29 01 2017 காலை 11 30 மணி
கவி வளநாடனின் ‘அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்’
நூல் அறிமுக விழா உரை


புலம் பெயரும் சொற்கள்
எஸ்.சங்கரநாராயணன்

வி வளநாடனின் இந்தச் சிறு நூல் இதயத்தோடு உறவாடும் விதத்தில் அவர் இதயத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கிறது. வட்டார வழக்குகள் இலக்கியம் ஆகுமா, என்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், இந்தப் பத்திகளை இலக்கியம் என்று உரசிப் பார்த்து உண்மை உரைப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
வட்டார வழக்குகள், சொற்களில் ஏற்றிய வட்டாரப் புழுதி. அந்த மண்ணின் நிறமும் மணமும் நமது உயிரோடு பின்னிப் பிணைந்தவை அல்லவா? ஒரு வட்டார வழக்கு உரையாடலில் அந்த வார்த்தைகளைப் பேசும் மனிதரின் ரசனை, ருசி மற்றும் வாழ்க்கை சார்ந்த அவனது கவனங்கள், அவனது வயது, ஊர்மண் சார்ந்த அவனது பிடிப்பு, என எத்தனையோ விஷயங்களை நாம் அவதானிக்க முடிகிறது. எல்லாருக்கும் பொத்தம் பொதுவான ஒரு மொழிஉரைநடையில் இது சாத்தியமே இல்லை. மொழி, அதைவிட வாழ்க்கை முக்கியம் நமக்கு. ஆகவே வாழ்க்கையை அதிகமாய் நமக்கு அதன் கதகதப்புடன் கைமாற்றி விடுகிறது வட்டார அடையாளங்களுடனான புழங்கு மொழி. நம் கட்டாயத் தேவை அது என்றே சொல்வேன்.
அந்த மொழியில் அதைப் பேசும்போதும் கேட்கும்போதும் அந்தப் பகுதிக்கே நாம் பயணிக்க வாய்க்கிறது. இந்த ருசி அறிந்தவராய் வளநாடன் இருக்கிறார். தம் பகுதி, தம் மக்கள் என்று அவர் இந்த நூலில் கொண்டாடுகிறார். மனிதனை விதந்தோத அவர் கற்பனைக்குத் தாவவில்லை. எங்கும் வெளியே தேடவில்லை. தம் மக்களை அவர் அப்படி நேசிக்கிறார். அவர்களை நமக்கு அறிமுகம் செய்விக்கத் துடிக்கிறார்.
ஆகவே இந்நூல். குவைத்தில் இருந்து தம் சாளரம் வழியே தனது மண்ணைப் பார்க்க முடிகிறது அவருக்கு.
அவர் ஊரின் ‘பாய்’ ஒருவர் ஓவியர். ஊரின் எந்தமத ஓவியங்களுக்கும் அவரைத்தான் நாடுவார்கள் என்று ஆரம்பிக்கிறது புத்தகம். சாதிகளைத் தாண்டி கலாச்சாரமும் ஒத்தது அறியும் மனப் போக்கும் சமரசங்களுடனான பிரியமும் வாழ்வை அழகாக்கி விடுகின்றன.
கிராமங்கள் அழிந்துபட, மனிதர்களும் தூர்ந்து போனார்கள் என்கிறார் வளநாடன். அதற்காக வருத்தப் படுகிறார். இறந்த காலம் பொற்காலம், நிகழ்காலம் அதுபோல் இல்லை, ஒருமாற்று குறைந்தது நிகழ்காலம், என்கிறாரா, என்றால் இல்லை. அந்த மக்களை நான் உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கிறேன்… என்கிறார். கால வழக்கில் அவர்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கிறார். ஊருக்கு ஒத்துமை பேசியவரின் மகன் வரப்பு விவகாரத்தில் கேஸ் போடுகிறான், என ஒரு இடத்தில் வருத்தப் படுகிறார்.
ஏன் அவருக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. வளநாடன் குவைத்க்காரர். அவ்வப்போது நம் மண் அழைக்க வந்து இங்கே உலவிவிட்டுப் போகிறார். தமிழ் மனம் அவருடையது. குவைத்தில் வாழ்ந்தாலும் அது இங்கேயே சுற்றி வருகிறது. தமது பால்யகால அனுபவங்களை, அவர் கண்ட காட்சிகளை, கோலங்களை எல்லாம் அசைபோட்டுப் பார்த்து மகிழ அவருக்கு வேண்டியிருக்கிறது. ஏ.சியில் அமர்ந்தபடி ஆலமரக் காற்றை யோசிக்கிற மனசு அவருடையது.
எளிய மனசு. இந்த நூலில் வரும் ஒவ்வொரு சம்பவமும் ஒற்றைப் பரிமாணம் கொண்டவை. அழகியல் சார்ந்தவை. ஆனால் அரசியல் சார்ந்தவை அல்ல. சாமானியனுக்கு அரசியல் தேவை இல்லை என்கிறாரா வளநாடன்? தெரியவில்லை.
அய்யனார் கோவில் அமைந்துள்ள நிலம் ஒருகாலத்தில் அபுபக்கருக்குச் சொந்தமாய் இருந்தது, என்பது ஒரு பத்தி. இந்த அபுபக்கர் தமிழ் பேசுகிற நபர். உருது அவருக்குத் தெரியாது. இவர்கள் ஒருகாலத்திய இந்துக்கள் என்பதும், பிறகு மதம் மாறினார்கள், என்பதும் என் கணிப்பு. இதுதான் இதன் பின்னுள்ள அரசியல்.
அப்படியும் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். ஜோரான விஷயங்கள் நமக்குக் கிடைக்கும்.
வாழ்க வளநாடன். வாய்ப்புக்கு நன்றி.
·       
91 97899 87842


Comments

  1. எந்த அரங்கில் நடந்த நிகழ்வு இது? மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் நிறைய முஸ்லிம் இளைஞர்கள் தமிழார்வம் கொண்டு இலக்கியப் பணியில் இடுபட்டு வருகிறார்கள். நாம் ஆதரவு கொடுக்கவேண்டியது அவசியம். வெவேறு கருத்துக்கள் ஒரு மொழிக்கு வரும்போதுதான் மொழி வளம் பெறுகிறது. - இராய் செல்லப்பா நியூ ஜெர்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog