இன்று 23 03 2017 காலமான திரு அசோகமித்திரனுக்கு அஞ்சலி. 1985 86 வாக்கில் குங்குமம் இதழில் அவர் எழுதிய கதை இது. என்ன அழுத்தமான பதிவு அல்லவா… இலங்கையில் நடந்ததாக ஒரு உண்மைக் கற்பனை இது…

விடுவிப்பு
அசோகமித்திரன்

 தவை மெதுவாகத்தான் ஆட்டினேன் என்றாலும் அந்த இரும்புக் கதவு எழுப்பிய உலோக ஒலி என் பற்களைக் கிட்டித்துப் போகும்படி செய்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனியாதிக்கக் காரர்கள் ஊருக்கு வெளியில் கவர்னர் மாளிகைகள் கட்டும் அதே அக்கறையோடு ஊருக்கு வெளியில் சிறைச்சாலைகளும் கட்டினார்கள். வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஹேஸ்டிங்ஸிலிருந்து நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஒரு கைதி தப்பியோடி விடுவான். உலக யுத்தம் முடிந்த கையோடு வெள்ளைக்காரர்கள் ஆட்சி போய் விட்டது. இப்போது ஹேஸ்டிங்ஸ் சிறையில் இருப்பவர்கள் அநேகமாக எல்லாருமே அரசியல் கைதிகள். தமிழர்கள். எது பாதுகாப்பு - சிறையிலிருப்பதா வெளியிலிருப்பதா என்பது எங்களுக் குள்ளதோர் சந்தேகம்.
ஒரு காவலாளி வந்தான். என் இடதுகை இன்னமும் கதவின் கம்பியைப் பிடித்தவண்ணம் இருந்தது. நொடிப் பொழுதில் கையி லிருந்த தடியால் ஓங்கி அடித்தான். பொறுக்க முடியாத வலியால் என் கண் விழிகள் மேலிழுத்துப் போயின.
"என்னடா?" என்று அவன் மொழியில் கேட்டான்.
என் கையை அவன் மீது உதறினேன். விரல்களிலிருந்து பெருகிய ரத்தம் அவன் முகம், உடுப்பு மீதெல்லாம் சிதறியது. அவன் கழியை மீண்டும் ஓங்க நான் பின்னால் நகர்ந்து கொண்டேன். கழி கதவுக் கம்பிகள் மீது விழுந்தது.
"என்னடா வேண்டும்?" என்று அவன் மீண்டும் கேட்டான்.
ரத்தம் சொட்டும் விரல்களை இன்னொரு கையால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு "சேம்பர் பாட் நிரம்பிவிட்டது" என்று அவன் மொழியிலேயே சொன்னேன்.
"காலையிலேயே கொட்டுவதற்கென்ன?"
"கொட்டினேன். எனக்கு வயிற்றுக் கடுப்பு."
"தமிழ் நாய்களுக்குத் தீனி அதிகமாகி விட்டது."
நான் பேசாமல் நின்றேன். என் விரல்களின் வலி மயக்கமே விளைவித்து விடும் போலிருந்தது. ஆனால் நான் எப்படியும் வெளியே போயாக வேண்டும்.
குரோதம் தெரியும் முகத்துடன் அவன் சாவி எடுத்து வந்து அறைக் கதவைத் திறந்தான். குறுக்கும் நெடுக்குமான காரிடார்கள், சிறையை இருபது பகுதிகளாகப் பிரித்தன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கொத்துச் சாவி. என் அறைச் சாவியோடு இன்னும் இருபது இருபத்தைந்து சாவிகள் இருக்கும்.
நான் மலஜலப் பானையை என் இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு போக அவன் பின் தொடர்ந்தான். விரல்களிலிருந்து ரத்தம் பானை மீது வழிந்து பிறகு தரையில் சொட்டியது. என் வரிசையில் கடைசி அறையில் குணசேகரன் இருந்தான். அவனைக் கடக்கும்போது நான் தலையை ஒருபுறமாக அசைத்தேன். அவனுக்குப் புரிந்திருக்கும்.
மலக்குழி ஒரு கிணறு போல வெளி வேலிக்குப் பக்கத்தில் இருந்தது. தினமும் காலையில் கைதிகளைத் திறந்து விடும்போது பானைகளை அக்கிணற்றில்தான் காலி செய்துவிட்டு வரவேண்டும். கிணற்றின் பக்கத்திலேயே ஒரு காவல் கூண்டு இருந்தது. அருவருப்பு காரணமாக அங்கே காவலாளி எவனும் இருக்கமாட்டான். நான் கிணற்றை நெருங்கும்போது கூண்டருகில் புதிதாக ஒரு கல் இருப்பதைப் பார்த்தேன். பானையைக் கிணற்றில் கவிழ்த்தேன். திடீரென்று வயிற்றுவலி கண்டது போலக் கீழே உட்கார்ந்தேன். என் ஒரு கை கல்மீது இருந்தது.
கழியை ஓங்கியபடியே, "என்னடா?" என்று அவன் நெருங்கி வந்தான்.
"ஒன்றுமில்லை, வயிற்றுவலிதான்," என்று சொல்லியபடி பானையைத் தூக்கிக்கொன்டு என் அறை நோக்கி விரைந்தேன். அவன் அறையைப் பூட்டி விட்டுச் சென்ற பிறகு நான் கையில் கசக்கி வைத்திருந்த காகித உருண்டையைப் பிரித்துப் பார்த்தேன். தமிழ் எழுத்துக்களை குழந்தைகள் எழுதுவது போலத் திருப்பி எழுதியிருந்தது. நடுநடுவில் சில ஆங்கில எழுத்துக்களும் இருந்தன.
அடுத்த நாள் காலை எங்கள் பானைகளைத் தூக்கிக்கொண்டு போகும்போது குணசேகனிடம், "இன்று" என்றேன்.
"எப்போது?"
"எட்டு மணிக்கு மேல் இரவில்."
"என்ன செய்ய வேண்டும்?"
"ஒன்றும் செய்ய வேண்டாம். முடிந்தால் காவல்காரர்கள் அனைவரையும் சிறையுள்ளேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்."
நாங்கள் கிணற்றை அடைவதற்குள் சிறையில் இருந்த அறுபத்திரண்டு தமிழ்க் கைதிகளுக்கும் செய்தி போய்விட்டது.
பிற்பகலிலிருந்தே எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. அன்றிரவு நிகழப்போவது இருமுறை முயற்சி செய்யப்பட்டுத் தோல்வி அடைந்திருக்கிறது. முதன் முறை முப்பது உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. அதில் பன்னிரண்டு பேர் சித்திரவதையின் போது இறந்து போனார்கள். இரண்டாம் முறை ஏதோ ஒருவன் மட்டும் தப்பிக்க முயற்சி செய்தது போலத் தோற்றம் தர முடிந்தது. அவன் காலால் உதைக்கப்பட்டே இறந்தான். இம்முறை சிறை முழுவதும் காலியாவதற்கு முயற்சிஞ் எவ்வகையிலாவது...
என் விரல்கள் வீங்கியிருந்தன. இடது கை ஒருவனுக்கு எவ்வளவு தேவை என்பது அக்கையைப் பயன்படுத்த முடியாமல் போகும்போதுதான் பூரணமாகத் தெரிகிறது. ஓரிரவு எப்படியோ கழித்துவிட்டேன். இன்றிரவு வலியைத் தாங்க முடியுமா? எட்டு மணிக்கு எங்களை விடுவிக்க எங்கள் போராளிகள் வந்து விட்டால் வலியைப் பொருட்படுத்த முடியாது. அதே நேரத்தில் கையையும் பயன்படுத்த முடியாது.
நான் துவண்டு விழுந்து கிடந்தேன். என் மனம் என்ன நினைக்கிறது. என்ன உணருகிறது என்பதுகூட என் சோர்வில் எனக்குப் புலப்படவில்லை. இந்த நிலையிலும் எங்கிருந்தோ ஓர் அசாதாரண ஒலி மிக இலேசாகக் கேட்கத் தொடங்கியிருந்தது. என் மனச்சோர்வு ஏற்படுத்தும் கோளாறு என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அது நெருங்கி வருவதும் அதிகரித்து வருவதும் என்னை எழுந்து உட்கார்ந்து கவனமாகக் கேட்க வைத்தது. நூறு இருநூறு பேர்கூட இருக்கும் என்று தோன்றியது. பயங்கரமாகக் கோஷமிட்டுக்கொண்டு வருகிறார்கள். போராளிகள்தான். எட்டு மணிக்கு மேல் வருவதாகச் சொன்னார்கள். இதோ இப்போது இருட்டக்கூட இல்லை.... வருபவர்கள் இப்படிப் பகிரங்கமாகவா வருவார்கள்?
நான் எழுந்து கதவருகே நின்றேன். இதர கைதிகளும் கதவருகே நிற்கிறார்கள் என்பது பல்லைக் கிட்டிக்க வைக்கும் உலோக ஒலியிலிருந்து தெரிகிறது. எல்லாரும் கதவுகளைப் பலமாக ஆட்டுகிறார்கள். காவலாளிகளைக் குழப்புவதற்காக.
காவலாளி ஒருவன்கூட கண்ணில் தென்படவில்லை. ஆனால் எந்த நேரமும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்துகொண்டு எவ்வளவுதான் உடல் நோகத் துடித்திருக்கிறேன்? இன்று இறுதியாகத் துடிக்க வேண்டியிருக்கும். நான் தப்பித்துப் போவேனா இங்கேயே விழுந்து மடிவேனோ?
வந்துவிட்டது. தாக்குதல் வந்துவிட்டது. இரவு எட்டு மணி வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் ஒரு காவலாளியையும் காணவில்லை. எல்லாரும் ஓடிவிட்டார்கள் போலிருக்கிறது. நல்லதுதான். நல்லதுதானா? இந்த இரைச்சல், கோஷம் எல்லாம் தமிழ் இல்லை போலிருக்கிறதே?
இன்னும் சில விநாடிகளில்ஞ் ஐயமறத் தெரிந்துவிட்டது. அப்போது வந்திருப்பது தமிழ்க் கூட்டமே அல்ல. மாறாகஞ் தமிழர்களை வதைக்கும் கூட்டம். காவலாளிகள் கண்ணில் தென்படாது போனதற்கு இப்போது காரணம் தெரிகிறது. இந்தக் கொலைகாரக் கும்பலுக்கு முழுச் சுதந்திரமும் தருவதற்குத்தான் அவர்கள் விலகிவிட்டார்கள்.
அந்தக் கொலை வெறியர்கள் ஓவென்று கூச்சலிட்டுக்கொண்டு சிறைச்சாலைக்குள் புகுந்துவிட்டார்கள். சிறையின் காரிடார்களில் ஓடிவருகிறார்கள். கழிகளாலும் அரிவாள் போன்ற ஆயுதங்களாலும் சிறைக்கதவுகளைத் தாக்குகிறார்கள். இதுவரை சாவிகள் சிக்க வில்லை என்பது இவர்கள் கதவுகளை அடித்துக் கொண்டிருப்பதிலிருந்து தெரிகிறது. நான் கதவுக்கு நேர் எதிர்முனையில் பதுங்கிக் கொள்கிறேன். என்னைப் போன்றுதான் இதர தமிழ்க் கைதிகள் பதுங்கிக் கொண்டிருப்பார்கள். போலீசுடனோ ராணுவத்துடனோ நேரிடையாக மோதி இறப்பது இந்தக் கிலியை ஏற்படுத்துவதில்லை. வெறிபிடித்து அலைபவர்கள் கையில் சிக்கிக்கொள்வது வயிற்றைக் கலக்குகிறது. நிச்சயம் அனைவருடைய முகங்களும் பேயடித்தது போலிருக்கும்.
கொலை வெறியர்கள் கூச்சலிலேயே ஒரு புதுக் கூச்சல். சிறையின் ஏதோ ஒரு பிரிவின் சாவிகள் கூட்டத்தினரிடம் கிடைத்துவிட்டன!
என்னால் அந்த அலறல்களை வர்ணிக்க முடியாது. சித்திரவதையின் போது அலறல்கள் உண்டு. அங்கு வலி தாங்காமல் அலறலே தவிர வாழ்வின் இறுதிக்கு விரட்டப்பட்ட அலறல் அல்ல. ஆனால் இங்கு சாவு அலறல்கள். ஒவ்வொரு அடியிலும், வெட்டிலும் இந்த அலறல் அமானுஷ்யமாகப் பீறிடுகிறது. கசாப்புத் தொழிற்சாலையில் வெட்டப்படும் பன்றிகளும், ஆடுகளும், மாடுகளும் இப்படித்தான் அலறும். மனிதனை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவது அவனுடைய சாவை ஒரு விலங்கினுடையது போல அவனே உணர வைப்பது.
என் அறைக் கதவை யார் யாரோ இடிக்கிறார்கள். ஆனால் சாவி கிடைக்கவில்லை. வந்தவர்களுக்குச் சிறையைச் சேதப்படுத்து வது நோக்கமில்லை. கடப்பாரை கொண்டு ஓங்கி அடித்தால் எப்படிப்பட்ட பூட்டும் திறந்து கொள்ளும்.
சிறையில் அலறல்கள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. மேலும் மேலும் அறைகள் திறக்கப்பட்டு கைதிகளின் தலைகள் சிதற அடிக்கப்படுகிறது. சந்தேகமேயற ஒழித்துவிட வேண்டும் என்று திருப்பித் திருப்பி அடிக்கிறார்கள். ஆயுதங்கள் சதையைக் குத்திப் பிய்த்து எடுப்பது சொத்-சொத்தென்று கேட்கிறது.
என் சுவாசம் இயங்கிக் கொண்டிருக்கிறதே தவிர என் மனம் என்னை விட்டுக் கழன்று போய்விட்டது. கிலி என்பது நெஞ்சுக்குள் என்று மட்டுமல்ல, என் உடல் முழுவதுமே மரண பயத்தில் கொப்புளம் கொப்புளமாகக் கிளம்பியிருக்கிறது. என் கண்கள் ஒரு கணத்தில் தலைக்குள்ளே இழுக்கப்படுகின்றன. மறு கணம் வெடித்து விடுவது போல வெளியே பிதுங்குகின்றன. என் தொண்டை ஏதேதோ சப்தங்களை எழுப்புகிறது.
நான் குந்தியிருக்கும் கால்கள் பற்றி எரிவது போலிருக்கிறது. அதே நேரத்தில் அவை நனைகின்றன. சித்திரவதையின் போது மலஜலம் கழிவது சாதாரணமல்ல. இப்போது அப்படி ஏதாவது நிகழ்ந்து விட்டதா?
ஆனால் கால்கள் தரையில் ஒட்டிக்கொள்கின்றன. சேற்றில் கால் வைத்தது போலிருக்கிறது.
திடீரென்று எனக்குப் புலப்பட்டு விட்டது. அது மனித இரத்தம். காரிடாரில் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவது அறைகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. மாலை இருட்டில் என்னுடைய பீதி கண்ட நிலையில் இது தெரியவில்லை.
நான் காலைத் தூக்கி வேறு இடத்தில் வைத்து உட்காருகிறேன். எரிமலைக் குழம்புபோல இரத்தம் சிறையெல்லாம் பரவுகிறது. சேறாகக் கலங்கி இறுகிக் கொண்டிருக்கும் இரத்தம் கொலையாளிகள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருக்கும் போது வாரி யிறைக்கிறது. என் முகம், உடலெல்லாம் சாந்தாக மாறும் இரத்தத்தின் கறைகள். இதில் எவ்வளவு பேருடைய இரத்தம் கலந்திருக்கும்? பத்து, இருபது, முப்பது...? இதில் என் இரத்தமும் கலந்துவிடும் நேரம் அதிக இடைவெளியில் இல்லை. இன்னும் என் அறையின் சரியான சாவி கிடைக்கவில்லை. கிடைத்துவிடும். கிடைத்துவிடும். எனக்கும் இந்த நரகக் குட்டையிலிருந்து விடுதலை கிடைத்துவிடும்.
இப்போது திடீரென்று துப்பாக்கிச் சத்தம். இயந்திரத் துப்பாக்கி நாலைந்து திசைகளிலிருந்து கேட்கிறது. காரிடாரில் உள்ள கொலைகாரர்கள் குழம்பி நிற்கிறார்கள். இது காவலாளிகளாக இருக்குமா? இந்தத் திருப்பம் அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை என்று தெரிகிறது.
துப்பாக்கி வெடி தாறுமாறாக வருகிறது. கொலையாளிகள் ஓடுகிறார்கள். இப்பொது கொலையாளிகளிடையே மரண பயம். ஓடுபவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஓடுகிறார்கள். சிறையைச் சுற்றிலுமிருந்து இயந்திரத் துப்பாக்கி ஒலி. ஆதலால் சிறையில் நாற்புறத்திலிருந்தும் தாக்குதல். கொலைகாரர்கள் முதலில் ஒரு திசையில் ஓடியவர்கள் இப்போது தடதடவென்று அங்கிருந்து அதற்கு எதிர்த்திசையில் ஓடுகிறார்கள். இப்போது நான் கதவருகே நிற்கிறேன். போகிற போக்கில் என்னை தீர்த்து விட்டுப் போகலாம். ஆனால் அந்தக் கணத்தில் அவர்கள் கவனமெல்லாம் அவர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதில் இருக்கிறது.
இயந்திரத் துப்பாக்கியின் தோட்டாக்கள் காரிடாரில் சரமாரியாகப் பாய்கின்றன. சுவர்களில் மோதி எதிர்த்திசையில் தெறிக்கின்றன. நான் சிறைக்குள் மீண்டும் பதுங்குகிறேன்.
இப்போது மரண ஓலங்கள் வேற்று மொழியில் கேட்கின்றன. மரண ஓலங்கள் எம்மொழியில் இருந்தாலும் ஒரே மாதிரிதான் குடல் பிரண்டு மனதைச் செயலற்றுப் போகச் செய்கின்றன. உயிர் உடலோடு இவ்வளவு இறுகப் பிணைக்கப்பட்டதா? உயிர் உடலை விட்டுப் பிரியாமல் இருக்க எவ்வளவு தன் மன்றாடுகிறது!
சிறையில் திடீரென்று வெளிச்சம். இப்போதுதான் விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. இந்த விளக்கு வந்த பிறகு தான் நான் இவ்வளவு நேரம் இருட்டில் இருந்து கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது. இருட்டாக இருந்த நேரத்திலும் கண் எல்லாவற்றையும் பார்க்க முடிந்திருக்கிறது. செவி தெரிவித்த செய்திகள் ஏதும் பொய்யாகப் போகவில்லை.
டஜன் கணக்கில் வந்து கைதிகளை வெட்டிச் சாய்த்தவர்களை ஆறே ஆறு போராளிகள்தான் சுட்டுச் சாய்த்திருக்கிறார்கள். சிறைக் காவலாளியிடம் துப்பாக்கிகள் உன்டு. அவர்கள் இருந்திருந்து சிறையைப் பாதுகாக்கத் திருப்பிப் போராடியிருந்தால் இவ்வளவு எளிதில் சிறையுள் பிரவேசித்திருக்க முடியாது. ஒரு போராளி என்னைத் தேடிக் கண்டு பிடித்து என் சிறைக்கதவின் பூட்டைத் துப்பாக்கியால் சுட்டான். கதவு திறந்து கொண்டது. அவன் என்னை அணைத்துக் கொள்ள நான் அறைக்கு வெளியே வந்தேன்.
காரிடாரில் ரத்தச் சேற்றில் ஏராளமான மனிதப் பாதங்களின் அடையாளங்கள். தரையெல்லாம் கை கால்கள் துண்டாடப் பட்டுச் சிதறிக் கிடந்தன. தனியாக ஒரே ஒரு விழி உருண்டு கிடந்தது. சதைத் துண்டுகள் தரையிலும் சுவரிலும் ஒட்டிக் கொண்டிருந்தன. கைதிகளின் உடைகள் இரத்தப் பெருக்கில் உடல் களோடு பிரிக்க முடியாதபடி, பல உடல்களில் துண்டான கைகால்களை தாங்கியபடி இருந்தன. வயிறு மற்றும் தலை பிளக்கப்பட்டு மூளைகளும் குடல்களும் ஏராளமான பாம்புகளைத் தோலுரித்துக் குவித்தது போலிருந்தது. பச்சை மனித மாமிச வாசனை, அப்போதே பெருகிய இரத்தத்தின் வாசனை, இவற்றோடு மலமூத்திர வாசனை. கீழே கால் வைக்க முடியாதபடி மனித உறுப்புகளும் இரத்தமும். என் கால்கள் இரத்தத்தை வாரி யிறைக்க நான் ஒவ்வொரு அறையாக ஓடினேன். ஒரு அறையிலும் ஓருடலும் முழுமையாக இல்லை. ஓரிடத்தில் கொலையாளி ஓங்கிக் குத்திய கடப்பாரை அக்கைதியைத் துளைத்துச் சென்று பூமியில் பாய்ந்து சென்றிருந்தது. அதை அந்த வெறியன் மீண்டும் வெளியே எடுக்க இயலவில்லை. குணசேகரன் அறையில் திரும்பத் திரும்பக் குத்தப்பட்ட முண்டம்தான் இருந்தது. அவன் குத்தப்பட்ட பல முறைகளில் அவன் அணிந்திருந்த துணியும் அந்த மொண்ணையான இரும்புக் கம்பியுடன் உடலுக்குள் நுழைந்திருந்தது. மூளை அறையில் ஒரு மூலையில் பரவிக் கிடந்தது.
நான் காரிடார் காரிடாராக ஓடினேன். ஒவ்வொரு அறையிலும் என் தோழர்கள் உருத்தெரியாதபடி சிதைக்கப் பட்டிருந்தார்கள். மரணம் புராண கால யுத்த களங்களில் கூட இவ்வளவு பயங்கரமாகத் தலைவிரித்தாடி யிருக்க முடியாது.
என் வயிறெல்லாம் வாய்க்குச் சுழற்றிக்கொண்டு வர நான் தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
இயந்திரத் துப்பாக்கியோடு வந்தவர்கள் என்னை அழைத்துச் செல்லத் தூக்கினார்கள். "யாராவது மீதமுண்டா?" என்று கேட்டேன்.
இல்லையென்று ஒருவன் வருத்தத்தோடு தலையை ஆட்டினான். "நான் மட்டும் எதற்கு? நான் மட்டும் எதற்கு?" என்று முணுமுணுத்தேன். என்னை அணைத்துப் பிடித்தவன், என் எண்ணத்தை அறிந்தவன் போல அவனுடைய கைத் துப்பாக்கியை என் கைக்கு எட்டாதபடி வைத்துக் கொண்டான்...

Comments

  1. அசோகமித்திரன் மரணத்தால் துக்கம் அனுஷ்டிக்கும் வேளையில், அதைவிடக் கொடிய துக்கத்தை அனுபவிக்க வைத்துவிட்டீர்களே! இலங்கைச் சிறையில் இன்னும் என்னவெல்லாம் நடந்ததோ! கதையாகப் படிக்கும்போதே இவ்வளவு கொடூரமாக இருக்கிறதே, அனுபவித்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்? அசோகமித்திரன் கதை ஆற்றலுக்கு மிகச் சிறந்த உதாரணம் இக்கதை. நன்றி.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog