைத் தூக் - தூக்கிவாரிப் போட்டது. என்ன கிரகச்சாரம்டா, எனது முதல் அதிகாரி... நான் தள்ளிவிட்ட ஆசாமிதான்!

தம்பியாபிள்ளை நான் முக்கிய பிரமுகர் என்கிற மாதிரி என்னை ஒரு நாற்காலி காட்டி உட்கார்த்தி, பிளாஸ்க்கில் இருந்து வெந்நீர் ஊற்றிக் குடிக்கத் தந்து உபசாரம் செய்தாறது. மேஜையில் தாறமாறாக் கிடந்த புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் அடுக்கி வைத்தான். தியான் ஐயாவிடம் அசைவில்லை. என் முதல் காரியம், அவர் சொன்னார், இங்கத்திய எல்லா நதிகளையும், ஓடைகளையும் பத்தி அவன் கத்துக்கட்டும். பிறகு சில முக்கிய கிராமங்கள், அவன் போய்ப் பார்க்க வேண்டும். முனகல் குரல். பஞ்சப் பட்டினி பனாதை போல. பேசி முடிச்சி திடீர்னு சொன்னார். ''ஏய் உன்னை எங்கியோ பாத்திருக்கேன்! நாம சந்திச்சிருக்கோம்!'' எங்க, என்று கேட்டான் குன் ஆச்சர்யத்துடன். என் முகம் சிவந்துவிட்டது, நான் என்ன பேச! என் அதிர்ஷ்டம் அப்போதுதான் யாரோ ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு உள்ளே... நாங்கள் வெளியே. ஜுட்!

திரும்பியபோது குன் என்னைக் கேள்விமேல் கேள்வி துளைத்தெடுத்தான். காலையில் நடந்ததை அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. ''அது பரவால்ல, அதுக்காகவெல்லாம் ஒன்னப் போட்டுப்பாக்க மாட்டார். ஐயா நல்ல மாதிரி'' என்று ஆறுதல் சொன்னான் குன். ''நான் செம கடுப்பாயிருந்தேன். மணியை அடி அடின்னு அடிக்கிறேன், அந்தாள் தலையை நிமித்தவே இல்லை, கண்டுக்கிறவே இல்லை...'' குன் சிரித்தான். ''எதுக்கும் அசங்க மாட்டாரு, பீரங்கி வெடிச்சாலே பொட்டுவெடிதான் அவருக்கு!''

முதல் வாரத்தில் ரெண்டே வாட்டிதான் எங்கள் அலுவலகம் வந்தார். நானும் குன்னும் அவர் இடம் போய் ஆகிக்கழிந்த வேலைகள் பத்திச் சொல்ல ஒரு வாட்டி. ரொம்ப சாவகாசமான மனுசன் என்றுதான் தோணியது. நடக்கிறபோதே முனகினார். முணுமுணுத்தாப் போலப் பேசினார். எந்தப் பிரச்னையைச் சொன்னாலும் கொட்டாவியுடன் கேட்டுக் கொண்டார்... எதுவுமே அந்தாளை உலுக்க முடியாது போலிருந்தது. சகதி எருமை. அக்கடான்னு ஒரு அதிகாரி, என் அதிர்ஷ்டந்தான் அது. ஆனால் எனக்குன்னு என்ன வேலை தந்தாலும் என்னால முடிந்த அளவு அதை சிரத்தையாச் செய்தேன்...

முக்கியமாய் நான் என் வேலை என்னென்ன என்று பழகிக் கொள்ள வேண்டியிருந்தது. அதே சமயம்  பக்கத்தூர்களுக்கு வெள்ளக் கட்டுப்பாடு எற்பாடுகளைப் பற்றித் தகவல் சொல்ல தம்பி குன்னுக்கு உதவி செய்தேன். வரைபடத்தில் பிராந்திய கம்மாய்களையும் கால்வாய்களையும் அறிந்து கொண்டேன். நிறைய விவரங்கள் வாசித்தேன். இந்தப் பக்கம் மூணு ஆறுகள், மேற்கு மலையில் இருந்து கீழே சமவெளிக்கு ஓடிவருகின்றன. பெரும்பாலும் இவை வறண்ட மணல்வெளி. ஆகஸ்டு 1954ல் பெரிய பெருக்கு. பின்வருடங்களில் ஒண்ணும் நடக்கவில்லை. இந்த வருடமும் அப்டியொண்ணும் விசேஷமா நடந்துறாது, என்றுதான் இருந்தது. அடைமழைக்காலமும் முடிகிற வேளை அது. 'ஆடி' அடங்கி விட்டது! மழை மூட்டம் எதுவும் இல்லை. வானம் நிர்மலம்.

ஆனால் நான் வந்த ஒன்பதாவது நாள் இடிச்சது பார் ஒரு இடி. பகலெல்லாம் மழைச்சாயலே இல்லை, மாலை வர மேற்கே மேகந் திரண்டது. மணி பத்து, குன் படுக்கையைக் கிடத்தி ஏறியாச்! அவன் கேட்கிறாப் போல எதோ நாவலை உரக்க வாசித்துக் கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. ழாங் பள்ளத்தில் இருந்து சேதி. மலையாற்றிலிருந்து யோங்கன் நதிக்கு விநாடிக்கு நூறு கனமீட்டருக்கும் மேலே தண்ணீர் வரத்து! அதிர்ச்சியாய் இருந்தது. நான் படித்தறிந்தபடி யோங்கன் நதியில் 1954ல் கூட இத்தனை பெருக்கு இல்லை... குன்னிடம் சொல்ல, ஆளுக்கு ஒரு தொலைபேசியில் படபடவென்று பள்ளமான பகுதிகளுக்கெல்லாம் தகவல் பறந்தன. அதற்குள் ஆன்லே பகுதியில் இருந்து வந்த சேதி கலவரப்படுத்தியது. தொலைபேசியை எறிந்தபடி அலறினேன். ''ஆன்லே அணையில் உடைப்பெடுத்து விட்டது!'' அறையிலிருந்து தியான் ஐயாவுக்குத் தெரிவிக்க தலைதெறிக்க ஒடினேன். எப்பவோ தூங்கப் போயிருந்தார். ஆனால் விளக்கு எரிந்தபடி யிருந்தது. ''ஐயா எந்திரிங்க...'' நான் கத்தினேன். ''யோங்கன் ஆறு கொந்தளிக்கிறது... ஆன்லே அணையில் வேறு உடைப்பு...''

தலைதூக்கிப் பார்த்தார். ''ஆன்லேயில் எந்தப் பக்கமா உடைப்பு?'' நெடுஞ்சாலைக்குக் கிழக்கால. நாற்பதடிக்கு மேல அகலமான உடைப்பு. ஒரே துள்ளா எழுந்து என்னோடு மைய அலுவலகம் வரப் போறார் என நினைத்தேன். கிடந்த கோலத்திலேயே ''ச் அது பரவால்ல'' என்றார். ''அதைவிடப் பள்ளமான வயலுக்குக் கொஞ்சம் போல நீர் வரத்து குறையும் விவசாயத்துக்கு... அவ்ளதான்.''

''நான் சொன்னது கேட்டிச்சா?'' எனக்குக் கோபம். ''ஆன்லேயில் உடைப்புன்னு சொல்லிட்டிருக்கேன்.'' - ''அதனால என்னான்றே? தண்ணி பெருகி வடியட்டும் அதுபாட்டு...'' படுக்கைலேர்ந்து அவரை இழுத்து பெல்ட்டால விளாறலாமா... தலைவரா இவர், எப்டிதான் இவரைப் போட்டாங்களோ... எலும்பே இல்லாத அற்பப் பிறவி. இவரைப் போல சத்தியமா நான் பார்த்ததே இல்லை.

அப்போதுதான் குன் உள்ளே பாய்ந்தோடி வந்து கத்தினான். ''சன்சா நதிலயும் நீர்மட்டம் ஒசந்துகிட்டே வருது...'' டக்கென்று எழுந்து உட்கார்ந்தார். ''நீர் வரத்து எவ்வளவு?'' சன்சா நகரச் செயலாளர் பேசினார். அளவு சரியாத் தெரியல, என்றாலும் டிராகன் அரசன் கோயில் பின்பக்கம் வரை ஏறியிருக்கு... ''அப்டின்னா குறைஞ்சது விநாடிக்கு 90 கன மீட்டர்.'' போர்வையை உதறி வீசினார். ''ஹைமன், தியான்ஜியா ஊருக்குச் சொல்லு போயி'' என்றார் என்னைப் பார்த்து. ''எல்லாரும் அணைப் பக்கமிருந்து வெளியேறச் சொல்லு. ஜல்தி!''

எங்கள் அலுவலகத்துக்கு ஓடிவந்த போது நிறையப் பேர் வந்திருந்தார்கள். தோழர் ¢ஹாவ் (எங்கள் புதிய செயலாளர் அவர்), தோழர் வேங், (எங்கள் குழுவின் தலைமையலுவலக முதல்வர்), இயக்குநர் நியூ, (ராணுவப் பிரிவு), பிராந்திய பொதுப் பணித்துறை ஆட்கள் நிறையப் பேர்... எல்லாருக்கும் குன் தகவல் சொல்லியிருக்க வேண்டும். சிலர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்கள், சிலர் வரைபடத்தை வைத்துக் கொண்டு நீர்வழிகளைப் பற்றி பரபரப்பாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் ''தியான் ஐயா எங்கே?'' என்றார்கள். ''வந்திட்டிருக்காரு'' என்றான் குன்.

நான் போய் அவசர அவசரமாய் ஹைமன் பகுதிக்குப் பேசி முடித்தபோது, ஐயா வந்திருந்தார். ஒரு கையில் நடைக்குச்சி, இன்னென்றில் மழைக்கோட்டு. அதே உடையில் ஆனால் ஆளே இப்போது வேறாய்த் தெரிந்தார். சுதாரிப்பாய் தெம்புடன் ஆனால் அமைதி காத்தார். படுக்கையில் குச்சியையும் மழைக்கோட்டையும் வீசிவிட்டு ராணுவ அதிகாரியிடம் சொன்னார். ''அத்தனை ராணுவத்தையும் நீங்களே தலைமையேத்து தெற்கு அணைக்குக் கூட்டிப் போகணும்.'' ''உத்தரவு!'' என்று சிப்பாய் போல சொல்லியபடி அவர் துரிதமாய் வெளியேறினார். ''தோழர் வேங், ஒரு கார் வேணுமே, உடனே வரவழைங்க!'' பேசியபடி பல்வேறு ஊர்களுக்கு மளமளவென்று ஐயா பேசினார். முக்கல் முனகல் இல்லை, ஆணைகள்! எல்லாரும் அவரையே கவனித்தபடி காத்திருந்தார்கள். ''சென்ட்ரல்! டூ கிராமத்துக்கு இணைப்பு குடுங்க. அப்படியே ஷாங்ஷே, அடுத்து கூசெங்... டூ கிராமமா? யார் பேசறது? நான் தியான். கவனிங்க, மூணாமத்த தடுப்பில் இருந்து ஒரேயொரு மதகை உருவிருங்க. என்னாச்சி? ஏற்கனவே மூணு மதகை உருவியாச்சா, நினைச்சேன் இப்டி ஏடாகூடம் பண்ணிப்புடுவீங்கன்னு, ம் சரி, அதுல ரெண்டு மதகை திரும்பச் சொருகிருங்க. போன குளிர்காலத்துலதான அதை நாம நிர்மாணித்தோம். அங்க இத்தனை விரைசலா தண்ணி சேராது. அணைப் பக்கத்துல எல்லாரும் தயாரா இருங்க. நடுராத்திரிக்குப் பிறகு இன்னொரு பெரிய பெருக்கு உங்க பக்கம் இருக்கும்!'' ஒரு தொலைபேசியை வைத்துவிட்டு அடுத்ததை எடுத்தார். ஷாங்ஷே, கூசெங் ஊர்களுக்கு விலாவாரியா ஆணைகள். எந்தப் பக்கம், எந்த அணையில் உஷாரா யிருக்கணும், எந்த மதகைத் திறக்கணும், எதை மூடணும், முதலாய் எந்தக் கம்மாயை நிரப்பணும், அடுத்தது எது... நான் அவசர அவசரமாய் அந்தப் பகுதி வரைபடத்தை அவர்முன் விரித்துக் காட்டினேன், மனுசன் பார்க்கவே இல்லை. எல்லா அணையும், கம்மாயும், கால்வாயும் அவருக்கு நல்லாத் தெரிந்திருந்தது.

புருவத்தில் வழிந்த வியர்வையை தியான் வழித்தபடி, ''தோழர் வேங், நீங்களும் குன்னும் இங்க வர்ற தொலைபேசி அழைப்புகளைப் பாத்துக்கோங்க. செயலாளர் ஹாவ், நீங்களும் உங்களாட்களும் படுக்கப் போலாம். நானும், இவனும் (என்னைக் காட்டினார்) ஹைமனுக்குப் போறோம். அவங்க தெற்கத்தி அணைல சிக்கல் வந்திருக்கும்னு தோணுது.'' தென்னணை பலமானது, என்றேன் நான். வடக்கணைதான் சிக்கல் தரும்னு நான் நினைக்கிறேன். நேத்து முன்தினம்தான் நான் அங்கே போயிருந்தேன், எனக்கு அது நல்லாத் தெரியும்.  ''சூறாவளி பாத்தியா வடகிழக்கா கிளம்பி வருது...'' அடாடா அதை கவனிக்காம விட்டமே என்றிருந்தது. ''உங்களுக்கு உடம்பு அத்தனை சொகமில்லை'' என்று தோழர் வேங் சொன்னார். ''நீங்க இங்க இருங்க, நா வேணாப் போயி நிலவரத்தைப் பார்க்கிறேன்...''

''உம்மால சமாளிக்க முடியாது வேய்'' என்று கில்லியடித்தார் ஐயா. குச்சி, மழைக்கோட்டு சகிதம் ஐயா கிளம்ப ஒரு கெட்டி கோட்டை எடுத்துக் கொண்டு பின்னால் போனேன். வாசலில் ஜீப். ''டிரைவர் ஹைமனுக்குப் போலாம்.'' அவர் தோரணையும் விரைப்பும் நம்பவே முடியாதிருந்தது. ஆனால் ஆன்லே அணை உடைந்ததையிட்டு அவர் அலட்டிக்கவே இல்லை, அதான் ஏன் புரியவில்லை. அதேசமயம் சன்சா நதியில் உடைப்புன்னதும் சுதாரிச்சாரு. அந்த நீர்வரத்து விநாடிக்கு 90 கன மீட்டர்தான். சன்சாவில் வெள்ளம் வர்றச்சல்லாம் பெரும் சேதம் வந்திருக்கு. ஆனால் இந்த அஞ்சி வருஷத்துல நிறைய வெள்ளக் கட்டுப்பாட்டுப் பணிகள் நடந்திருக்கு. நிறைய கம்மாய்கள் வெட்டி பெருகும் நீரை ஒதுக்க வழி பண்ணியிருக்கு. அதன் தாழ் பகுதிகள் மகா அகலமான வெளிகள். ஒரு 200 கன மீட்டர் வரத்துன்னாலும் தாக்குப் பிடிக்கும். 90 கன மீட்டர் வரத்துக்கு இந்தாள் பதறுது! அத்தோட நடுராத்திரியில் இன்னொரு பெருக்கு வருதுன்றாரு... இந்தாள் என்ன கடவுளா, ஜோசியரா, எப்பிடி தெரியும் அவருக்கு?

கார் போயிட்டிருந்த போது மெல்ல கேட்டு வைத்தேன். ''யோங்கன் நதி நல்ல ஆழமப்பா, ஆனால் கொள்ளளவு கம்மி'' என்றார் ஐயா. ''நல்ல வேகமா தண்ணி பாயும், ஆனால் நாலே மணி நேரம் சொட்டுத் தண்ணி நிக்காது உள்ளே. நாலு மணிநேரத்தில் ஒரு உடைப்புச் சரிசெய்ய முடியுமா? முடியாது, இல்லியா... அத்தோட அந்த உடைப்புனால சேதாரம் குறைவுதான். நெடுஞ்சாலை கிழக்கால வயல்ல விளையறதெல்லாம் நீண்ட தண்டுச் செடிகள். எதுவும் தண்ணில மூழ்கிறாது. வயல் வழியா ஓடி பெரு அறுவடை வாய்க்கால்ல போயிக் கலக்கும். அங்கேர்ந்து வடக்க பார்த்துப் போகும். அந்தப் பக்கமெல்லாம் தண்ணிப் பஞ்சமான பகுதிதானே?''

''அது சரி, சன்சா நதியில் பாதி ராத்திரிக்கு மேல இன்னொரு பெருக்கு வருதுன்னீங்களே ஐயா?'' அதில் அவருக்கு சந்தேகமே இல்லை. வர்ற 90 கன மீட்டர், மத்தியக் கிளையின் தண்ணி அது. வடக்கு மற்றும் தெற்கு மலைச்சாரல்கள் நல்லா தண்ணியை வெச்சிக்கிட்டும் மீறி வர்ற தண்ணி இது. மேல் தண்ணி, மலைலேர்ந்து வர்றது வந்து சேர இன்னும் மூணு மணிக்கூர், நடு நிசி ஆயிறாதா பையா?'' ஐயா கொஞ்ச நேரம் பேசவில்லை. ''மலைலேர்ந்து கீழ இறங்கி தண்ணி சன்சா வருது. ஹைமன் பகுதி தட்டைபூமி மணல்வெளி. தண்ணி ஏற ஏற எங்கயும் போக முடியாது, பொங்கி வழியறதுதான்... ரொம்ப ஆபத்து.'' ஹைமனை நினைத்து கவலையுடன் மௌனம் காத்தார் ஐயா. நான் பேசவில்லை. குன் சொல்லியிருக்கிறான், வியாதிக்கு நாட்டு வைத்தியன் மாதிரி, அவசர ஆபத்துக்கு தீர்வுசொல்ல ஐயா கில்லாடி வேலைக்காரர்! ரொம்ப அளக்கிறான் அவன்னு அப்ப நினைச்சது தப்பு என்று இப்ப புரிந்தது. தெளிவா தெரிஞ்சதைவெச்சி அழகா கணக்குப் போட்டுப் பேசுகிறார், பம்மாத்தோ அல்ட்டாப்போ தெரியவில்லை. ஒரு பதினோரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது ஹைமன். ஒரு மைல் தூரம் முன்னாடியே வண்டியை நிறுத்தச் சொன்னார் ஐயா. ''ரெண்டாவது கிளைக்கு வந்திருக்கு தண்ணி.'' வண்டியைத் திரும்ப அனுப்பி விட்டு நடக்க ஆரம்பித்தார். நான் கூடப் போனேன்.

கருமையான இரவு, வானில் நட்சத்திரமே இல்லை, வடகிழக்கு எதிர்காற்று முட்டியது. இந்த எதிர்காத்தில் குச்சியை முன்னகர்த்தி என்ன வேகமான நடை. நான் கூடவே ஓட வேண்டியிருந்தது. ரெண்டாம் கிளையின் படுகை. நீர்ச் சலசலப்பு கேட்டது. ஓடையில் இறங்கி கால்நனைய நடந்தோம். ஹைமன் ஊருக்குப் போகாமல் நேரே தெற்கு அணையைப் பார்த்தே போனோம். விளைந்த சோளக்கதிர்களுக்கு மேலே தூரத்து மதகில் விளக்குகள் நடமாட்டம். மனுச ஒலிகளுடன் தண்ணீர் பாயும் சத்தமும் மங்கலாய். ஐயா நடைவேகம் அதிகரித்தது. நான் பதட்டத்துடன் பின்னால் ஓடினேன். மதகில் ஏறிப் பார்த்தால் இன்னும் ஒண்ணு ரெண்டு மீட்டர்அளவே கதவு தெரிந்தது. மதகை வைக்கோல்பாய், மரக்கடடை, மணல்மூட்டை எனப்போட்டு அடைத்திருந்தார்கள். இன்னும் எடுத்துவந்தபடி இருந்தார்கள். மதகை இன்னும் உயர்த்த வேண்டியிருந்தது. எத்தனை நீளமான மனுச வரிசை, குரல் களேபரம்.

அவர்களை ஊடுருவினோம்.  கிழக்கால, சுத்தியும் கனமான கரை எடுத்த உயர கண்காணிப்பு குடில். எந்த வெள்ளத்துக்கும் அசங்காது. சின்ன அறையென்றாலும் நிறையப் பேர் உள்ளே. கட்சிக் குழுவின் செயலாளர் ழாய், ஹைமன் மற்றும் தியான்ஜியா பகுதிச் செயலாளர்கள், மக்கள் சபைத் தலைவர்கள்... எல்லாருமே வந்திருந்தார்கள். எல்லாருமே தயார் நிலையில் இருந்தார்கள். கனமாய் சிகெரெட் புகை, மூச்சு முட்டியது.

''ஆகா ஐயா வந்தாச்சு...'' கூட்டத்தில் இருந்து உற்சாகக் குரல். கூட்டமே சிலிர்த்து எழுந்து கொண்டது. குரல்கள் ஆரவாரித்தன. ஐயா வந்தாச்சு.. வாங்கய்யா. நீங்க வந்துருவீங்கன்னு தெரியும்... தியான் வந்ததில் எந்தப் பிரச்னைன்னாலும் சமாளிச்சிக்கலாம் என்கிற ஆசுவாசம்  வந்திருந்தது. என்னென்ன ஜாமான்லாம் அடைக்கக் கொண்டாந்தீங்க, அமயஞ்சமயம்னா வேலைக்கு எத்தினி ஆள் இருக்கு, நீர்மட்டம் எந்த வேகத்துல உயந்துக்கிட்டிருக்கு... எல்லாம் ஐயா விஜாரிச்சார்.

''ஒரு மணிக்கூர் முன்னால இந்தப் படுகைல இதில் பாதியளவுதான் தண்ணி கெடந்தது. இப்ப என்ன உயரம் வந்திருக்கு நீங்களே பாருங்க...'' செயலாளர் சொன்னார். ஐயா யோசித்தார். ''வட கிளையில் இருந்து தண்ணி இந்தப் பக்கம் வர ஆரம்பிச்சிட்டது.  விரைசலா நிலைமை சிக்கலாயிரும்... மதகுப்பக்கம் வைக்கோல் பாய்களை நிறுத்திருங்க சீக்கிரம். காத்து அடங்கறாப்லவே இல்லியே...'' சிலர் அவர் சொல்லை நிறைவேற்ற ஓடினார்கள். ஐயா அறைக்குள் சுற்றுமுற்றும் பார்த்தார். ''பெரியவர் ஜியாங்கைக் காங்கலியே...?'' அவர் வரணுமா, பிரச்னை பெரிசா இல்லன்னு நினைச்சம், என்றார் ஹைமன் பகுதி கட்சிச் செயலாளர். ''அப்டில்லாம் அசால்ட்டா இருந்திறப்டாது'' என்றார் ஐயா. தொலைபேசிக்குப் போனார். தொடர்பு நிலையில் அது இல்லை, சரி செய்ய யாரோ போயிருந்தார்கள். ''ஊருக்குள்ள போயி பெரியவர் ஜியாங்கை யாராவது கூட்டியாங்க.'' என் பக்கம் திரும்பி ஐயா சொன்னார். ''அந்தாள் கூட நீயும் போ. ஊர்த் தொலைபேசிலேர்ந்து இயக்குநர் நியூவைப் பிடி. அங்கியும் பாய்த்தடுப்பு போட்டாகணும். வேங்சியா சரிவில் விசேஷ கவனம் வேணும்னு சொல்லு.'' மதகைத் தாண்டுகையில் எல்லாரும் பாய்களை உயர்த்துவதில் மும்முரமாய் இருந்தார்கள். யாரோ சிலர் பேச்சு காதில் விழுந்தது. ஐயா வந்திட்டார்ல, இனி கவலப்படண்டாம்... ...டேய் கோட்டிக்காரா, கவலைப்படறா மாதிரி விஷயம் இல்லன்னா ஐயா ஏன்டா வர்றாரு? - அது சரிதான், ஆனால் பெரிய பிரச்னை எதும் இராது, ஐயா காமிச்சிக்கலியே, என்னான்றே?...

போகிற வழியில் கூடவந்தவனிடம் பெரியவர் ஜியாங் பத்திக் கேட்டேன். உடைப்புகளை அடைக்கிறதில் சூரன் அந்தாள். அவரை வரச் சொன்னா நிசமாகவே விஷயம் பெரிசுதான், என்று பெருமூச்சு விட்டான். எனக்குச் சங்கடமாகி விட்டது. அடுத்த வருஷம்னா தேவலை, ஆற்றின் மேல்பகுதிகளில் பெரிய கம்மாய் ஒன்று தயாராக்கி வருகிறோம். இலையுதிர் காலம் ஆரம்பிக்குமுன் வேலை முடிஞ்சிரும். விறுவிறுவென்று நதியோடு போய் ஹைமன் ஊரை அடைந்தோம். நான் தொலைபேசியில் பேசி முடிக்குமுன் பெரியவரைப் போய் அவன் கூட்டி வந்துவிட்டான். வெண்தாடி வேந்தர். தள்ளாத வயது, நிற்கவே ஆளைத் தள்ளுகிற வயசு! எழுவதுச் சொச்சம்... விழுந்துறாதய்யா. ஒரு கழுதை வெச்சிக்கலாமா, என்றால் வேணாம் என்று நடந்தே வந்தார். ''நீங்க போயிட்டே இருங்க கண்ணுகளா, நான் மெல்ல வந்து சேர்றேன். பிரச்னைன்னு வந்தா.... நடு நிசிக்கு முந்தி வராதுன்னு வை. போங்க...'' அவனை முன்னாடி போகச் சொன்னேன், தாத்தாவை நான் கூட்டியாறேன்... அவன் நடையோட்டமாய் மதகை நோக்கிப் போனான். என் தோளைப் பிடித்தபடி தாத்தா ''தியானுக்கு உடம்பு இப்ப தேவலையா?'' என்று கேட்டார். அவர் உடம்புக்கு என்ன, என்று கேட்டேன்.  ''உனக்குத் தெரியாதா... போன குளிர் காலத்தில் அவர் கால் விழுந்துட்டது, படுத்த படுக்கை. என்ன கோளாறுன்னு சொல்லுவீங்க... ம் மூட்டுப்பிடிப்பு.'' கடும் வெக்கையிலும் கனமாய் முட்டியை அவர் ஏன் மூடிக்கிறார் என்று தெரிந்தது. (முட்டி தெரியவில்லை!) அவர் தள்ளாட்ட நடைக்கும் மூட்டுக்கோளாறுதான் காரணமா, பாவம். அதுக்கும் மீறி இப்ப ஜீப்பை விட்டிறங்கி, என்ன வேகம். செம வலி இருக்கும் உள்ளூற.

தாத்தா நிறையப் பேச விரும்பினார். ''1954ல் வந்தது அந்தப் பிடிப்பு. அந்த உதிர்காலத்தில் மழை பிச்செடுத்திட்டது. இந்தப் பிராந்தியமே வெள்ளக்காடு. ஐயா தியான் மழையிலும் வெள்ளத்திலும் இந்தப் பக்கமாவே சுத்தித் திரிய வேண்டியிருந்தது. கிராமம் விட்டு கிராமம் ஒரே அலைச்சல். ஏழு பகல், ஏழு ராத்திரி கடும் போராட்டம். அவர்தான் முன் நின்று சமாளிச்சது. வெள்ளம் வடியுங்காட்டியும் அவர் கால் ரெண்டும் புஸ்சுனு வீங்கிட்டது.'' ஒரு பெருமூச்சு விட்டார் தாத்தா. ''ஆனால் மனுசன் நினைச்சதை சாதிச்சிருவான். அவங்கப்பாவைக் காட்டிலும் இவன் கெட்டிக்காரன்!''

ஹைமனிலிருந்து ஒரு கிலோமீட்டரில் தியான்ஜியா கிராமம். அதுதான் தியானின் ஊர். நீச்சல் வீரரான அவங்கப்பாவும் ஜியாங்கும் நல்ல சிநேகிதர்கள். எந்த உடைப்புன்னாலும் ரெண்டு பேருமாத்தான் போவாங்க. அப்ப அந்தக் காலத்தில் நதியைச் சீரமைக்க, மராமத்து பார்க்க என்று ஊரில்  குழு உண்டு. ஆனால் எல்லாவனும் கொள்ளையடிக்கவே பதவிக்கு வந்தான்கள். குளம் மதகு சீரமையாமலே கிடந்தது. வருஷம் ரெண்டு வாட்டியாவது உடைப்பு, பெரிய வெள்ளம்னில்லை வானம் மூக்குச் சிந்தினாலே கதை கந்தல். அந்நேரம் அதிகாரிகள் காணாமல் போனார்கள். மதகணைப் பக்கம் அவர்கள் தலைவெச்சிப் படுக்கறதே கிடையாது.

அப்பவே தியான் அப்பாகூட உதவி ஒத்தாசைன்னு வருவான். நல்ல தைரியம், விஷயமான வீர்யமான ஆளு. இருபது வயசுக்குள்ளியே அந்தப் பக்கத்ல நல்ல பேர். யாரைக் கேட்டாலும் தெரியும்பாங்க. புரட்சிக்குப் பிறகு நீர் சேமிப்புக்காரனாக உள்ளூர் பஞ்சாயத்து அவனை நியமனம் செய்தது. எங்கயும் அவன் இருந்தான், நதியை ஆழப்படுத்த, வயல்பக்கம் வாய்க்கால் வெட்ட... பிறகு பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். அதில் தேறி பின் ஊரின் பல நீர்த்தேக்கங்களை அவன்தான் வடிவமைத்துக் கொடுத்தான்.

தெற்கு அணைக்கு வந்து சேர்ந்திருந்தோம். நேரே அணைக்குப் போகாமல் பின்பக்க வயல்வெளியில் போய் கண்காணிப்பு குடிலில் ஏறினார். ஏன் அப்படிச் செய்தீர்கள் தாத்தா? . சனங்க என்னைப் பார்த்தாலே அபசகுனம், எதோ பிரச்னைன்னு டர்ர்ராயிருவாங்க! அவர் சிரித்தார். அறை அமைதியாய்க் கிடந்தது. ஐயாவும் ஒரு பெண் மருத்துவரும் மாத்திரம் இருந்தார்கள். அவளிடம் தியான் ஐயா ''இங்கியே இருந்து தொலைபேசியை கவனிச்சுக்கம்மா, தலைல இடியே விழுந்தாலும் அசையப்டாது ஆம்மா...'' என்று சொல்லிக்கொண்டிருந்தார். தொலைபேசி சரி செய்யப் பட்டிருந்தது. ஐயா எழுந்து கைகுலுக்க எங்களை நோக்கி வந்தார்.

''என்ன நிலவரம்?'' என்று கேட்டார் பெரியவர். ''மதகு ராத்திரிக்குத் தாளுமா?'' ஐயா உதட்டைப் பிதுக்கினார். ''கடுமையான காத்து மாமா, ஆபத்தாதான் தோணுது. இப்படித் திண்டுல சித்த உடம்பைக் கிடத்துங்க. தேவையின்னா கூப்புடுறோம். நான் போயி கிழக்காம நிலைமையப் பாத்துட்டு வாரேன்...'' கூடவே நானும் வெளியே வந்தேன்.

நான் போனபோது இருந்ததைவிட இப்போது தண்ணீர் கலங்கலாய் இருந்தது. ஒரு மீட்டர் அளவு மதகு தெரிந்தது, என்றாலும் காற்று வீசியதில் அலைகள் நுரைத்து ஆக்ரோஷமாய் எழுந்தன. பாய்மறைப்பு இல்லாட்டி மதகு கிதகெல்லாம் பிச்சுக்கும் என்றிருந்தது. நாங்கள் போகும்போதே தெளித்த நீரில் எங்கள் ஷு சாக்ஸ் எல்லாம் சொட்டச் சொட்ட நனைந்துவிட்டது.

திடீரென்று, டமார்.. தொடர்ந்து எச்சரிக்கை மணி அலறல். அணையில் ஒரு பக்கம் பிளந்துகொண்டு விட்டிருக்க வேண்டும்... ஐயா உத்தரவுக்காகக் காத்திருக்காமல் நான் பெரியவர் ஜியாங்கைக் கூட்டிவர ஓடினேன். அவசரஉதவி ஆட்கள் கையில் அடைப்பு சாமான்களும் விளக்குகளுமாய் ஓடினார்கள். ஜியாங் குடிலை விட்டு வெளியே வந்தார். ''எங்க உடைஞ்சது? எந்தப் பக்கம்?...'' கிழக்குப் பக்கமாக நான் கைகாட்டி அவருக்கு உதவி என்று கிட்ட போனேன்.. என்னை உதறிவிட்டு வேகமாகப் போனார். இநத் வயசில் எப்படி இத்தனை உக்ரமும் தெம்பும் அவருக்கு வந்தது, திகைப்பாய் இருந்தது. உடைப்பெடுத்த பகுதியில் விளக்குகள் பிரகாசமாய் எரிந்தன. மணல்மூட்டைகளை விநியோகித்தபடி மனிதர்கள் இங்குமங்குமாய்ப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். ஒரே இரைச்சலாய் இருந்தது. ஜியாங்கைப் பார்த்துவிட்டு அவர்கள் வழிவிட்டார்கள். நாங்கள் போய்ப் பார்த்தோம். உடைப்பு ஏழு மீட்டர் அகலம், அதன் வழியே சீறிப் போனது வெள்ளம்.

ஐயா மணல்மூட்டைகளை எங்கெங்க போடணும் என்று காட்டிக் கொண்டிருந்தார். எங்கள் பக்கம் முதுகுகாட்டிக் கொண்டிருந்தார், என்றாலும் அவர் தீர்மானமாய் தைரியமாய் இயங்கிக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. குரலில் அத்தனை நிதானம். முன்னைவிட அதிகப் பொறுமை காட்டினார். ஆனால் மணல்மூட்டைகள் போடுவது பயனளிக்கவில்லை, போடப்போட வெள்ளம் அதை இழுத்துச் சென்று கொண்டிருந்தது. பிளவில் ஓரங்கள் மேலும் மேலும் விரிந்தபடி யிருந்தன, கரை உடைந்து விழுந்து கொண்டிருந்தது. மறுபக்கமிருந்து செயலாளர் ழாய், ஜின் அண்ணன் மற்றும் அவர் பரிவாரம், அவர்களும் மணல்மூட்டைகளைப் போட்டு மறுபக்கமிருந்து அடைக்கப் பார்த்தார்கள், அதுவும் நடக்கவில்லை.

ஜியாங் மௌனமாய்ப் பார்த்தபடி யிருந்தவர், கத்தினார். ''போதும்!'' ஐயா திரும்பி எங்களைப் பார்த்தார். ''இப்ப என்ன பண்ணலாம்... கம்பு கழி எதாவது...'' தாத்தா சொன்னார். ''ஆமாமா, அதுக்கு முன்னால் உடைப்பெடுத்த ஓரங்களை மேலும் உடையாமல் பலப்படுத்தணும்.'' ஐயா தலையாட்டினார். ''சரி நீங்க உத்தரவு போடுங்க.'' என் பக்கம் திரும்பினார் ஐயா. ''நம்ம பகுதிக்குத் தகவல் சொல்லிரு. பயப்படண்டாம், நாங்க உடைப்பச் சமாளிச்சிருவோம்னு சொல்லு.'' அவரது குரலில் உறுதி.

நான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு போய்த் தகவல் சொல்லிவிட்டு வருமுன் வேலை ஒரளவு ஒழுங்குக்குள் வந்திருந்தது. மக்கள் ரெண்டு பகுதியாக அணையின் மேல் வரிசையிட்டிருந்தார்கள். கம்பங்களையும், பாய்களையும், மணல்மூட்டைகளையும் கைமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஐந்து கம்பங்கள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன. இந்த ஓரத்திலிருந்து மத்தி வரை கம்பங்கள் நடப்பட்டு மணல்மூட்டை போட்டு முட்டு தரப் பட்டிருந்தன. கம்பங்களின் முழு உயரத்துக்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆறாவது கம்பம் நடப்படுகிற இடத்தில் பக்கத்திலேயே ஜியாங் மந்திரம்போல உற்சாகமான வார்த்தைகள் தந்து கொண்டிருந்தார். ''அப்பிடிப்போடு, ஆகா, நல்ல காரியம்... இன்னுங் கொஞ்சம்,. முடிஞ்சிட்டது...'' தியான் ஐயாவும் வேறு சிலரும் மணல்மூட்டைகளை முட்டுக் கொடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

உடைப்பின் மறு புறத்தில் இருந்து செயலாளர் ழாய் மேற்பார்வையில் அங்கிருந்து கம்பங்கள் எங்கள் பக்கத்துக்கு நடப்பட்டன. தடால் தடால் என்று கம்பத்தை அடிக்கிற சத்தம், உற்சாகக் குரல் எடுப்புகள், (தூக்கிக்குடு, வாங்கிக்குடு - இந்தா பிடி, எடுத்துக்கோ) இத்தோடு காற்றிரைச்சல் வேறு, சூழலே இறுக்கமாய் இருந்தது.

வேலை ஒழுங்காகப் போக, உடைப்பின் வாசல்அளவு மெல்லக் குறுகியது. காலை ஒரு மூணு மணிப்போல, வெறும் நாலு மீட்டர் அளவில்தான் உடைப்பு எனச் சுருங்கி விட்டது. அதையும் மூடிறலாம்னிருந்த போதுதான், திடீரென அலையுடன் வந்த பிரம்மாண்ட பெருக்கு கம்பங்களைப் பாதிபிடுங்கி உயர்த்திவிட்டு, ஜியாங்கையும் சில ஆட்களையும் வாரிச்சுருட்டி அடித்துப் போனது. முன்ஜாக்கிரதையாக இடுப்பில் கயிறு கட்டியிருந்தார்கள். அப்படியே மதகு மேலிருந்து அவர்களைத் தூக்கிக் கரை சேர்த்தார்கள்.

தாத்தா குளிரில் வெடவெடத்தார். முகம் வெளிறியிருந்தது. ''இதை அடைக்கேலாது'' என்றார் ஜியாங் ஐயாவிடம், ''என் சக்திக்கு மீறியிருக்கு இது.'' சுத்தியிருந்தவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது அவர் பேசியது. ''மக்கள்லாம் வீட்டுக்குப் போகட்டும், இன்னும் நேரங் கெடக்கு உடைப்பு பெரிசாகறதுக்கு...'' என தாத்தா வேண்டிக் கொண்டார். ''மத்த அணைகளைப் பாருங்க போயி, இல்லாட்டி அதுங்களும் புட்டுக்கும், மொத்த பிராந்தியமும் நாஸ்தி!'' எல்லாரும் நடுங்கிப் போனார்கள். மாத்தி மாத்தி அவர்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள், சிலர் வீட்டைப் பார்க்க ஓட ஆரம்பித்தார்கள். ''வேணாம், யாரும் போகக்கூடாது!'' என்று கத்தினார் ஐயா, கண்கள் ஜ்வலித்தன. எல்லாரும சிலிர்த்து அப்படியே நின்றார்கள். ஐயா புலிபோலத் திரும்பி ஜியாங்கைப் பார்த்தார். ''அந்த உடைப்பு அடைபட்டாகணும்!'' மறுபக்கம் பார்க்கக் கத்தினார். ''ழாய் அண்ணே, உங்காளுங்களைத் தயார் பண்ணுங்க. நாம தண்ணிக்குள்ள போறம்!...'' மறுபக்கம் ழாய் மெகாஃபோனில் உத்தரவிட்டார். ''கட்சியாட்கள், இளைஞரணி எல்லாத்திலும் யாருக்கெல்லாம் நீச்சல் தெரியுமோ முன்னாடி வாங்க, நாம தண்ணில இறங்கப் போறம்...''

மணல்மூட்கைளும் கம்பங்களுமாக மறுபக்கம் அவர்கள் தயாரானார்கள். ஐயா பேனாவும் நோட்டும் வைத்துவிட்டு அவரும் ஆயத்தமானார். ''ஐயா வேணாம்... கீல்வாதமும் அதுவுமா, உங்களால முடியாது...'' ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பொருட்களை என்னிடம் கொடுத்தார். பிறகு கூட்டத்தைப் பார்த்து கூக்குரலிட்டார். ''நீச்சல் தெரிஞ்சாளுகள் என்னோட வாங்க.'' கூட்டத்தில் சலசலப்பு. ''ஐயாவே தண்ணிக்குள்ளாற இறங்கறாரு..'' ஐந்தாறு நபர்கள் முதலில், பிறகு கொஞ்ச கொஞ்சமாய் ஆட்கள் திரண்டார்கள். பெரிய மனிதச் சங்கிலி அமைத்தார்கள். தியான் முதலில் குதித்தார். தண்ணீர் முதலில் அவர்கள் இடுப்பாழம், பிறகு மார்பாழம் உயர்ந்தது. சீற்றமான ஆறு உலுக்கி அசைத்தது அவர்களை. அசராமல் அவர்கள் உடைப்பு வழியே நடந்து போனார்கள். மறுபக்கமிருந்து ழாய் ஆட்கள் இப்படியே வந்தார்கள். மூணு முறை ழாயும், தியானும் கைகளைக் கோர்த்தாப் போல கிட்ட வந்து விலகிப் போனார்கள். அலை ஆளைப் புரட்டி விலக்கியது.

குத்திட்டு அணையில் உட்கார்ந்திருந்த ஜியாங் எழுந்து கொண்டபடி தன் பக்க ஆட்களிடம், ''போயி பெரிய தெலைபேசிக் கம்பம் ஒண்ணு கொண்டாங்க!'' என்று கத்தினார். கம்பத்தை வாங்கி உடைப்பின் குறுக்கே வீசி ''பிடிங்க பிடிங்க'' என்று கத்தினார். கம்பத்தைப் பிடித்தபடி நிதானப்பட்டு பிறகு ழாயும் ஐயாவும் கையைக் கோர்த்துக் கொண்டார்கள். உடைப்பின் பாதை முழுதுமாக ஒரு மனிதச் சங்கிலி. அதைப் பார்த்து அந்த வரிசைக்குப் பின்னால் ரெண்டாவது, மூன்றாவது சங்கிலி அமைக்க மக்கள் நீரில் குதித்தார்கள். இந்த அடைப்பை உடைக்கும் சக்தி காட்டாறுக்கு இல்லை.

அலை மேல் அலை வந்து மனிதச் சுவரில் மோதி உலுக்கியது. ஒரு பொங்கலில் எல்லாருமே காணாமல் போனார்கள், அலை விழும்போது அவர்கள் உருவம் தெரிந்தது. சகதிக்குழம்புக் குளியல். மூச்சடக்கி நிற்க வேண்டும். அடுத்த அலையறைக்குத் தயாராக வேண்டும்... அணைச்சுவரில் மேலே நாங்கள் பரபரப்பாய் இருந்தோம். ஜியாங் மேலும் கம்பங்களை நட உற்சாகப் படுத்திக் கொண்டிருந்தார். ஆளாளாய்க் கைமாற்றி மணல் மூட்டைகளை நாங்கள் தண்ணீருக்குள் அடுக்கினோம். இரக்கமற்ற பெருங் காற்றும் ஈரமான அலையடிப்பும் மனிதச் சுவரை ஆட்டியசைத்தன, என்றாலும் அவர்கள் யாரும் அசரவில்லை.

ஒரு மணிக்கூர் கடந்தது. மணல்மூட்டைகளை உயரஉயர அடுக்கி, கம்பங்களை நட்டு மெல்ல அந்த உடைப்புவாசல் குறைந்தது.  இப்போது கும்மிருட்டாகி விட்டது, குளிர் நடுக்கியெடுத்தது. கம்பளிக்கோட்டு போட்டிருந்தாலும் எனக்கே உதறியது. சனங்கள் அந்தத் தண்ணீரில் நிற்கிறார்கள்! குளிர்காற்றும் அலை மோதலுமாய் அவர்கள் பற்களைக் கிட்டித்தன. தியான் பாறை போல இருந்தார். கத்திக் கொண்டிருந்தார். ''அப்டியே நில்லுங்க, அப்ப்ப்படியே... நாம ஜெயிக்கிறோம்!'' மத்தாட்களுக்குச் சொல்கிறாரா, ஒருவேளை தனக்கே சொல்லிக்கிறாரா!

விடியல் வர, ஒருவழியாக உடைப்பு அடைப்பு என்றானது. வெள்ளத்தை நதிப்படுகையோடு மறித்திருந்தோம். தாத்தா ''மூடிட்டம்!'' என்று கத்த எல்லாரும் ஹோவென்று இரைச்சலிட்டார்கள். மெல்லத் தவழ்ந்து அணையில் ஏறி வந்தார்கள். கடுங்குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது, உச்சிமுதல் உள்ளங்கால் வரை பூசிய சேறு. என்றாலும் உற்சாகத்துக்குக் குறைவில்லை. எல்லாருக்கும் குளிராற்றிக் கொள்ள கணப்பு தயாராய் இருந்தது. கூட்டமாய் கணப்பைச் சுற்றிக் கொண்டார்கள்.

ஐயா மாத்திரம் தண்ணீரிலேயே இருந்தார். கண் மூடியிருந்தது. பல் கிட்டியிருந்தது. கைகள் தொலைபேசிக் கம்பத்தைப் பிடித்திருந்தன. மணல்மூட்டையின் மேல் அவரிடம் அசைவேயில்லை. பதறிப் போனேன். ''ஐயாவப் பாருங்க. யாராவது ஐயாவக் காப்பாத்துங்க!''

ழாயும், ஜியாங்கும் இன்னும் சிலரும் போய் ஐயாவை இழுத்துப் போட்டார்கள். நினைவே இல்லை ஐயாவுக்கு. கைகால்கள் விரைத்துக் கெட்டித்திருந்தன. மிக மெல்லிசாய் வந்தது மூச்சு. கண்காணிப்பு குடிலுக்கு அவரைத் தூக்கிப் போனோம். ழாய் ஒரு ஸ்ட்ரெட்சர் கொண்டுவரச் சொன்னார். ஊரில் இருந்து ஒரு காரும் வரவழைத்தார். ஐயாவின் நனைந்த உடைகளைக் களைந்தோம். தாத்தா கண்ணீர் சிந்தியபடி தன் ஜிப்பாவைக் கழற்றி ஐயாவுக்குப் போர்த்திவிட்டார். என் கம்பளிக் கோட்டை அவர் காலுக்குப் போர்த்தினேன். வெளியிலிருந்தும் மனுச மககள் உலர்ந்த உடைகளை அவருக்குப் போட்டார்கள். கூட்டமாய்க் கூடி விட்டார்கள் எல்லாரும் கவலையுடன்.

இளம் மருத்துவப்பெண் ரெண்டு ஊசிகள் போட்டாள். டர்பன்டைன் வைத்து அவர் கால்களை சூடுபறக்கத் தேய்த்தாள். முட்டிகள் செவேலென்று வீங்கிக் கிடந்தன. உள் ரத்தக் குழாய்கள் முடிச்சாய் வெளியே துருத்தித் தெரிந்தன. யாரோ இரண்டு கனமான போர்வைகளை ஊருக்குள் போய் எடுத்து வந்திருந்தார்கள். ஸ்ட்ரெட்சர் தயாராகி யிருந்தது. அந்த ஸ்ட்ரெட்சரைத் தூக்க என்று நிறையப் பேர் முன்வந்தார்கள். நாங்கள் கிளம்பியபோது மலையில் இருந்து சூரியன் எழுந்து கொண்டிருந்தான். காற்று அடங்கியிருந்தது. நதி சமத்தாய் ஓடிக் கொண்டிந்திருந்தது. எல்லாரும் நாங்கள் போவதையே உருக்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரெண்டாம் கிளையைத் தாண்டினோம். அங்கே கார் காத்திருந்தது. ஊர் ஆஸ்பத்திரிக்கு நேரே கூட்டிப் போனோம்...

ரெண்டு மாதம் கழித்து தியான் ஐயா வீடு திரும்பினார். திரும்ப அவரை வழியில்தான் நான் சந்தித்தேன். அதே ஐயா. தோள் உள்ளொடுங்கி, தலை தொங்கி, கை பின்னால் கட்டி, அதே சச்சக் சச்சக் தவக்கா நடை!

    

நன்றி அகநாழிகை இருமாத இதழ்

ஏப்ரல் 1959
ஆங்கிலத்தில் இன் இஷி


My First Superior
Ma Feng


மா ஃபெங் பிரச்சார பீரங்கி. கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாம் ராணுவப் படையில் பதினாறு வயதில் சேர்ந்து, கொள்கைப் பரப்பை ஏற்றுக் கொண்டவர். அவரது 'இப்பவே கல்யாணம்' சிறுகதைக்கு தேசியச்சிறுகதை பரிசு கிடைத்தது.

கனவுகளை வாரியிறைத்து ஒரு மிகை நவிற்சிக் கதை, என்றாலும் தேவையாய்த்தான் இருக்கிறது. சீன நீரமைப்புகளைப் பற்றிய கதை என்பது சுவாரஸ்யம். இந்தக் கதை நடந்தும் இருக்கலாம், என்றாலும் நேரடி அனுபவமாக அமையாததால், கதையில் இவரது கற்பனைச் சாயல், விவரப் போதாமை தெரிகிறது. யாரெல்லாம் என்னோடு தண்ணியில் குதிக்கிறீர்கள், என ஐயா கேட்டுவிட்டு ஆள் தலையை எண்ணாமல் குதித்து விடுகிறார், ஆள் பலம் தெரியாமல் இறங்கினால் ஆத்தோடு போக வேண்டியதுதான்... ஐயாவின் வீர தீர பராக்கிரமத்தைப் பாடுவதை கதையின் நோக்கம் என்று செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். வாதம் வந்தாள் ஒரு மைல் முன்னாலேயே ஜீப்பில் இருந்து இறங்கி அந்த மழைக் குளிரில் காற்றில் நதிப் படுகையில் கால் நனைய நடந்து அணையை அடைகிறார், இருக்கிற தெம்பை அங்கேபோய்ப் போராட என்று மிச்சம் வைத்துக் கொள்ள வேண்டாமா. அதேபோல ஊரே கலவரப்பட்டுக் கிடக்கிற போது ஜியாங் வீட்டில் யாராவது வந்து கூப்பிடட்டும் என்று காத்திருப்பாரா, என்பது கேள்வி. நம்மூர் ராம. நாராயணன் சினிமா போல, தண்ணியில் நின்னு மணல்மூட்டை போட்டு உடைப்பை அடைத்தவனுக்குத் தெரியாதா என்ன, ஜியாங் ''அடைச்சாச்சி!'' என்று அறிவிக்கிறார்!



Comments

Popular posts from this blog